கத்தாருக்கு ஆபத்து இப்பொழுது வந்திருக்கின்றது
எண்ணெயும், இஸ்ரேலும் இருக்கும் வரை அரேபியாவில் அமைதி இல்லை, இந்த இரண்டும் இல்லை என்றாலும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவர்களுக்குள் அடித்துகொண்டுதான் இருக்கபோகின்றார்கள்
ஆனாலும் இப்போதைய குழப்பத்திற்கு காரணம் இஸ்ரேலும், எண்ணெய்க்காக அமெரிக்கா செய்யும் அரசியலும் என்பது சொல்லி தெரியும் விஷயம் அல்ல
இஸ்ரேல் என்றாலே முன்பு எல்லா நாடுகளும் ஒன்று சேர்ந்து யுத்தம் செய்யும், வெற்றியா தோல்வியா என்பது தாண்டி அவர்கள் ஒன்று சேர்ந்தது அப்படித்தான், இஸ்ரேலுக்கு ஆகாதவர் என்றால் அழைத்து ஆராதித்தார்கள்
ஜோர்டான், லெபனான், சவுதி, எகிப்து என எல்லா நாடுகளும் அப்படித்தான் இருந்தன, இடி அமீனுக்கு எல்லாம் சவுதி அடைக்கலம் கொடுத்தன
எல்லாம் அமெரிக்கா கால்பதிக்கும் காலம் வரைதான்
முன்பு லெபனானில் இருந்த அமெரிக்க படைகள் அலறியடித்து ஓடின, சோவியத் யூனியன் வலுவாக இருந்த காலமது, பின் சதாம் உசேனை ஒழிக்க சவுதியில் கால்பதித்தது
இனி எது சவுதி விட்டு வெளியேறினாலும் அமெரிக்கா வெளியாறாது, அப்படி சவுதி , பஹ்ரைன், ஈராக் எல்லாம் அமெரிக்க அடிமைகளாயிற்று
முன்பு யுத்தம் என்று கால்பதித்தார்கள், இப்பொழுது யுத்தம் இல்லை என்றாலும் கிளம்பவா போகின்றார்கள்? அவர்களுக்கென்ன நாளைக்கே யுத்தம் தொடங்குவார்கள், அரசுகள் மட்டுமா அவர்கள் கையில் இருக்கின்றது? அது போக சில சக்திகளும் கையில் உண்டு
இப்படி பல அரபு நாடுகள் அமெரிக்காவிடம் சிக்கி, தங்கள் போராளிகள் ஆதரவினை விலக்கி ஒதுங்கி விட்டன.
ஆனால் கத்தார் அன்றிருந்த பிடியிலே இன்றும் இருக்கின்றது, பாலஸ்தீன் தீவிரவாதிகளின் உயர்மட்டத்திற்கு அதுதான் புகலிடம், இஸ்ரேலின் மொசாத்திடமிருந்து மயிரிழையில் உயிர்தப்பிய காலித் மிஷல் முதல், தாலிபன்களின் அலுவகம் வரை அங்கு உண்டு
சுருக்கமாக சொன்னால் இன்னும் முழு அமெரிக்க கட்டுபாட்டிற்கு வராத நாடு கத்தார், விடுவார்களா?
ஏமன் தீவிரவாதிகளுக்கு அவர்கள்தான் உதவி, பாலஸ்தீன் தீவிரவாதிகளுக்கு உதவி என கத்தார் மேல் குற்றம்சாட்டபட்டது
உடனே அமெரிக்கா அடிமைகள் இன்று தூதரக உறவை துண்டித்துவிட்டன, தூதரக உறவினை துண்டிப்பது என்பது நாட்டாமை ஊரை விட்டு விலக்கி வைக்கும் தீர்ப்பினை போன்றது
அவன்கிட்ட யாரும் அன்னந்தண்ணி புழங்க கூடாது என்பது போன்றது அது, கத்தார் விமானம், கத்தார் கப்பல் வர கூடாது, கத்தார் மக்கள் வர கூடாது, நாங்களும் செல்லமாட்டோம் எனும் அறிவிப்பு அது
இதற்கு கத்தார் எப்படி பதிலடி கொடுக்கபோவது என தெரியவில்லை, 2022 கால்பந்து உலககோப்பைக்கு அவர்கள்தான் பொறுப்பு, இந்த தடைகள் அதற்கு பின்னடைவினையே கொடுக்கும்
வளைகுடா நாடுகளின் அமெரிக்க அடிமைகள் கத்தாருக்கு சொல்வது இதுதான், “ஒழுங்கா அண்ணாச்சி பேச்சை கேட்டு இரு கத்தாரு அவரை பகைச்சி நாம என்ன செய்ய முடியும்? அதனால உன்ன கொஞ்ச காலம் அரேபியா விட்டு தள்ளி வைக்கிறோம்
ஏலேய் அந்த பயகிட்ட யாரும் எண்ணெய் அரிசி புழங்க கூடாது, கப்பல் விமானம் விட்டு விளையாடப்புடாது ஆமா”
வலுவில்லாதவன் கையில் கிடைத்த புதையல் அவனுக்கு ஒருவகை ஆபத்து என்பது போல, அரேபியாவின் எண்ணெய் அந்த பகுதிக்கு பெரும் ஆபத்து
அந்த ஆபத்துதான் கத்தாருக்கு இப்பொழுது வந்திருக்கின்றது