மலேசியாவில் ஒரு திருமணம்….
இங்கு திருமணங்களை காண்பது சுவாரஸ்யமான விஷயம், காரணம் மணமக்கள் நல்ல புரிதலில் உள்ளவர்கள் என்பதால் மகிழ்ச்சியாய் இருப்பார்கள், பெற்றோர் வரதட்சனை இல்லை என்பதால் அவர்களுக்கும் மகிழ்ச்சி.
நல்ல உணவு என்பதால் நமக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி…
எல்லா திருமணங்களும் மிக சரியாக சனிகிழமைதான் நடைபெறும், அன்றுதான் எல்லோருக்கும் விடுமுறை என்பதால் அதுதான் கரிநாள் ஆயினும் கல்யாண நாள்
அப்படி ஒரு திருமணத்திற்கு சென்றாயிற்று, மணமகனின் தாத்தா திராவிட கழகத்தவராம், (பிழைக்க குடியேறிய நாட்டில் அதுவும் வெள்ளையன் ஆள , மலாய் மக்கள் நிரம்பிய நாட்டில் திராவிட கொள்கைக்கு என்ன அவசியம் என்றே தெரியவில்லை)
ஆனால் பிள்ளைகள் ஆளுக்கொரு மதத்திற்கு சென்றாயிற்று, சிலர் கிறிஸ்தவம் சிலர் தாய்மதம் சிலர் பகாய் மதம்
இவர் கிறிஸ்தவர் என்பதால் சர்ச்சில் திருமணம், பொதுவாக இங்கு அப்படியே ஆங்கில கலாச்சாரம். மணமகன் கோர்ட் அணிந்திருந்தார் மணமகள் வெள்ளை கவுண் அணிந்திருந்தார், மோதிரம் மாற்றினார்கள்
தமிழகத்தில் இது வித்தியாசமாக இருக்கும் மணமகன் கோட் அணிந்திருப்பார், ஆனால் மணமகளை பட்டுசேலை சுற்றி நிறுத்தியிருப்பார்கள், மாலை போட்டு சந்தணம் பூசி தாலிகட்டி ஒரு மாதிரி குழப்பமான கலாச்சாரமாக இருக்கும்.
அது தமிழக முறையிலும் சேராது, ஆங்கில முறையிலும் வராது. அவர்களே வகுத்துக்கொண்ட புதுமுறை
பாதிரியார் வழக்கம் போல புத்திமதி சொல்லி பிரசங்கம் செய்து, மணமக்களுக்கு போதித்து கொண்டிருந்தார், அவனும் அட்சரம் பிசகாமல் தலையாட்டிகொண்டிருந்தான், அச்சமயம் பாகம்பிரியான் என்னை ஒரு மாதிரி பார்த்தார், அதன் அர்த்தம் எனக்கு மட்டுமே புரியும்
அடுத்து பந்தி, நல்ல அரங்கில் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஓடி சென்று கரகாட்டகாரன் செந்தில் போல இது என் இடம் என அமர்ந்துகொண்டேன், ஏகபட்ட ஐட்டங்கள். முன்பெல்லாம் ஒரே ஐயிட்டத்தை விழுங்கிவிட்டு மற்ற அயிட்டங்களை பார்த்து அழுதுகொண்டிருப்பேன், இப்போது அனுபவ ஞானம் கொட்டிற்று
ரசித்து விழுங்கும் பொழுது அருகே ஒரு சகோதரி வந்தமர்ந்தார், பேச்சு தமிழக திருமண பக்கம் சென்றது
“இங்கெல்லாம் வரதட்சனை இல்லை தெரியுமா, அவரவர்கள் படித்து வேலைக்கு வரவேண்டியது, தனக்கு பொருந்த கூடியவரை தேட வேண்டியது, அடுத்து சம்பாதிதித்து வீடு,கார் , திருமண செலவுகளுக்கு சேர்க்க வேண்டியது திருமணத்தை நடத்தவேண்டியது, யாரும் யாருக்கும் பாரமில்லை ஆனால் உங்கள் ஊரில் வரதட்சனை தந்தால்தான் திருமணமாம் அப்படியா ?” என்றார், பேச்சு நீண்டது சட்டென கேட்டார்
“நீ வர்தட்சனை வாங்கினாயா?
ஆம், வாங்கினேன்
எதற்கு, உன்னிடம் பணமில்லையா அவர்கள் அப்பா அம்மா பணம் உனக்கெதற்கு? உனக்கு சம்பாதிக்க தெரியாதா?”
செவிட்டில் அடித்தது போல் இருந்தது, ஆனாலும் சுதாரித்தேன் அந்த பணம் எல்லாம் திருமணத்திற்கு செலவுக்கு சரியாக இருக்கும், நகைகள் எல்லாம் பிற்கால பாதுகாப்பு என்றேன்
ஏன் உன் மனைவிக்கு உன் செலவில் தாலி செய்ய முடியாதா? அவர்களிடம் பணம் வாங்கி அவர்கள் மகளுக்கே தாலி செய்வாயா? அவ்வளவு ஸ்மார்ட்டா நீ, உனக்கு தேவையானதை சம்பாதிக்க தெரியாவிட்டால் எதற்கு திருமணம்?” என்றார்
தட்டில் இருந்த மட்டன் என்னை பார்த்து சிரிப்பது போல் இருந்தது, விட்டால் தட்டினை பிடுங்கிவிடுவாரோ என்ற அச்சமும் இருந்தது தட்டை இறுக்கி பிடித்துகொண்டேன் அவர் விடவில்லை
“பார், அந்த பணம் அவர்கள் பெற்றோர் சம்பாதித்தது, உன்னை நம்பி வரும் பெண்ணுக்கு நீதான் நகை செய்து போடவேண்டும் அவளை கவனித்துகொள்ளவேண்டும் அதுதான் ஆண்களுக்கு அழகு, உனக்கு வெட்கமாக இல்லையா” என்றார்?
சுத்தமாக இல்லை என சொல்லிவிட்டு என் போக்கில் சாப்பிட்டாலும் மனதில் பெரும் வலி, “ம்ம் அவளின் எதிர்காலத்திற்கு நான் தானே பாதுகாப்பு..” அதனால்தான் என்றேன்.
திருமணம் என்பது பெண்ணின் எதிர்கால பாதுகாப்பிற்கு செய்யபடுவது, அந்த பணத்திற்கு அப்பெண்ணிற்கு முதலிடு இட்டு தொழில் தொடங்கி கொடுத்தாலே பிழைத்துகொள்ளுமே நீ எதற்கு மேன்?
எனக்கு என்ன சொல்ல என தெரியவில்லை, ஆனால் ஏதோ நினைவுக்கு வந்தது
அது வந்து.. 20 வருடம் அப்பன் வீட்டில் இருக்கின்றார்கள், அதன் பின் மீதி நாளேல்லாம் எங்கள் வீட்டில்தான் இருப்பார்கள் அதான் மொத்தமாக கொண்டுவரசொன்னோம்
அப்படியா? இதற்கு அந்த பெண் உலக சுற்றுபயணமே செய்யலாமே, ஏன் உன் வீட்டில் வந்து தங்க வேண்டும்?
பதில் சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை, குனிந்துகொண்டேன் அவர் விடுவதாக இல்லை
“அப்பெண்ணை வரதட்சனை கொடுக்கவில்லை என்றால் கொடுமைபடுத்துவார்களாம் கேள்விபட்டிருக்கின்றேன், சில இடங்களில் கொலையும் நடக்குமாம். தன் மனைவி பணத்தோடு வரவில்லை என சில கணவர்கள் தாய் தந்தையோடு சேர்ந்து விரட்டுவார்களாம், அவன் மனைவி மீது அந்த பையனின் பெற்றோருக்கு என்ன உரிமை இருக்கின்றது? அவள் வாழவந்திருக்கும் பெண் அல்லவா? இவர்கள் எப்படி மிரட்டலாம், இதனை விட மானங்கெட்ட விஷயம் உலகில் உண்டா?
இதற்கு மேல் தலைபொங்கல் படி, முதல் குழந்தைக்கு சங்கிலி என் பல விஷயங்கள் உன்டாம். கட்டிய மனைவியோடு முதல் பண்டிகை கொண்டாடவும், முதல் குழந்தை பெற்றெடுக்கவும் அவள் அப்ப்பன் வீட்டை எதிர்பார்க்க வேண்டுமா? இதற்கு அந்த பெண் உங்கள் வீட்டிற்கு வரும் அவசியமே இல்லையே மேன்?
காக்கா குருவி கூட ஒரு கூடுகட்டித்தான் தன் குடும்பமாக, தன் உழைப்பில் வாழும் , நீங்கள் அதனை விட மோசமானவர்களா?”
பாரதி அன்னிபெசண்ட் அம்மையார் முன்னால் குனிந்து நின்றது போல் நின்றேன்
உண்மையும் அதுதான், வரதட்சனை எனும் பெயரில் பெண்ணின் பெற்றோரின் வாழ்வின் மொத்த உழைப்பினையும் உறிஞ்சும் சமூகத்தில் இருக்கின்றோம் என்பது புரிந்தது
“நீயாவது திருந்து..” என்றார், “திருந்திவிட்டேன்..” நன்றாய் திருந்திவிட்டேன் என் மகளுக்கு வரதட்சனை கொடுக்கபோவதில்லை என்றேன்
“நீ வாங்கின இல்ல..” என்றார் “ஆமாம், ஆனால் திருந்திவிட்டேன் அதனால் இனி கொடுக்கமாட்டேன் ” என்றேன்
“நீ திருந்தவ மாட்ட.” என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
தனக்கு பொருத்தமானவர்களை தேடி கண்டறிந்து, ஒரு பைசா வரதட்சனை கொடுக்காமல், யார் மனதிலும் எந்த பாரமும் வைக்காமல் சிறகடிக்கும் பறவைகளாய் திருமணம் செய்தவர்களை பார்க்க மகிழ்ச்சியாகத்தான் இருந்தது
அவர்கள் பெற்றொர்களை பார்க்க இன்னும் மகிழ்ச்சியாய் இருந்தது.