இன்னும் கொஞ்ச நேரத்தில் +2 ரிசல்ட் வரும்
இன்னும் கொஞ்ச நேரத்தில் +2 ரிசல்ட் வரும், அதன் பின் இரு நாட்களுக்கு ஊடகபக்கம் செல்ல முடியாது, எந்த ஊழலும் , எந்த அறிவிப்புக்களையும் அரசியல் கட்சிகள் செய்யலாம் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்
எல்லோர் கண்களும் அந்த மாணவர்களின் செய்திகளின் மேல் இருக்கும். அவர்களும் பெரும் சாதனை படைக்கபோவதாக சொல்வார்கள், அதனை கூட பொறுத்துகொள்ளலாம் அவர்களின் பெற்றோர் இச்சாதனைக்காக செய்த தியாகங்களை பட்டியலிடுவார்கள்,
மாணவ மாணவியரின் இண்டர்வியூ பெற்றோர், பள்ளி, ஆசிரியர்கள் என தொடர்ந்து செல்லும் சென்றுகொண்டே இருக்கும்
இப்படி பெரும் சாதனை மாணவர்கள் அடுத்த 4 வருடங்களில் என்ன ஆனார்கள்? அவர்கள் சொன்னதை செய்தார்களா? என்றெல்லாம் நாம் கேட்க கூடாது இத்தோடு விட்டுவிட வேண்டும்
ஊடகங்கள் இப்படி கிளம்ப யார் காரணம்? நிச்சயம் பள்ளிகள். அவற்றிற்கான விளம்பரம் இன்னபிற
இப்பொழுதெல்லாம் பள்ளி வாசலில் மட்டுமல்ல நகரின் எல்லா இடங்கள், பத்திர்கையின் எல்லா பக்கங்களிலும் அந்த மாணவ முகங்களும் பள்ளியும் தான்வரும்
எல்லாம் விளம்பரம்,
இன்னும் கொஞ்ச நேரத்தில் கொடுக்கபடும் அலப்பறைகள் தான், அடுத்து வரும் மாணவர்களுக்கான நெருக்கடி, குடும்பம் முதல் பள்ளிவரை இதனை சொல்லியே அவர்களை மனதால் கொல்வார்கள்
இவ்வளவு பெரும் பிம்பம் , நிச்சயம் வருங்கால மாணவர்களுக்கான நெருக்கடி, அவசியமான கல்வி முறையினை அதன் தேர்ச்சியினை உலக ஒலிம்பிக் போட்டிக்கு நிகராக கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள்
என்ன முதலிடம்? என்ன பெருமை? ஒன்றுமில்லை. +2வில் சாதித்தவர்கள் தான் கல்வியில் சாதித்தார்கள் என்பதெல்லாம் வெற்று பிம்பம், வீணான கற்பனை
அம்பேத்கர், அப்துல் கலாம், சுஜாதா மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்கள் எல்லாம் இப்படி விளம்பரபடுத்தியா வெற்றிபெற்றார்கள்?
வெற்றிபெற முயற்சியுள்ளவன், அதற்கான தேடலில் இருப்பவனுக்கு வெற்றி எப்பொழுதும் காத்திருக்கும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும்பொழுது அது அவனை தழுவிகொள்ளும்
உழைப்பே முக்கியம், தேடலே முக்கியம் மாறாக +2 எனும் தேர்வு அறிவிப்பு நாளில் வரும் சில விஷயங்கள் அல்ல
இந்த பெரும் அட்டகாசம் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மிக அதிகம், வேறு எந்த நாட்டிலும் இந்த அழிச்சாட்டியம் இல்லை
அவர்களும் கல்வியில் நம்மை விட பெரும் சாதனை பல மடங்கு பெரும் சாதனை படைத்துகொண்டிருக்கின்றார்கள்
இம்மாதிரி கல்வி தேர்வு முடிவு வரும்பொழுது முதலிடம் பெற்றவர்களை நாம் கவனிப்பதில்லை, அதில் என்ன பெரும் அதிசயம் இருந்துவிட போகின்றது?
ஆனால் இந்த தேர்வில் தோல்வி என்றவுடன் சில தற்கொலை செய்திகள் வரும் அதுதான் மனதை பாதிக்கும், இம்முறை அப்படி ஏதும் நிகழ்ந்து கூடாது என்பதுதான் பிரார்த்தனை
படி, அதுவே பணம் சம்பாதிக்கும் ஒற்றை வழி என மாணவர்களுக்கு சொல்லபடும் மூளை சலவையே இவை எல்லாவற்றிற்கும் காரணம்
ஆக தோல்வியுற்ற மாணவர்களே கலங்க வேண்டாம், தோல்வியுற்று பின் படித்து உயர்ந்தோர் உண்டு, படிப்பில்லை எனினும் தொழிலால் உயர்ந்தவர் உண்டு
இன்றைய தமிழக நிலையில் சினிமா, தொழில் இன்னபிற விஷயங்களில் உச்சத்தில் இருப்பவர் யாரும் +2 பக்கம் வந்தவர்களே அல்ல
அவ்வளவு ஏன் கல்வி தந்தை என +2 அளவில் மாணவர்களை மாநில ரேங்கில் உருவாக்கி பரிசு கொடுப்பவர்களே 10ம் வகுப்பு தாண்டவில்லை
ஆக வாழ ஆயிரம் வழி உண்டு, வழியா இல்லை உலகில்
ஒன்றும் செட் ஆகவில்லையா? அரசியலுக்கு வாருங்கள் அவ்வளவுதான்,மாநில முதல் மதிப்பெண் வாங்கியவன் உங்கள் சொத்துக்களை கணக்கெடுக்கும் வருமான வரி அதிகாரியாக, வங்கி அதிகாரியாக அல்லது ஏதோ ஒரு உருவில் உங்கள் முன் கைகட்டி நிற்கலாம்
அப்பொழுது கதற, கதற பழிவாங்கலாம்., அவ்வளவுதான் விஷயம்
உதாரணம் வேண்டுமா? கலைஞர் கருணாநிதியினையே 6ம் வகுப்பு பெயில் என சொன்ன கல்வி உலகம் இது, அவர் எட்டாத உயரமா? இன்னொருவன் எட்டிவிட முடியுமா?
இத்தனை ஆயிரம் பொறியியல் கல்லூரி உள்ள தமிழகத்தில் ஒரு ஜிடி நாயுடுவினை உருவாக்கிவிட்டோமா? இல்லை அல்லவா?
ஆக கல்வி முறையில்தான் கோளாறே தவிர, மாணவர்கள் மீது அல்ல
இந்த மாதிரி அதீத விளம்பர நிகழ்வுகளால் மனதால் பாதிக்கபடும் மாணவர்களுக்கு எப்படி உதவலாம் என “குஷ்பூ காக்கும் கரங்கள்” அமைப்பு தீவிரமாக சிந்தித்து கொண்டிருக்கின்றது