இலுமினாட்டி ஆராய்ச்சி கும்பலின் அழிச்சாட்டியம் தாளவில்லை

இந்த இலுமினாட்டி ஆராய்ச்சி கும்பலின் அழிச்சாட்டியம் தாளவில்லை

அதாவது இந்த டெங்கு என்பது இலுமினாட்டி தமிழகத்தில் பரப்பிவிட்ட விஷயமாம், அதற்கு முன் அப்படி நோயே இல்லையாம். நோய்பரப்பிவிட்டு சம்பாதிக்க இலுமினாட்டிகள் கிளம்பிவிட்டார்களாம்

இந்த கம்முனாட்டிகள் எங்கிருந்துதான் யோசிக்குமோ தெரியாது.

மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து நோய்களும் தோன்றின, மானிட இனம் வளர வளர நோய்களும் வளர்ந்தன மருத்துவமும் வளர்ந்தது, அது தொடர்கின்றது

தமிழகத்தில் முன்பெல்லாம் ஏகபட்ட கொள்ளை நோய்கள் மிரட்டியிருக்கின்றன‌

காலரா, மலேரியா என வரும் கொள்ளை நோய்கள் ஊரையே காவு வாங்கிய காலம் இருந்திருக்கின்றது, ஏகபட்ட ஊர்கள் அதனால் காலியான சரித்திரம் இருக்கின்றது அதெல்லாம் இலுமினாட்டி சதியா?

ஐரோப்பாவில் பிளேக் எனும் கொள்ளை நோய் எத்தனை லட்சம் மக்களை பழிவாங்கி இருக்கின்றது, ஏன் சில போர்களே அதற்கு அஞ்சி நிறுத்தபட்டிருக்கின்றன‌

அவை எல்லாம் இலுமினாட்டி சதியா?

தமிழகத்தில் முன்பு பெரியம்மை, சின்னம்மை (ஜெயா , சசிகலா அல்ல) பெரும் கொள்ளைநோயாக இருந்திருக்கின்றது, அவை எல்லாம் விஞ்ஞான காலத்தில் கட்டுபடுத்தபட்டிருக்கின்றன‌

இந்த மலேரியா, காலரா, டைபாய்டு, சின்னம்மை, பெரியம்மை எல்லாம் வெளிநாட்டு மருந்துகளால் இல்லாமல் ஆக்கபட்டன, அவை எல்லாம் என்ன இலுமினாட்டி சதியா?

புற்றுநோயின் முதல் வரிசையில் அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவுமே இருக்கின்றன, ஆக இலுமினாட்டிகள் சொந்த நாட்டிலே கொல்கின்றார்களா?

இந்த உலகம் போக்குவரத்தில் உச்சம் பெற்றிருக்கும் காலமிது, ஒரு நாளைக்கு ஏகபட்ட விமானங்களும் , கப்பல்களும் வந்து செல்லும் தமிழ்நாடு இது

உலகெல்லாம் தமிழர்கள் சென்று வந்துகொண்டிருக்கின்றார்கள், அப்படி இந்த டெங்கு வந்திருக்கலாம்

அது வளரும் சூழல் இருப்பதால் பெருகியிருக்கலாம்

அதுதான் சாத்தியம், ஆனானபட்ட சிங்கப்பூரிலும் டெங்கு உண்டு, அதன் அமைப்பு அப்படி. அங்கும் இலுமினாட்டி புகுந்தானா?

கொள்ளை நோய் பரவுவது உலகின் ஏதாவது ஒரு மூலையில் பரவும் விஷயம், ஆப்ரிக்காவின் எபோலா அப்படித்தான் தாக்கி ஓய்ந்தது

அவ்வளவுதான் விஷயம்

அதற்குள் டெங்கிக்கும் இலுமினாட்டி என கிளம்பிவிட்டார்கள், ஏன் தமிழகத்திற்கு இலுமினாட்டிகள் குறிவைக்க வேண்டும் என‌ கேட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா?

உலகில் வீரமும் அறிவும் (!) மிக்க தமிழினம் தனக்கு போட்டியாக வரும் என இலுமினாட்டிகள் கருதுகின்றார்கள், அதனால் அழிக்க தொடங்கிவிட்டார்கள், ஈழத்தில் அழித்தார்கள்

இப்பொழுது தாய் தமிழகத்தில் அழிக்கின்றார்கள் என சிரிக்காமல் சொல்வார்கள்

அப்படியா, ஒருவேளை அந்த அதிமுக என்பது இலுமினாட்டி தயாரித்த கட்சியாக இருக்குமோ என கேட்டால் பதிலே இருக்காது.