கத்தோலிக்க கிறிஸ்தவமும், யூதரும், இஸ்லாமியரில் சிலரும் நம்பும் விஷயம்

Image may contain: 1 personகத்தோலிக்க கிறிஸ்தவமும், யூதரும், இஸ்லாமியரில் சிலரும் நம்பும் விஷயம் அது.

கடவுளுக்கு முன்பாக 7 வானவர்கள் எப்பொழுதும் நிற்பார்கள். ஒவ்வொரு தூதருக்கு கீழும் ஏராளமான தேவதைகள் உண்டு, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி.

இவர்களில் கபிரியேல் என்பவர்தான் அடிக்கடி தகவல் கொண்டு வருவார். மரியாள் முதல் நபிபெருமான் வரைக்கும் வந்தவர் அவர்தான்.

இந்த வானவர்களுக்கெல்லாம் ஒரு தலைவர் உண்டு, அவர்தான் மிக்கேல் அல்லது மைக்கேல். மிக பெரும் பொறுப்பு அவருடையது.

கடவுள் முதலில் வேறு உலகையும் வான தூதர்களையும்தான் படைத்தாராம், அந்த தூதருக்கு முதல் தலைவனாக இருந்தவன் லூசிபேர் என்பவராம்.

கடவுள் தன்னை புகழ்ந்துபாடும் அணிக்கு தலைவராக அவனை நியமித்தாராம், அவனோ பன்னீர் செல்வம், பழனிச்சாமி போல போர்கொடி தூக்கிவிட்டானாம்.

கடவுள் உடனே நான் உன்னைப்போல் ஆயிரம் பேரை படைப்பேன் என சவால் விட்டு, மண்ணிலிருந்து மனிதரை படைத்தாராம்

அதாவது வானதூதர்கள் நெருப்பிலிருந்து படைக்கபட்டவர்களாம், மனிதன் என்பவன் மண்ணிலிருந்து படைக்கபட்டவனாம்.

கடவுள் மனிதனை படைத்து, நீ என்னை அவமதித்தாய் அல்லவா? இப்படி உன்னால் படைக்க முடியுமா? ம்ம் அவனை வணங்கு அதுதான் உனக்கு தண்டனை என கட்டளையிட்டாராம்

என்னது? இந்த மாபெரும் லூசிபர், கேவலம் மண்ணின் பொம்மையினை ஆதரிப்பதா? என மறுத்தானாம் லூசிபர்

ஆத்திரமடைந்த‌, கடவுள் இந்த மிக்கேல் தூதரிடம் இவனை பிடித்து கீழே தள்ளிவிடு என உத்தரவிட்டாராம், பெரும் போரில் கீழே வீழ்த்தபட்டானால் லூசிபர், அவனோடு அவனின் ஆதரவாளர்களும் வெளிநடப்பு செய்தார்களாம்.

பரலோகத்தில் இருந்து கீழே விழுந்த லூசிபர் தன் சிறகுகளை தட்டி சவால் விட்டிருக்கின்றான், எந்த சொர்க்கத்தை நான் இழந்தேனோ, அந்த சொர்க்கத்தை மனிதன் அடைய விடவே மாட்டேன், அவன் கடவுள் பாதையினை மறந்து, உலக மாயைகளில் மூழ்கி கடவுளுக்கு அருவருப்பான பாவங்களை செய்ய வைப்பேன், அதனை பார்த்து கடவுள் வேதனையில் சாக வேண்டும் என முழங்கினார்.

அதிலிருந்துதான் மனிதருக்கும் சாத்தானுக்கும் இடையிலானா யுத்தம் உலகில் தொடங்கிற்றாம்.

ஆதாமும் ஏவாளும் கடவுளின் மக்களாய் இருந்தபொழுது இவன் தான் பாம்பு வடிவில் சென்று அவர்களை பழம் சாப்பிட வைத்து, கடவுளையே தலைகுனிய வைத்தானாம்.

கடவுள் அன்று ஒரு பிரகடனம் செய்தார், லூசிபருக்கு எதிராக இந்த மிக்கேல் என்பவரை நான் வானலோக தளபதியாக்குகின்றேன். இவரை தேடுபவர்களை சைத்தான் ஒன்றும் செய்யமுடியாது என சக்தியும் கொடுத்தாராம்.

அதுமுதல் மிக்கேல் அதிதூதரின் பக்தி தொடங்கிற்று, பழைய ஏற்பாடு எல்லாம் அவரே பிராதனம், இன்றும் யூதமதம் தன் இனத்தின் காவலனாக அவரையே சொல்கின்றது.

அலெக்ஸாண்டர் காலத்தில் கூட, பாரசீக மன்னனுக்கு எதிராக அவன் செய்யும் யுத்தத்தில் சில வானவர்களும், மிக்கேலும் அவனுக்கு உதவியாக சண்டையிட்டதாக தானியேல் தீர்க்கதிரிசி புத்தகத்தில் காணலாம்.

அதாவது கடவுளை நம்பி, சாத்தானை வெறுப்பவர்களின் நலனுக்காக மிக்கேலே யுத்தம் செய்வார் என்பது நம்பிக்கை.

சாதாரண தூதர் அல்ல அவர், பைபிளின் தொடக்கம் முதல், புதிய ஏற்பாடின் கடைசி ஆகமம் ஆன, அதாவது உலகம் அழியும் வருங்காலம் வரைக்கும் அவரின் செயல், முக்கியத்துவம் பற்றி சொல்லபட்டிருக்கின்றது.

கத்தோலிக்க கிறிஸ்தவம் அவருக்கு மகா முக்கிய இடத்தை, யூதரை போலவே கொடுத்திருக்கின்றது. என்றும் கத்தோலிக்க ஆலயங்கள் அவர் சொரூபம் இன்றி அமையாது.

பிரிவினைகளை பற்றி சொல்ல வேண்டியதில்லை, அவர்களுக்கு தேவை ஒரு மைக், ஒரு காணிக்கை பெட்டி, முட்டிகொள்ள ஒரு சுவர் அவ்வளவு போதும்

மற்றபடி எதனையும் ஆராய மாட்டார்கள், யோசிக்கமாட்டார்கள்

அப்படி மிக்கேல் அதிதூதர் பற்றியெல்லாம் அவர்களுக்கு ஒரு கருத்தும் இருக்காது

வானவர்களில் மகா முக்கியமானவரும், மிக பெரும் சக்தியுமானவர் மிக்கேல்

அந்த மகா முக்கிய வான தூதருக்கு இன்று திருவிழா.

அவர் எப்படி இருப்பார் என யாருக்கும் தெரியாது, ஒரு யுத்தத்தில் ஸ்பானியர் தோல்வி முகம் காட்ட, அவரை வேண்டி நின்றனர். அப்பொழுது அவர்கள் எதிர்க்கு அஞ்சி பதுகிய குகையில் அவர் காட்சி கொடுத்தார், தைரியமூட்டினார். பின் ஸ்பெயின் படை வென்றது.

உலகில் அவர் கொடுத்த ஒரே காட்சி அதுதான். அதிலிருந்துதான் மைக்கேல் மாஸ் விடுமுறை தோன்றிற்று.

வெள்ளையன் ஆண்ட காலத்தில் செப்டம்பர் கடைசி வாரம் மைக்கேல்மாஸ் விடுமுறை, டிசம்பர் கடைசி கிறிஸ்மஸ் விடுமுறை, கோடையான மே மாதம் முழுக்க விடுமுறை என்றிருந்த பாதிப்புதான் இன்றும் காலாண்டு , அரையாண்டு விடுமுறையாக தொடர்கின்றது.

காலாண்டு விடுமுறைக்கு இந்த மிக்கேல் அதிதூதரே காரணம்.

இன்று அவருக்கு விழா, தமிழகத்தில் தென்காசி ஆலயமும், ராஜாவூர் ஆலயமும் அவருக்கு மிக பிரசித்தபெற்ற இடங்கள். அதுவும் தென்காசி கோவில் வெகு பிரபலம்.

சைத்தான்களால் பாதிக்கபட்ட மக்களுக்கு எல்லாம் விடுதலை அளிக்கும் பெரும் தெய்வமாக அவர் கொண்டாடபடுகின்றார்.

தன்னை நம்பிய மக்களை எல்லாம் அவர் காத்தே வருகின்றார், இன்றும் யூதர்களின் ஜெபமே மிக்கேல் அதிதூதர் புகழ்ச்சியுடன் தொடங்கும், அவரே தங்கள் முன்னால் நடப்பதாக நம்பிகொள்கின்றார்கள்.

கத்தோலிக்க கிறிஸ்தவன் என்பதால் இந்த மிக்கேல் அதிதூதர் பக்தி எம‌க்கும் உண்டு.

அந்த வானதூதரின் சொரூபத்தை பார்த்தால் ஒருகையில் தராசு இருக்கும், காலின் கீழே அந்த லூசிபரை மிதித்து இன்னொரு கை ஈட்டியால் குத்திகொண்டிருப்பார்.

தராசு எதற்கு?

ஒருவன் இறந்தபின் அவரின் ஆத்மத்தை மிக்கேல் அதிதூதர்தான் இறைவனிடம் அழைத்து செல்வாராம், அவன் பாவ புண்ணியங்களை நிறுத்து, எது அதிகமோ அதற்கான தண்டனையும், பலனும் கொடுப்பாராம்

இந்துக்களின் எமதர்மன் சாயல் இது, இப்படி ஆழ நோக்கினால் கிறிஸ்தவ மதத்திற்கும் இந்து மதத்திற்கும் ஏகபட்ட ஒற்றுமைகளை காண முடியும்.

உண்மையில் இவை எல்லாம் ஒரே மதத்தினை மூலமாக கொண்டது என்பது மட்டும் என் துணிபு.

தன்னை நம்பி வணங்கி வரும் எல்லா மக்களையும், அவர்கள் எம்மதமானானும் அவர்கள் குறைகளை தீர்த்து, பேய்களை ஓட்டி காத்து வருபவர் மிக்கேல் அதிதூதர்.

அவரின் பக்தர்களுக்கு திருவிழா வாழ்த்துக்கள்