முரசொலி 75

தமிழ் எழுதிபடிக்க தொடங்கிய காலத்திலே எழுத்து துறைக்கு வந்தவர் கலைஞர். அப்பொழுது அவருக்கு வயது 13 இருக்கலாம், அப்பொழுதே மாணவர் நேசன் எனும் கையெழுத்து பத்திரிகை நடத்தினார், அதில் அப்பொழுது நடந்த இந்தி எதிப்பு முதல் நீதிகட்சியின் சீர்திருத்த கருத்துக்கள் எல்லாம் இருந்தன
அந்த மாணவர் நேசனின் தொடர்ச்சிதான் பின்னாளில் அவர் தொடங்கிய முரசொலி, அப்பொழுது அவருக்கு வயது வெறும் 18 தான்.
பிராமண தமிழை தாங்கி ஏடுகள் வந்துகொண்டிருந்த காலமது, அந்த தமிழ் இன்று தலைகீழாக நின்றுபடித்தாலும் புரியாது. அந்த காலத்தில் பெரியார் மட்டும் பாமர தமிழில் பத்திரிகை நடத்தினார். இந்த காலத்தில்தான் ஒரு தாழ்த்தபட்ட இனத்தை சேர்ந்த, அடையாளமே இல்லாத ஆனால் மிக தீர்க்கமான கருத்துக்களுடன் சுமந்த அந்த கருணாநிதியின் அணலாக அந்த முரசொலி வந்தது.
இது இரண்டாம் உலகப்போர் காலம், ஏறகுறைய இந்திய சுதந்திரம் உறுதி என்ற நிலையில் இந்நாடு விடுதலை பெற்றால் சமூகத்தின் அடிதளத்தில் இருந்த ஒடுக்கபட்டோர் நிலை, அமுக்கி வைக்கபட்டிருக்கும் தமிழின் நிலை என்னாவது? என்ற கவலைகள் எழுந்த காலம்.
இந்த காலகட்டத்தில்தான் முரசொலி வந்தது, யார் கவனிக்கின்றார்களோளொ இல்லையோ, கலைஞர் தன் கருத்துக்களை சொல்லிகொண்டே இருந்தார்.
முதலில் அதற்கு எந்த வரையறையும் கிடையாது, இன்றுதான் வரும் என்றில்லை. மழை பெய்வது போல அவ்வப்போது வந்தது முரசொலி.
பகுத்தறிவு கருத்துக்களை அது தீயாக சுமந்தது, இலக்கியத்தை அது தென்றலகா சுமந்தது, அரசியலை அது சுத்தியலாக அடித்தது.
கலைஞர் வளர, வளர முரசொலியும் வளர்ந்தது. குடி அரசு, திராவிட நாடு, விடுதலை போன்ற சமூக மாற்ற பத்திரிகைகளிடையேயும் முரசொலிக்கு ஒரு இடம் இருந்தது
கண்ணதாசனின் தென்றல் பத்திரிகை வரிசையிலும் முரசொலி இருந்தது.
கலைஞர் வளர, வளர முரசொலியும் வளர்ந்தது. தமிழரின் அடையாளமான சல்லிகட்டு அதன் இலட்சினை ஆயிற்று. முரசொலி தமிழக கண்ணாடி ஆயிற்று
சமூகத்தின் எல்லா பிரச்சினைகளும் அதில் வந்தன. சுதந்திர இந்தியா, முதல்வர் குமாரசாமி காலம், ராஜாஜி கால தமிழகத்து நிலைகளை முரசொலி படம் பிடித்து காட்டியது, அதன் வீச்சுக்கு யாரும் தப்பவில்லை
திமுக தொடங்கபட்ட பின் அதன் ஆயுதம் ஆயிற்று முரசொலி. குலகல்வி திட்டம், இந்தி எதிர்ப்பு காலங்களில் எல்லாம் சீறி வந்தது முரசொலி.
பின் மிசா காலங்களில் அது காட்டிய உறுதியினையும், எதிர்ப்பினையும் இந்தியாவில் எந்த பத்திரிகையும் காட்டவில்லை
முரசொலி கலைஞரின் ஆயுதமானது. அவர் எதிரிகளை தாக்கிய குத்தீட்டியும் அதுதான். அவர் தன்னை பாதுகாத்துகொண்ட கேடயமும் அதுதான்.
அவரின் உணவு, மூச்சு போலவே முரசொலியும் அவரின் அத்தியாவசிய ஒன்றானது.
ஒன்றா,இரண்டா.. சொன்னால் சொல்லிகொண்டே போகலாம்
தன் வெண்டுகோளை, கருத்தை, கோரிக்கையினை, மகிழ்ச்சியினை, துக்கத்தினை,கோபத்தை என எல்லாவற்றையும் அதிலேதான் தெரியபடுத்தினார் கலைஞர்.
அலெக்ஸாண்டரின் புக்கிலேஸ் போல கலைஞரை அதுதான் சுமந்து நின்றது.
எத்தனையோ எழுத்தாளனை, போராளியினை, கலைஞனை எல்லாம் சாய்த்துவிட்ட பிரமாண சூழ்ச்சிகள் முரசொலி முன் தோற்றுபோயின, அப்படி காத்து நின்றார் கலைஞர்.
எவ்வளவு அழகான எழுத்து, என்ன அற்புதமான தமிழ்? மறக்க முடியுமா? அந்த நினைவுகள் எல்லாம் விழியோரம் கண்ணீர் வர வைப்பவை.
அந்த பாரம்பரியமும் , பெருமையுமிக்க அந்த முரசொலிக்கு இன்று வயது 75 ஆகிவிட்டதாம். விழா கொண்டாடுகின்றார்கள். உண்மையில் அதற்கு வயது 80. அன்று அதன் பெயர் “மாணவர் நேசன்”.
மியூசியத்தில் இது மாவீரன் திப்பு சுல்தான் வாள். இது மாவீரன் பூலித்தேவனின் ஈட்டி என பார்ப்பது போல முரசொலியினையும் பார்க்கவேண்டி இருக்கின்றது, அதன் எழுச்சிமிக்க போராட்டம் அப்படி.
முரசொலி என்பது எக்காலமும் தமிழக தேவை, இந்நாட்டில் தமிழக உரிமைகளுக்காக எக்காலமும் முரசு அறைந்துகொண்டே இருக்கவேண்டும், அது காலத்தின் அவசியம்.
இன்று இம்மாநிலத்திற்கு எழும் நீட் முதல் பல சிக்கலாகட்டும், ஒரு முரசு கொட்டிகொண்டே இருக்கவேண்டும். கலைஞரின் காலம் முடிந்தாலும் அந்த ஒலிகேட்டுகொண்டேதான் இருக்கவேண்டும்
அந்த முரசினை முதன் முதலில் ஒலித்ததுதான் முரசொலி. இன்னும் ஒலிக்கபோகும் ஒலிகளுக்கு எந்நாளும் அதுதான் முன்னோடி.
தமிழகம் இருக்கும் காலம் வரை முரசொலி தாக்கம் இருந்துகொண்டே இருக்கும்.
இன்றைய முரசொலியினை பார்க்கும் பொழுது காலத்தின் கொடுமை புரிகின்றது. 5 தலைமுறைகளாக காலத்தோடு போட்டிபோட்டு ஓடிய கலைஞர் ஒய்வில் இருக்கின்றார். காலத்தினை யாரும் வெல்லமுடியாது, ஆனால் முத்திரையினை குத்திவிட்டால் காலத்தால் மறுக்க முடியாது
கலைஞர் அந்த முத்திரையினை குத்திவிட்டார், முரசொலியின் இடம் , தமிழக பத்திரிகை, அரசியல் களங்களில் தனி இடம்.
இன்று அதற்கு மணிவிழா கொண்டாட்டமாம், கொண்டாடட்டும், யாரையெல்லாமோ அழைத்திருக்கின்றார்கள்.
அதில் கவுரவிக்கபடவேண்டியவர்களில் முதலானவர் முரசொலிமாறன் அவர் இல்லை. ஆனால் முரசொலி செல்வமும், அமிர்தமும் மகா முக்கியமானவர்கள்
கலைஞரின் எழுத்தினை அச்சு கோர்த்து முரசொலிக்கு வலுசேர்த்தவர்கள், கலைஞரின் தளகர்த்தர்கள்.
அவர்கள் இல்லா வரிசையில் உதயநிதி ஸ்டாலின் அமர்வாராம், அமரட்டும் அது அவர்கள் விருப்பம், நல்லவேளையாக எமி ஜாக்சன் , உதயநிதி அருகில் அமரவில்லை என்பதுதான் ஒரே நிம்மதி.
கலைஞரின் கையாயுதமும், அவரினை காத்து நின்ற கேடயமுமாய், தமிழகத்தின் குரலாய் ஒலிக்கும் அந்த முரசொலிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..
நிச்சயம் அந்த முரசொலி காண்டீபம், ஆனால் கலைஞர் எனும் அர்ஜூனன் இல்லாத காண்டீபம் அது.