எது தமிழர் இசை? கர்நாட்டிக் இசையா? பறை இசையா?
சென்னைக்கு இசைநகரம் என்ற அடையாளம் கிடைத்ததுதான் தாமதம், வழக்கம் போல தமிழர்கள் பிரிவு பிரிவாக குத்து சண்டைக்கு கிளம்பிவிட்டார்கள்
அதாவது எது தமிழர் இசை? கர்நாட்டிக் இசையா? பறை இசையா? கல்பனா அக்கா இசையா? என வரிந்துகட்டி கிளம்புகின்றார்கள்
இயல், இசை, நாடகம் என இருந்தது தமிழ். இசை என்பது தமிழின் ஒரு பிரிவு
அக்கால தமிழ் எழுத்துக்கள், செய்யுள் இன்னும் பல குறிப்புகள் எல்லாம் இசை வடிவில்தான் எழுதபட்டன. மனதில் பதிய வைப்பது எளிது, வார்த்தை குறைவு என ஏகபட்ட விஷயங்கள்
அகத்தியர் முதல் கம்பன் அவ்வை வரை சொல்லவந்த கருத்துக்களை பாடலிலேதான் சொன்னார்கள்
அந்த பாடல்கள் எல்லாம் சரிகமபதனி எனும் ஏழு ஸ்வரங்களுக்குள் அழகாக பொருந்தின, இன்றும் இசை வித்தகர்கள் கவனித்தால் அதனைத்தான் சொல்கின்றார்கள்
இப்படி இசையும் தமிழுமாக இருந்ததுதான் தமிழர் வாழ்வு, சில பண்டைய இந்து ஆலயங்களில் உள்ள இசைபாடும் தூண்களில் அது இன்றுவரை தெரிகின்றது
தமிழருக்கே உரித்தான யாழ் போன்ற கருவிகளும் தமிழர் இசையில் உயர்ந்த விஷயங்களை சொல்கின்றன
கர்நாடக இசை ஒன்றும் கன்னடருக்கு உரியது அல்ல, அதன் உண்மையான பெயர் “கரை நாடக இசை”
காவேரி கரையில் கலைகள் செழித்து வளர்ந்தன, அந்த காவேரி கரையின் இசைதான், காவேரி கரையில் நடந்த நாடக இசைதான் கரை நாடகம் ஆகி பின் கர்நாடகம் ஆயிற்று என்கிறது ஒரு ஆய்வு
1300 வரைக்கும் தமிழ்பாடல்கள்தான் அந்த இசையில் கலந்திருந்தன, மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் எல்லாம் பாடியது அந்த தமிழ்பாடல்களே
பின்னாளில் தெலுங்கு மக்கள் வந்தபொழுது அவர்கள் கையில் அதிகாரம் சிக்கிற்று. அரசு ஆலயம் என எல்லாம் அவர்கள் அதிகாரத்திற்கு வர, தமிழர் இசையில் தெலுங்கு கீர்த்தனைகள் வர ஆரம்பித்தன
இந்த தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி எல்லாம் அப்படி தெலுங்கு கீர்த்தனைகளை இயற்றினர், தமிழர் பாடல் ஒலித்த திருவையாற்றில் பின் தெலுங்கு கீர்த்தனை ஒலிக்க தொடங்கியது, அது இன்றுவரை தொடர்கின்றது
கலையும் இசையும் ஆண்டவனுக்கும் அரசனுக்கு என்றிருந்த காலங்களில் இவை மேலிட விஷயங்களாயின
கர்நாடக இசை மேலிடங்களுக்கு உரியது என்ற பிம்பம் உருவானது.
வயல்களிலும், குளங்களிலும் உழைக்கும் மக்கள் அலுப்பு தெரியாமல் இருக்க பாடபட்ட இசை கிராம இசையாயிற்று
எந்த தமிழனுக்கு இசை இல்ல? அரசவை முதல், விவசாயி, மீணவன், மலைவாழ் குறவர்கள் என எல்லோருக்கும் ஒவ்வொரு வகையான இசை இருந்தது
அவைகளின் சாயல் இன்றும் உள்ளதை காண முடியும்
ஆக எது தமிழரின் ஆதி இசை என சர்ச்சை வகுப்பது எல்லாம் அரசியல் அல்லது பிரிவினை வளர்க்கும் செயல்
கர்நாடக இசையும் தமிழர் இசையே, பறை இசையும் தமிழர் இசையே, தெம்மாங்கு முதல் கும்மிவரை எல்லாமும் தமிழர் பாடலே
தமிழகம் பல நாடுகள் பல பகுதிகளின் பிரிவாக இருந்த காலத்தில் பல்வேறு இசைகள் இருந்தன
இன்று ஒரே தமிழகமாக விளங்கும் அதன் தலைநகரான சென்னையிலும் எல்லா விதமான இசையும் கிடைக்கின்றது
கர்நாடக இசை முதல் கானா பாடல் வரை எல்லாம் காணமுடியும், சென்னையின் சிறப்பு அது
பல பகுதிதமிழர்கள் இணைந்துவாழும் சென்னையின் தனித்துவம் அது
ஆக இதில் எமது தமிழ் இசை (தமிழிசை அல்ல) என கிளம்பினால் அது குழப்பத்திலேதான் முடியும்
அப்படி தமிழர் என முஷ்டி தூக்கினால் ஒன்று செய்யுங்கள்
தமிழரின் தனிபெரும் இசைகருவி யாழ், முன்பொரு காலத்தில் தமிழன் அதில் திறமைபெற்றிருந்ததால் அந்த ஊர் யாழ்பாணம் என்றே அழைக்கபட்டது
உலகில் இசைகருவி பெயரால் அமைந்த மிகசில ஊர்களில் அதுவும் ஒன்று, யாழ்பாணம் என்பது தமிழரின் பெருமை மட்டுமல்ல, தமிழர் இசையில் வல்லவர்கள் அங்கு வசித்திருக்கின்றார்கள் என்ற பெருமை தாங்கி நிற்கும் ஊர்.
இந்த யாழில் பல வகை உண்டு, கீசக யாழ், மகர யாழ் என ஏராள வகை உண்டு
அவை எல்லாம் லண்டன் மியூசியத்தில் பத்திரமாக இருக்கின்றது, எந்த தமிழனும் அதை வாசித்ததாக தெரியவில்லை
புகழ்பெற்ற எந்த தமிழ் இசையமைப்பாளரும் அதனை பயன்படுத்தியதாகவும் தெரியவில்லை, அது கொஞ்சம் சிரமானது என்கின்றார்கள்
அந்த யாழில் சில வகைகள் இன்றும் வெள்ளையரால் வாசிக்கபடுகின்றன, சில சீன தேவதைகளும் வாசிக்கின்றன, அவை எல்லாம் யாழ் என்பதன் வேறு வடிவங்கள் (harp).
தமிழனின் யாழ் என்ற நரம்பிசை கருவியில் இருந்து பிறந்ததே வீணை, கிட்டார், வயலின் இன்னபிற
அக்காலத்தில் இங்குதான் வாசிகபட்டது பின் மேற்காசியாவில் பரவியது பின் ஐரோப்பாவிற்கு சென்றது, இன்று அதனை சிறிய வடிவமாக்கி வாசிக்கின்றார்கள்
தமிழக பண்டைய யாழ்களில் 1000 நரம்புகள் வரை எல்லாம் இருந்ததாக ஆய்வுகள் சொல்கின்றன.
அந்த யாழினை திறம்பட வாசிக்க இங்கு தமிழன் இல்லை, அப்படி ஒன்று இருந்ததையே மறந்துவிட்டுத்தான் தமிழன் இசை டண்டனக்கா என கிளம்புகின்றான்
முடிந்தால் வெள்ளையனின் பியாணோ, கிட்டார் முதல் எல்லாவற்றையும் தூர எறிந்துவிட்டு யாழ் வாசித்து காட்டுங்கள், தமிழனின் இசை கருவியினை மீட்டெடுத்த விஷயமாக இருக்கட்டும்
அதை விட்டுவிட்டு கர்நாடக இசை கன்னடனுடையது, திருவயாறு இசை தெலுங்கனுடையது, என்னுடயது பறை ஏய் டண்டனக்க என கிளம்பாதீர்கள்
தமிழக இலக்கியங்களில் முரசரைந்த காட்சி உண்டே தவிர பறையடித்த காட்சிகள் மிக குறைவு.
ஆக பறை இசை மட்டும் தமிழர் இசை மற்றது எல்லாம் அடுத்தவன் இசை என்பதெல்லாம் அபத்தம்.
முடிந்தால் யாழினை படியுங்கள், அதுதான் தமிழரின் தனிபெரும் இசை கருவி