ரஷ்யாவினை சேர்ந்தவர் பெட்டிகோவ் பிச்சை எடுக்கிறார்…

Image may contain: 1 person, outdoorரஷ்யாவினை சேர்ந்தவர் பெட்டிகோவ், உலகெல்லாம் சுற்றிவருகின்றாராம், இப்பொழுது இந்தியாவின் தமிழகத்திற்கு வந்திருக்கின்றார்

இங்கு எது பிடித்ததோ இல்லையோ, பிச்சை எடுப்பது அவரை கவர்ந்திருக்கின்றது, அவ்வளவுதான் தொப்பியினை திருவோடாக மாற்றி கோவில் வாசலில் அமர்ந்துவிட்டார்

இது பின் செய்தியாக மாறி, ரஷ்ய வாலிபருக்கு நமது நாட்டில் சிக்கல் என்றால் அவமானம் அல்லவா? என எண்ணியோர் காவல்துறைக்கு தகவல் சொல்லி, காவல்துறை பணம் கொடுத்து ரஷ்ய தூதரகம் போக சொல்லியிருக்கின்றது

மனிதர் அங்கு செல்லாமல் ஹாயாக இன்னொரு கோவில் வாசலில் பிச்சையெடுக்கின்றார். அவர் வந்து சேராததை அறிந்த ரஷ்ய தூதரகம் மறுபடி காவல்துறையிடம் சொல்ல மனிதரை தேடியிருக்கின்றார்கள்

அதற்குள் மனிதர் பிரபலமாகிவிட்டார். யார் பார்த்தாலும் காசு கொடுக்கின்றார்களாம், மனிதருக்கு பயங்கர சந்தோஷம்

அதுவும் வெளிநாட்டுக்காரர் என்பதால் 100 ரூபாய்க்கு குறைந்து பிச்சை விழுவதே இல்லையாம்.

இப்பொழுது ரஷ்யா போ என்றால் போகமாட்டாராம், அவருக்கு நவம்பர் 22 வரை விசா இருக்கின்றதாம்

அதனால் மனிதர் இன்னும் 1 மாதம் இங்கேயே சம்பாதிக்க அதாவது பிச்சை எடுப்பாராம், இப்போதைக்கு பெங்களூர் சென்று மார்க்கெட் நிலவரம் பற்றி விசாரிப்பாராம்

இனி அடிக்கடி இவர் இந்தியா வருவார் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

“பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு” என இவர் ரஷ்யாவெங்கும் சொல்வார் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்