விசித்திரமான கிரிக்கெட் உலகிது
ஆசிய,ஆப்ரிக்க நாடுகளிலிருந்து வருமானம், கூடவே தொழில்புரட்சி அதாவது ஏகபட்ட உற்பத்தி, இப்படியாக 18ம் நூற்றாண்டில் செல்வத்தின் உச்சத்தில் இருந்தது பிரிட்டன், அவர்களுக்கு அன்று பெரும் சவால் விடும் நாடுகள் இல்லை, ஒரே ஒரு பெரும் மிரட்டல் நெப்போலியன், அவனையும் முடித்தாயிற்று.
பணம் தமிழக டாஸ்மாக்காய் கொட்டிற்று, பணம் அதிகமானால், வேலைக்காரர்கள் அதிகமாவார்கள். வேலைக்காரர்கள் அதிகரித்தால் முதலாளிகளுக்கு ஓய்வுநேரம் அதிகரிக்கும், பின்னர் என்ன விளையாட்டுத்தான்.
பிரிட்டிசார் எப்பொழுதுமே அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள், ஸ்டைலாக ஆட ஒரு பழைய ஆட்டத்தினை சீர்படுத்தினார்கள், அதன் பெயர் கிரிக்கெட். முதலில் டெஸ்ட் கிரிக்கெட்,பெரும் கட்டுபாடுகள் இல்லை ஓவருக்கு 9 க்கு மேற்பட்ட பந்துகள், ஒரு நாளைக்கு முடிந்தமட்டும் பந்துவீச்சுக்கள் என இருந்த காலம். அதாவது மாத கணக்கில் கூட நடக்கும்.
காலணிநாடுகளிலிருந்து வெயிலுக்கு பயந்து லண்டன் செல்பவர்கள், இந்த ஆட்டத்தில் பெரும்பங்கு வகிப்பார்கள்.இங்கிலாந்தில் ஆங்காங்கு கிரிக்கெட் கிளப்புகள் தோன்றின, பின் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பரவின. இன்னொரு நாடு கிரிக்கெட் ஆட ஆரம்பித்தால் என்ன ஆகும்? அதுதான் சர்வதேச கிரிக்கெட்டின் தொடக்கம்.
பின்னர் சர்வதேச கிரிக்கெட் விதிகள் வகுக்கபட்டு 1882ல் லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் மோதின.
பிரிட்டன் தாய்பூமி, ஆஸ்திரேலியா அக்காலத்தில் பிரிட்டன் குற்றவாளிகளை நாடு கடத்த பயன்பட்ட கண்டம். பொதுவாக இருவருக்கும் ஸ்டேட்டஸ் இடைவெளி அப்போது அதிகம், எவ்வளவு என்றால் 17ம் நூற்றாண்டில் கடும் சித்திரவதைகளுக்கும் வாய்திறக்காத பிரிட்டிஷ் குற்றவாளிகள், போலிசாரின் கடைசி கேள்விக்கு பயந்து சகலத்தையும் கொட்டிவிடுவார்கள்.
அது “நீயாக உண்மையை சொல்கிறாயா? இல்லை ஆஸ்திரேலியாவிற்கு உன்னை நாடு கடத்தட்டுமா?”
(இந்தியாவில் இப்போது இப்படி சட்டம் இருந்தால் எப்படி இருக்கும்? சிறைதாங்குமா?)
அப்படிபட்ட ஸ்டேடஸ் கொண்ட அணிகள் மோதின, வெற்றி ஆஸ்திரேலியாவிற்கு. இங்கிலாந்தால் தாங்கமுடியவில்லை. எவ்வளவு பெரும் அவமானம்? வித்தை சொன்ன குருவினையே சீடகோடிகள் வீழ்த்தினால் எப்படி? லண்டன் பத்திரிகைகள் சொன்னது “1882 ஆகஸ்ட் 29 அன்று லாட்ர்ஸ்லில் இங்கிலாந்து கிரிக்கெட் மரித்தது, எரித்துவிட்ட ஆஸ்திரேலியர் சாம்பலை அள்ளி சென்றுவிட்டார்கள்”.
அவ்வளவுதான் இங்கிலாந்து வீரர்கள், தற்போதைய இலங்கை அணியாக சீறினர், கோலி போல பேட்டி எல்லாம் கொடுத்தனர், அடுத்த வருடம் “ஆஸ்திரேலியாவினை வென்று, அந்த சாம்பலை கொண்டுவருவோம், போதுமா?”
அந்நாளைய இங்கிலாந்து கேப்டன் பிளிக், சூளுரைத்படி சென்றார், வென்றார். வெற்றி கோப்பையுடன், இன்னொரு கோப்பையும் சிலபெண்களால் கொடுக்கபட்டது, அதில் உண்மையிலே சாம்பல் இருந்தது. அதாவது கிரிக்கெட் ஸ்டெம்ப் பெல்சினை எரித்த சாம்பல். நீங்கள் சொன்னபடி சாம்பலை கொண்டு போங்கள், ஆஸ்திரேலிய அணி இம்முறை சாம்பலானது என்றார்கள்.
அன்றிலிருந்து தொடங்கியது இந்த ஆஷஷ் தொடர்.
கொஞ்சமும் விட்டுகொடுக்காத ஆட்டம், 120 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், இடையில் ஐ.சி.சி ஒருநாள் கிரிக்கெட், 20 ஓவர் கிரிக்கெட் என வந்துவிட்டாலும், ஏன் உலககோப்பை கொண்டாட்டம் தொடங்கினாலும், இன்றும் இந்த இரு தேசங்களும் ஆஷஷ் என்றால் பெரிய கிரீடமாக கருதுகின்றன.
இடையில் எவ்வளவு மாறிவிட்டது, வெஸ்ட் இன்டீஸ்லின் கருங்கோல் காலம், இந்தியா பாகிஸ்தான் இலங்கை அணி எழுச்சி, ஏன் வங்கதேசமே விட்டால் சாத்திவிடும் காலமிது, ஆனாலும் அவர்களின் பெருமை இன்னும் ஆஷஷ் கோப்பையில் இருப்பதாக கருதுகின்றார்கள்.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஆஷிஷ் தொடர் இது, கிரிக்கெட்டை கண்டுபிடித்ததை தவிர பெறும் வெற்றிகளை பெற்றதில்லை இங்கிலாந்து, ஆனால் கவலையில்லை.
முன்பெல்லாம் உலககோப்பை இறுதிவரை வந்துவிட்டு கோப்பையை பார்த்துவிட்டு செல்வார்கள், ஆனால் நாடு அமைதியாக இருக்கும், ஆனால் ஆஷஷ் தொடரில் தோற்றால் அப்படி அழுவார்கள்.
கடந்த ஆஷஷ் கோப்பையினை இங்கிலாந்து வென்றது, உலககோப்பையில் சொதப்பிய இங்கிலாந்திற்கு இங்கிலாந்தில் கடும் ஆதரவு, பிராட்டும், குக் கொண்டாடபட்டார், அதே கோஷம், “உலககோப்பை எப்படி போனால் என்ன? ஆஷஷ் நமது பெருமை”.
இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஷர்ஜா கோப்பை இப்படித்தான் இருந்தது, கடும் ஆக்ரோஷமானது, அப்படித்தான் அவர்களின் மியாண்டட் இன்றுவரை பாகிஸ்தானில் பெரும் புகழோடு இருக்கமுடிகின்றது,
இப்பொழுது அதனையும் நிறுத்திவிட்டார்கள், ஆனால் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் பங்காளி நாடுகள்தான், உலகில் எங்கு மோதினாலும் பரபரப்பு இருக்காது, ஆனால் ஆஷஷ் என்றால் தனி உற்சாகம்.
இந்தியா எந்த அணியுடன் தோற்றாலும் விட்டுவிடுவார்கள், சமீபத்திய வங்கதேச அடியை கூட, தடவி விட்டார்கள், ஆனால் பாகிஸ்தானுடன் எங்காவது தோற்றால் டிவி முதல் வீரர்களின் வீட்டு கதவு வரை கல்பறக்கும்.
அவரவர்களுக்கு அவரவர் பெருமை, விசித்திரமான கிர்க்கெட் உலகிது.
ஆஸ்திரேலிய அணி காயங்களை துடைத்துகொண்டிருக்கின்றது, இம்முறை விடவே மாட்டார்களாம் சொல்லிகொள்கின்றார்கள். அவர்கள் பாரம்பரிய சண்டையான ஆஷஸ் இன்று தொடங்குகின்றது.
“இல்லை விட்டு பாருங்கள் அப்புறம் இருக்கின்றது” என ஆஸ்திரேலிய மக்களும் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்.