தியாகத்தின் ஒரே திருவுருமான பாகம்பிரியாளின் பிறந்த நாள்
இன்று எனக்கு தெரிந்த தியாகத்தின் ஒரே திருவுருமான பாகம்பிரியாளின் பிறந்த நாள்.
அதுவும் எனக்காக தன் வாழ்வினை தியாகம் செய்தவர் என்ற முறையில் நான் பெரும் நன்றியுடையவனாகின்றேன்
எனக்கு நன்றாக தெரியும், என்னோடு சராசரி பெண் வாழ்வது என்பது முடியவே முடியாத காரியம், ஏனென்றால் நான் அப்படித்தான். எதிலும் கவனமில்லை, எதுவுமே சீரியஸ் இல்லை என ஏதோ சித்தன் வழி செல்லும் ஒரு குழப்பாமான மனதிற்கு சொந்தகாரன்,
இதில் முன்கோபம் வேறு
அவளுக்கு எனக்கும் சுத்தமாக பொருந்தாது, பொருந்த வேண்டிய அவசியமும் அவளுக்கு இல்லை.
வசதியான வீட்டு ஒரே மகள் அவள், அவள் இடத்தில் யார் இருந்தாலும் என்றோ என் தலையில் கல்லை தூக்கிபோட்டுவிட்டு கிளம்பியிருப்பார்கள்.
அவ்வளவு அழிச்சாட்டியம் செய்திருக்கின்றேன்.
பாரதி மனைவியினை கண்டுகொள்ளவில்லை என்றால் அவன் அறிவாளி, அவனின் மனகொதிப்பு வேறு
ஆனால் இந்த மரமண்டையன் ஏன் அப்படி இருந்தான் என்றால் அவனின் பைத்திய்யக்கார மனம் அப்படி.
ஆனால் நான் மாறவே மாட்டேன் என தெரிந்தபின் அவள் எனக்காக மாறிகொண்டாள், பொருந்தவே பொருந்தாத இரு பிறவிகள் பொருந்திகொண்ட அதிசயம் அவளால் நடந்தது.
எத்தனையோ முறை வெட்டிகொண்டு ஓடும் முடிவின் நுனிக்கு வந்தும் மறுபடியும் இணைந்த காலங்கள் உண்டு,
இறைவன் என்னை கண்காணித்து கொண்டே இருந்திருக்கின்றான், எனக்கு அவள்தான் சரி என்பது அவனுக்கு தெரிந்திருக்கின்றது
அவ்வையார் சொல்வார் அல்லவா “இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றுமில்லை” என அப்படியாக, “நல்ல மனைவி கடவுளால் மட்டுமே கொடுக்கபடுவாள்..” என பைபிள் சொல்கின்றது அல்லவா? அப்படியாக கிடைக்கபெற்றவள்
வாழ்க்கை என்றால் என்னவென்று கொஞ்சம் கொஞ்சமாக புரிய புரிய அவளை புரிந்துகொள்ள முடிகின்றது
எனக்கு சகலமுயாய் இருக்கும் அவளை ஆண்டவன் ஆசீர்வதிக்கட்டும், அவள் இல்லையென்றால் கொஞ்சம் கூட என் உலகம் அசையாது
ஆம் எனக்கு டிரைவரும் அவளே, இன்றுவரை எனக்கு கார் ஓட்ட தெரியாது. அவள் நிழலாய் இருப்பதால் அதற்கொரு அவசியமும் வந்ததில்லை.
எல்லா பிரச்சினைகளிலும் இன்று என்னை காத்து நிற்கும் ஆணிவேர் அவள்தான். அதில்தான் என்னால் நிற்க முடிகின்றது.
எல்லா தெய்வங்களும் அவளை ஆசீர்வதிக்கட்டும், அவள் வாழ வாழத்தான் நான் வாழமுடியும்
இந்த முகநூலுக்கு என்னை அழைத்து வந்தது அவள்தான், இந்த கணக்கினை எல்லாம் அவள்தான் தொடங்கி கொடுத்தாள் , நான் படிப்பதையும் எழுதுவதையும் அவள் தடைசெய்ததுமில்லை
குஷ்பூ படத்தை என் அருகிருந்து பார்க்காததை தவிர எந்த சொல்லும் அவளை சொல்ல முடியாது.
என் உலகம் அவளால்தான் இயங்குகின்றது.
வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அந்த பொக்கிஷத்தின் பிறந்தநாளை உங்களோடு கொண்டாடுவதில் மகிழ்ச்சி.
வாழ்த்து மழையில் பாகம்பிரியாளை நனைய வைத்திருக்கும் உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றி
உங்கள் வாழ்த்துக்களை எல்லாம் பார்க்கும்பொழுது “நீனும் ஏதோ உருப்படியாக செய்கின்றாய் போல..” என ஒரு பார்வை பார்த்துகொள்கின்றாள் அவள்.
உங்களுக்கெல்லாம் கோடான கோடி நன்றி, உங்களால் வீட்டில் மரியாதை கொஞ்சம் கூடியிருக்கின்றது
எல்லோரும் வாழ்த்துகின்றார்கள் என தோழர் Devi Somasundaram அவர்களும் வாழ்த்தியிருக்கின்றார்
“அம்மா மகமாயி, வாழ்த்துக்கு நன்றி. அவளிடம் நீ 10 நிமிடம் , வேண்டாம் ஒரு நிமிடம் பேசினாலும் அவள் பெண் உரிமை என்ன தெரியுமா? என சொல்லி என் கழுத்தை பிடித்து கோலாலம்பூருக்கு அப்பால் தள்ளிவிடுவாள்
உன்னை பற்றி நன்கு தெரிந்ததால் சொல்கின்றேன், அவள் உள்ளே உறங்கும் மிருகத்தை எழுப்பிவிடாதே தாயீஈஈஈ”