கலைஞர் என்பது பெரும் நதி, அதுவும் பல கிளைகளாக ஓடிய நதி
கலைஞருக்கு முன் ஜூன் 3ம் நாள் அவ்வளவு விஷேசமில்லை, கலைஞருக்கு பின் அது கவனிக்கபடாமல் செல்ல போவதுமில்லை
அந்த மனிதர் ஓய்ந்துவிட்டார், காலம் அவருக்கு உழைக்க கொடுத்த வாய்ப்பு முடிந்து இப்பொழுது ஓய்விற்கு கட்டளையிட்டிருக்கின்றது
வருடாவருடம் ஜூன்3ல் வந்து தொண்டர்களை கை கூப்பி சந்திக்கும் அவர் இம்முறை வரமாட்டார், அவர் தொண்டர்கள் அவருக்கு விழா நடத்துவார்கள், நடத்தட்டும்
அது வைர விழாவோ, வைடூரிய விழாவோ அவர்கள் கட்சி அவர்கள் நடத்தட்டும், இனி வருடாவருடம் நடத்தபோகும் விழாக்கள் இப்படித்தான் இருக்கும்
கலைஞர் என்பது பெரும் நதி, அதுவும் பல கிளைகளாக ஓடிய நதி
அதனை தடுக்க முயன்றவர்கள் கூட தலைதெறிக்க ஓடினார்களே அன்றி அதனை அடக்க முடியவில்லை
அதனால் பலன் பெற்றோர் ஏராளம், அதன் கரை மரமாக,அந்நதி மீனாக , நதிகரை வயலாக
அதில் ஓடமிட்டு மகிழ்ந்ததாக அந்நதியால் 80 ஆண்டுகாலம் எத்தனையோ கோடிபேர் பலனடைந்தார்கள்
நாம் அந்த நதியின் ஓட்டத்தை கரையிலிருந்து ரசித்த வகை, சில துளிகளை எடுத்து முகத்தில் தெளித்து ஆனந்தபட்ட வகை
அப்படித்தான் அவரின் பிறந்தநாளிலும் யோசிக்க தோன்றும்
மிக சுவாரஸ்யமான மனிதர் அவர், அப்படிபட்டவர்கள் எல்லாம் இங்கு அரசியல் செய்தார்கள் என பின்னொரு நாளில் சிரிப்பும் கண்ணீருமாக வரலாறு அவரை நினைவு கூறும்
இப்படியும் ஒரு மனிதனால் உழைக்க, உயர முடியுமா? இப்படி எல்லாம் ஒரு மனிதன் சிந்திப்பானா? இவ்வளவு வலி,துரோகம், சிக்கல் எல்லாவற்றையும் தாண்டி ஒரு மனிதனால் இயங்கமுடியுமா? என பின்னாளில் வரும் சந்ததிக்கு நம்ப வைக்கத்தான் வேண்டும்,
அவ்வளவு ஆச்சரியமானது அவரின் வாழ்வு
அவரின் பிறந்த நாளில் ஒன்றை உறுதியாக சொல்லமுடியும், அவரை நீங்கள் கவனித்திருந்தால் ஒன்றை புரிந்துகொள்ளலாம்
அவரின் இதயதுடிப்பு தமிழில் இருந்தாலும் உயிர் என்பது கட்சியில் இருந்தது
பெரியார் வெறும் கருப்புகொடி பிடித்தபொழுது, அதில் சொந்த ரத்தத்தால் பொட்டு இட்டு அது சமூகத்திற்கு புதுரத்தம் பாய்ச்சும் இயக்கம் என சொல்லாமல் சொன்னார் கலைஞர்
உடன்பிறப்பே, ஒரே ரத்தமே என்றகோஷம் அங்குதான் உருவானது
பின் அக்கட்சிக்காக, அது திமுகவாக உருவாகி இன்றளவும் நிற்கும் கட்சி அது, கட்சி நடத்துவது அதுவும் தோல்விகாலங்களில் கட்சி நடத்துவது சாதரண விஷயம் அல்ல
வைகோ, விஜயகாந்த் என ஏகபட்ட உதாரணம் உண்டு
ஆனால் கலைஞர் அந்த வித்தையினை காட்டினார், பெரும் புயல்களுக்கும் அது விழுந்துவிடாமல் காத்தார், எத்தனையோ இடிகளை, கோடாரிகளை, புல்டோசர்களை காலம் கொண்டு வந்தாலும் கலைஞரின் ஆற்றலால் அது நின்றது, நிற்கின்றது
எப்படி சாத்தியமாயிற்று என்றால், அடிக்கடி கலைஞர் அண்ணா அண்ணா என அழைத்தது சும்மா அல்ல
அண்ணாவிடமும், கலைஞரிடமும் காணபட்ட ஒரே சுபாவம் எல்லோரையும் அணைத்து சென்றது, எந்த தொண்டன் இலை போட்டாலும் அவர்கள் அமர்ந்தார்கள், எந்த தொண்டன் அழுதாலும் அவர்கள் துடைத்தார்கள்
அண்ணாவிடமிருந்து கலைஞர் கற்றுகொண்ட அந்த அணைத்து செல்லும் பண்புதான் இன்றளவும் திமுகவினை காத்து நிற்கின்றது
ராமசந்திரன் ஒரு ஆலகாலம், அண்ணா இருந்திருந்தாலும் அவர் கட்சியினை உடைத்திருப்பார், நிச்சயம் நடந்திருக்கும், ஆக கட்சி பிரிவுக்கு கலைஞர் பெரும் காரணம் அல்ல
அந்த திமுகதான் கலைஞரின் உயிர், அவரின் வாழ்வு. இது கலைஞரின் வாழ்வின் எந்த பக்கத்தை புரட்டினாலும் நீங்கள் காணலாம்
கலைஞரின் பிறந்தநாளில் அவருக்கு ஏதாவது செய்யவேண்டும் என விரும்பினால் திமுகவில் ஒற்றுமையினை கொண்டுவரலாம், வலிமையினை கூட்டலாம்
நாமெல்லாம் பின்னாளில் பிறந்தவர்கள், கலைஞரை பார்த்தவர்கள் கூட இல்லை
ஆனால் ஸ்டாலினுக்கு வரலாறு இருக்கின்றது, அவர் பார்க்காத காலம் இல்லை, அரசியல் இல்லை, அவர் கேட்காத அரசியல் தலைவர் குரல் இல்லை
கலைஞரின் ஸ்பெஷாலிட்டியே அக்கால குறிப்புகளை, தலைவர்கள் சொன்னதை எடுத்துவிட்டு அசத்துவதுதான், ஆனால் ஸ்டாலின் கூடவே இருந்தும் அப்படி பழகவில்லை, ஏன் பழகவில்லை என தெரியவில்லை
அவரும் கொஞ்சம் மாறவேண்டும், அண்ணா போல கலைஞர் போல சுபாவம் கொள்ளாமல் திமுகவினை காக்க முடியாது
அதனால் திமுக இருக்கும் காலமட்டும் கலைஞர் வாழ்வார், அதனால் அவரை காலகாலத்திற்கும் வாழவைக்கும் பொறுப்பு அக்கட்சியினரிடமேதான் இருக்கின்றது
மற்றபடி ஒன்றே ஒன்றுதான் சொல்லமுடியும், அம்மனிதனை கண்மூடிதனமாக எதிர்த்தவர்கள் எல்லாம் பின்னாளில் அவரை உணர்ந்து கொண்டாடினார்கள்
பக்தவச்சலம், இந்திரா, வாஜ்பாய் என ஏராளமான பெரியவர்களை சொல்லமுடியும், இன்றும் அவரை எதிர்க்கின்றோம் என சொல்பவர்களும் மனதிற்குள் அவரை வணங்கத்தான் செய்வார்கள்
அமெரிக்காவில் ஒரு பழக்கம் உண்டு, சிக்கலான நேரங்களில் “வாட் கிரைஸ்ட் வில் டு” என்பார்கள், அதாவது இயேசு இப்பொழுது இருந்தால் இந்த சிக்கலுக்கு என்ன செய்வார்? என சொல்லி யோசிப்பார்கள்
தமிழக அரசியலும் அப்படியே,
இங்கு சிக்கல் வரும்பொழுதெல்லாம் கலைஞர் இருந்திருந்தால் என்ன செய்வார்? என்றுதான் பேச்சினை தொடங்குவார்கள்
இதுதான் கலைஞரின் இடம், அவருக்கான நித்திய இடம், எந்த தமிழக அரசியல்வாதிக்கும் கிடைக்காத இடம்
அதுவும் டெல்லியின் கண்மூடிதனமான கட்டுப்பாடுகள் தமிழகத்தில் திணிக்கபடும் பொழுதெல்லாம் பெரியாரின் கொள்கையும், கலைஞரின் அரசியலும் கண்டிப்பாக முன்னெடுக்கபடும், அதனை மாற்றவே முடியாது
திமுக இருக்கும் வரை அவரும் வாழ்ந்துகொண்டே இருப்பார், அவரின் தாக்கம் ஒரு நாளும் மறையாது
அவரின் உயிர் திமுக எனும் கட்சியில்தான் இருக்கின்றது, அது இருக்குமட்டும் கலைஞர் வாழ்வார்..