சமத்துவத்தையும், சம தர்மத்தையும் விரும்பும் எல்லோரும் கொண்டாடலாம்
அந்த அரேபியாவின் மக்கள் சிதறிகிடந்தனர், அவர்களை வழிநடத்தவோ அவர்களுக்கு நல்வழிபோதிக்கவோ யாருமில்லை. யூதர்கள் ஒருவித உயர் மனப்பான்மையில் அவர்களை தாழ்த்தித்தான் வைத்திருந்தனர். அம்மக்களை ஒருங்கிணைக்கவோ அந்த மூர்க்கமான சமூகத்தில் அமைதி கொண்டுவரவும் யாருமில்லை
இந்ந நிலையில்தான் இறைவனின் தூதனாக நபிபெருமான் அவதரித்தார், நிச்சயமாக அவர் அறிவிக்கபட்டு இந்த உலகிற்கு கொடுக்கபட்டவர்
அவர் இளமையிலே தனக்கான பாதையினை தேர்ந்தெடுத்தார், அந்த சமூகத்தின் தனக்கான தூயபாதையினை தேர்ந்தெடுத்தார், முதலில் அவரை விரட்டினாலும் பின் சமூகம் அவரை ஏற்றுகொண்டது
அவர் பின் அணிதிரண்டது, அந்த மக்களுக்கு நல்வழியினை போதித்தார், அம்மக்கள் அவரை கடவுளின் தூதராக எண்ணி அவருக்கு அஞ்சி நடந்தனர்
அவரிடம் மிக மிக நல்ல விஷயம் ஒன்று உண்டு, எந்த மதத்தையும் அவர் வெறுக்கவில்லை. யூதம் கிறிஸ்தவம் என எல்லாமதத்தின் கொள்கைகளையும் ஏற்றுகொண்டுதான் மார்க்கத்தை உருவாக்கினார்
யூதர்கள் அவரை விரட்டினார்களே ஒழிய அவர் யூதர்களை வெறுக்கவில்லை, மாறாக கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் யூதர்களுக்கு மட்டுமல்ல என்பதில்தான் அவர் யூதர்களால் ஒரு மாதிரியாக பார்க்கபட்டார்
நிச்சயமாக சொல்லலாம், இவ்வுலகிற்கு மிக தேவையான , மானிடம் மானிடமாக வாழும் கருத்தைத்தான் அவர் சொன்னார், அதில் சில சர்ச்சைகள் வருமாயின் அது அவர் பின்னால் வந்தவர்கள் உருவாக்கிகொண்டதே தவிர நபிபெருமான் சொன்னது அல்ல
இந்த உலகின் பெரும் மாறுதல்களை கொண்டுவந்தவரகள் என்ற வரிசையில் நபிபெருமானுக்கு நிச்சயம் பெரும் இடம் உண்டு, அரபிய பகுதியின் தலைவிதியினையே மாற்றியவர் அவர்
அவரின் வழிவந்த கலீபாக்கள் ஐரோப்ப்பா முதல் இந்தியா வரை மிக பெரும் சாம்ராஜ்யத்தை நிறுவினார்கள், அது மிக பெரும் சொர்க்கமாக இருந்திருக்கின்றது, மிக மிக நியாயமான ஆட்சி இறைவன் பெயரால் நடந்திருக்கின்றது
பல்லாண்டுகள் அது நீடித்தும் இருக்கின்றது , அதன் மூலம் உலகெல்லாம் பரவியும் இருக்கின்றது
இஸ்லாம் என்ன கொண்டுவந்தது என கேட்டால் தயக்கமின்றி சொல்லலாம், அது சமத்துவத்தை கொண்டு வந்தது, சமதர்மத்தை கொண்டு வந்தது, ஆண்டவன் முன் எல்லோரும் சமம் எனும் ஒரே சிந்தனையினை கொண்டுவந்தது
இந்தியாவில் சாதி போன்ற கொடுமைகளை ஒழித்ததில் இஸ்லாமுக்கும் பங்கு உண்டு. இஸ்லாம் ஜாதியினை வென்றது ஒத்துகொள்ளத்தான் வேண்டும்
தமிழகத்தில் ஜாதி முன் தோற்ற மதம் எது தெரியுமா? அது கிறிஸ்தவம், அதனால் ஜாதியினை களைய முடியவே இல்லை ஆனால் இஸ்லாம் அட்டகாசமாக ஒழித்தது
கடவுளின் கடைசி தூதராக வந்து வாழ்ந்து போதித்த நபிபெருமானுக்கு பிறந்த நாளாக மிலாது நபி கொண்டாடபடுகின்றது
மிலாது என்றால் பிறப்பு என பொருள், நபி பிறந்த நாள் அது
கிறிஸ்மஸ் போலவே மிலாது நபி கட்டாயம் கொண்டாட வேண்டிய பண்டிகை அல்ல, கிறிஸ்துவும் நபியும் தங்கள் பிறந்தாளை கொண்டாட சொல்லவே இல்லை
ஆனால் நல்லவர்கள் பிறந்தநாளை கொண்டாடாவிட்டால் என்ன நன்றிகடன் என்ற வகையில் உலகம் கொண்டாடுகின்றது
மனிதனை மனிதனாக நேசித்த, கடவுளின் பால் மக்கள் மனதை திருப்ப உழைத்த, இந்த உலகம் மிக அமைதியாக வாழ பல உன்னத கருத்துக்களை சொல்லிவிட்டு சென்ற அந்த மாமனிதனின் பிறந்தநாளை இஸ்லாமிய பெருமக்கள் மட்டுமல்ல
சமத்துவத்தையும், சம தர்மத்தையும் விரும்பும் எல்லோரும் கொண்டாடலாம்