அனிதா : தற்கொலைகள் ஒரு தீர்வினையும் தராது
அந்த பெண் நிச்சயம் புத்திசாலி , நன்றாக படித்திருக்கின்றார், மதிப்பெண்களை அள்ளியிருக்கின்றார்.
மிகபெரும் தைரியமும் இருந்திருக்கின்றது, நீட் தேர்வினை எதிர்த்து வழக்கு எல்லாம் தொடுத்திருக்கின்றார்.
ஆனால் தன்னம்பிக்கை என்றால் என்ன என தெரியாமலும், இச்சிக்கல் எல்லாம் கடந்து செல்லகூடியது என்பதும், படிப்பு மட்டும் வாழ்கை அல்ல என்பதும் தெரியாமல் இருந்திருக்கின்றது.
கனவு படிப்பு கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்வதெல்லாம் ஏற்றுகொள்ள கூடியது அல்ல, பள்ளி தேர்வுகளில் தோல்வியுற்றதற்காக சிலர் தற்கொலை செய்வது போலத்தான் இதனை கருதமுடியும்.
இந்த வருடம் இல்லையென்றால் அடுத்தவருடம் கிடைத்துவிட போகின்றது, அதுவும் இல்லையென்றால் நாட்டில் வேறு படிப்புகளே இல்லையா?
இந்த பரந்த உலகில் மருத்துவம் படித்துதான் வாழவேண்டுமா?
தற்கொலைகள் எவ்வகையிலும் ஏற்றுகொள்ள கூடியதல்ல, ஆயினும் இம்மாணவியின் சாவுக்கு, நீட் தேர்வினை சரிவர கையாள தெரியாத தமிழக அரசும் ஒரு வகையில் காரணமாகும்
முதல் தவறு ஒருவருடமாக நீட் தேர்வுபற்றி தமிழக அரசு எந்த முடிவுக்கும் வரவில்லை, அடுத்து அடிக்கடி டெல்லி சென்றாலும் தமிழ்க பிரதிநிதிகள் நீட் பற்றி எல்லாம் கவலைபடவே இல்லை
அந்த மரணத்தில் குற்றம் சொல்லவேண்டுமென்றால் தமிழக அரசைத்தான் முறைக்க முடியும்
வாழ்க்கை என்பது பெரும் வலியும், ஏமாற்றமும், பெரும் திருப்புமுனைகளும் கொண்டது. நினைத்து விடுவது எல்லாம் கிடைத்துவிடுவதுமில்லை, கிடைத்ததெல்லாம் நிலைத்துவிடுவதுமில்லை
நாம் ஒரு கணக்கிட்டால், கடவுள் இன்னொரு கணக்கு வைத்திருப்பான். ஒரு கதவினை அவன் அடைக்கின்றான் என்றால் இப்பிறவியில் நாம் செய்யவேண்டிய பணி அது அல்ல என்பதே பொருள்.
இக்கணக்குகள் எல்லாம் ஆண்டவன் ஒருவனுக்கே புரியும். அவன் தருவதை பெற்றுகொண்டால் பின்னொரு நாளில் அதன் அர்த்தம் புரியும்.
சரியான ஆற்றுபடுத்தலும், வழிகாட்டலும், ஆறுதலும் இல்லாமல் இறந்துவிட்ட அந்த மாணவிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். நிச்சயம் பரிதாபத்திற்குரியவர் அந்த மாணவி.
தற்கொலைகள் ஒரு தீர்வினையும் தராது
மாநில அரசு தகுந்த தயாரிப்புகளை செய்யாததால் மருத்துவ அட்மிஷனில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருப்பது உண்மை
அதில் பல மாணவர்கள் பைத்தியம் பிடித்து அலைவதும் உண்மை
இம்மாணவியின் மரணம் பெற்றோருக்கு ஒரு அபாய மணி, அவர்களை ஆறுதல்படுத்தி வழிகாட்ட வேண்டியது அவர்கள் கடமை.
விரைவில் இந்த நீட் குழப்பத்திற்கு முடிவு கணடு, வருங்காலத்திலாவது எல்லாம் முறையாக நடக்க செய்யும் கடப்பாடு அரசுக்கு உண்டு.
தற்கொலை ஏற்றுகொள்ள கூடியது அல்ல, அதனை வைத்து கட்சிகள் அரசியல் செய்வதும் அறவே நல்லதல்ல.
இப்பெண் செல்லவில்லை என்றால் மருத்துவத்துவ உலகிற்கு ஆயிரம் பேர் வருவார்கள்.
ஆனால் அந்த பெற்றோருக்கு இன்னொரு மகள் வர முடியுமா?
அதனை கொஞ்சம் அந்த அனிதா நினைத்திருக்கலாம். படித்து தோல்வி என இவர் இம்முடிவிற்கு வந்திருந்தால், அவரை ஆசையோடு படிக்க வைத்த அப்பெற்றோரின் நிலை எப்படி இருக்கும்
எது எல்லாமோ தெரிந்த பெண்ணிற்கு பெற்றோரின் முகம் நினைவில் வராமலே போய்விட்டதை என்னவென்று சொல்வது?
அடுத்த நாட்டில் யாரேனும் தமிழன் செத்தால் கலைஞர் ராஜினாமா செய்யவேண்டும், அவர் தூக்கில் தொங்கவேண்டும் என்றெல்லாம் சத்தமிட்ட ஒரு பயலையும் இப்பொழுது தமிழச்சி அனிதா சாவில் காணமுடியவில்லை.
தமிழச்சி அனிதா சாவுக்கு காரணமான இனதுரோகி பழனிச்சாமி ராஜினாமா செய்யவேண்டும் என்ற குரல் எங்காவது கேட்கின்றதா?
கேட்காது, இந்த பயலுக எல்லாம் உலகில் எந்த மூலையில் யார் செத்தாலும் கலைஞர் முதல்வராக இருந்தால் பொங்குவார்கள், ஆனால் அவரை தவிர யார் முதல்வராக இருந்து, அவர்கள் காலடியில் தமிழர்கள் செத்தாலும் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.
அவர்கள் அரசியல் அப்படி.