கார்த்திகை தீபமேற்றபோகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தமிழ் மாதங்களில் தனிசிறப்புமிக்கது கார்த்திகை மாதம் பல வகையான சிறப்புக்களை கொண்டது, கார்த்திகை தீபமும், சொக்கபனையும் இன்னும் பலவகையான தனிசிறப்புக்களையும் கொண்டது.
கார்த்திகை தீப தத்துவம் மிக மிக எளிதானது, அதாவது இறைவன் ஒளிவடிவானவர் என்பது சகல மதங்களின் நம்பிக்கை, அந்த நம்பிக்கை இல்லாத மதங்கள் இல்லை, அந்த நம்பிக்கையின் இந்துமத வடிவமே கார்த்திகை தீபம்.
புகழ்பெற்ற திருவண்ணாமலை தலம் அதனை உலகுக்கெல்லாம் மெய்பிக்கின்றது,
சிவபெருமானின் ஆதிஅந்தத்தை காணமுடியாத நிலையில் அவர் மாபெரும் ஜோதியாக தன்னை வெளிபடுத்தினார் என்பது அத்தலத்தின் பெருமை. அதன் தொடர்ச்சியாக இன்றுவரை அங்கு மகா தீபம் ஏற்றபடுகின்றது.
சுருக்கமாக சொன்னால் இறைவன் ஒளிவடிவானவர்.
சிலப்பதிகார காலத்தில் இருந்தே கார்த்திகை தீபம் கொண்டாடபடுகின்றது, இன்னும் பல பண்டைய இலக்கியங்களிலும் அது காணப்படுகின்றது. கார்த்திகை மாதம் என்றவுடன் முதன்முதலில் நினைவுக்கு வரும்விஷயம் இந்து நண்பர்களின் தெய்வம் முருகன், அவரை வளர்த்த கார்த்திகை பெண்கள்.
தமிழர் கடவுளான முருகனுக்கு மட்டும் இரண்டு நட்சத்திரங்கள் உகந்தது, ஒன்று விசாகம் இன்னொன்று கார்த்திகை, வைகாசிவிசாகமும் கார்த்திகை மாத பவுர்ணமியும் முருகனுக்கு மிக மிக உகந்த நாட்கள்.
தமிழகம் கார்த்திகை மாதம் கடும் பரபரப்பாக இருக்கும், கார்த்திகை தீபம், பாரம்பரியமிக்க தெப்பதிருவிழா , சொக்கபனை என பல கொண்டாட்டங்கள் நிறைந்தது.
அதுவும் கார்த்திகை தீபம் அன்று ஓலைகொழுக்கட்டை மகா பிரசித்தி பெற்ற ஒன்று, இந்து மதம் எனும் எல்லையையும் கடந்து கிட்டதட்ட எல்லா மக்களும் கொண்டாடும் நாள் கார்த்திகை தீபம்.
மதம் கடந்து எல்லா வீடுகளிலும் விளக்கேற்றுவார்கள், ஓலை கொழுக்கட்டை அல்லது பூவரசு இலையிலாவது கொழுக்கட்டை அவிப்பார்கள், மிக மிக மணமான, சுவையான கொழுக்கட்டை கிட்டதட்ட 1 வாரம் அந்த பகுதியை மணக்கசெய்யும். உலகின் வேறு எந்த பாகத்திலும் கிடைக்காத பலகாரம் அது, தமிழரின் அடையாளங்களில் ஒன்று.
இன்னும் கார்த்திகை மாத கடைசிவெள்ளிகிழமை சாஸ்தா கோயிலில் படையலிடுவார்கள், அதற்கான காரணம் இதுதான்
அதாவது கார்த்திகையில் கனமழை என்பது நமது நம்பிக்கை, அக்காலத்தில் கார்த்திகை மாதம் எல்லா குளங்களும் நிரம்பி இருக்கும், விவசாய பணிகள் தொடங்கும் முன் அந்த காவல் தெய்வங்களை நன்றியோடு நினைக்கும் நாள்.
இறைவன் ஓளிவடிவானவர் என்பதை உணர்த்தும் அற்புதமான பண்டிகை கார்த்திகை தீபம். அதனை கொண்டாடும் அல்லது அதனை பார்க்கும் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ளவேண்டிய தத்துவம் இது.
கார்த்திகை தீபமேற்றபோகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
கார்த்திகை விளக்கு திரிமுதல், ஓலை கொழுக்கட்டை வரை படங்களாக எடுத்து நண்பர்கள் அனுப்புவார்கள். தொலைதூரத்தில் இருந்தாலும் அதையாவது பார்க்க கொடுத்து வைத்திருக்கின்றது அல்லவா? அதுவரை நாம் அதிர்ஷ்டசாலி.