ஆடிபெருக்கு என்பது இன்று பட்டுபோன மரத்தின் கிளை

அந்த கால காவேரி அப்படி இருந்திருக்கின்றது, அதன் மீதோ அதன் துணையாறுகள் மீதோ ஒரு அணையுமில்லை. மொத்தமும் சேர்ந்து காவேரி டெல்டாவிற்கு ஓடி வந்திருக்கின்றது

இந்த ஆடிமாதம் கன்னியாகுமரி பக்கம் சாரல் கொட்டும் காலம், குற்றாலத்திலும் இந்த காலம் ரம்மியமானது

காவேரி டெல்டா பகுதிக்கு இந்த ஆடிமாதத்தில்தான் புதுவெள்ளம் வரும், காவேரியினை தாயாகவே வழிபட்டவர்கள் தமிழர்கள். சிலப்பதிகாரம் முதல் அதற்கு ஏராள சான்று உண்டு

அப்படி பொங்கி வந்த காவேரியினை, தங்களை வாழவைக்க வந்த காவேரியினை தாயாக வரவேற்று வணங்கியிருக்கின்றார்கள்

பெண்கள் தங்கள் மாங்கல்யத்தில் காவேரி அன்னையால் ஆசிவாங்கியிருக்கின்றார்கள்

அக்காலத்தில் அது பெரும் கொண்டாட்டமாக இருந்திருக்கின்றது, பண்டிகையில் வரும் தேரினை வணங்குவது போல அந்த நதியினை வணங்கியிருக்க்கின்றார்கள், பூ தூவி, ஆரத்தி எடுத்து அதனை வரவேற்று மகிழ்ந்திருக்கின்றார்கள்.

உழவர் அந்த வெள்ளம் கண்டபின்புதான் விதைப்பார்கள்,

எவ்வளவு அருமையான காலங்கள் அவை

இன்று எல்லாமே மாறிவிட்டன, காவேரிக்கு குறுக்கே ஏகபட்ட அணைகள், அதன் துணையாறுகளின் குறுக்கேயும் அணைகள். காவேரி வரவில்லை

காவேரியின் மணலும் சுரண்டபட்டு மிக அலங்கோலமாக கிடக்கின்றது காவேரி

முன்பெல்லாம் ஆடிபெருக்கிற்கு திறக்கபடும் நீரும் இப்பொழுது இல்லை.

காலம் எல்லாவற்றையும் மாற்றும். செழிக்க ஒரு காலமுண்டு என்றால் வறண்டு போகவும் ஒரு காலமுண்டு

வறண்டு போக ஒரு காலம் உண்டென்றால், மறுபடி செழிக்கவும் நிச்சயம் ஒரு காலம் உண்டு. உரிய காலம் வரும்பொழுது காவேரி மறுபடியும் கரைபுரண்டு வரும்

விஞ்ஞான தொழில்நுட்பம் நதிகளை மட்டும் தடுக்கும் திட்டத்தில் தோல்வியுற்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என எண்ண தோன்றுகின்றது

ஆடிபெருக்கு என்பது இன்று பட்டுபோன மரத்தின் கிளையில் பழம் நினைவுகளை தேடி ஒரு பறவை சோகத்தோடு வந்திருப்பது போன்றாகிவிட்டது.

கன்னடம் எடுக்கும் அதீத ஜனநாயம் இந்நாட்டிற்கு ஆபத்து, இப்படி எல்லாம் ஒரு மாநிலம் எல்லை மீறி சென்றால் அதை கட்டுபடுத்தி வைப்பதுதான் நாட்டிற்கு நல்லது

மத்திய அரசு அதனை செய்யவேண்டும், செய்யாவிட்டால் காவேரி போல இத்தேசத்தின் அமைதியும் வறண்டுபோகும்.