இன்று சோனியாவிற்கு பிறந்த நாள்
இன்று சோனியாவிற்கு பிறந்த நாளாம்
எல்லோருக்கும் ஒரு விதி என்றால் அவருக்கு வேறு மாதிரியான விதி
இத்தாலி பிறப்பு, லண்டனில் வேலை செய்ய சென்றபொழுது ராஜிவினை சந்திக்கின்றார், விதிப்படியே அது காதல், திருமணம் என மாறிவிட்டது.தன் அரசியல் வாரிசு ராஜிவ் அல்ல என்ற எண்ணத்தில் இருந்த இந்திராவிற்கு அந்த திருமணத்தில் தயக்கம் ஏதும் இருக்கவில்லை.
பெரும் பாரம்பரியமிக்க நேரு குடும்பத்தில் வந்தபின் முழுக்க முழுக்க இந்தியபெண்ணாகவே மாறினார் சோனியா. மொழி, உடை என இந்திய அடையாளங்களிலே மாறிகொண்டார்.
இந்திராவிற்கும் அவர் மீது ஒரு நல்ல அபிப்ராயம் இருந்தது.
பெரிய வாழ்க்கை வாழ இந்தியாவிற்கு வந்தவர்தான் சோனியா, ஆனால் அழைத்து வந்த விதி, அவரை நிம்மதியாக இருக்கவிட்டதா என்றால் இல்லை
இந்திராவின் வாரிசு என கருதபட்ட சஞ்சயின் மரணம் அக்குடும்பத்தில் முதல் அடி.
கொஞ்சநாளில் இந்திராவும் கொலை செய்யபட்டுவிட்டார், ராஜிவ் களமிறக்கபடுகின்றார்
எப்படி இருக்கும் சோனியாவிற்கு?
சுற்றிலும் பகைகள், சொந்த மெய்காப்பளனே இந்திராவினை சொந்த வீட்டில் கொன்றபின் எங்கே பாதுகாப்பு? பிஞ்சு குழந்தைளுடன் அவர் நடுங்க, இந்திரா குடும்பத்தை வேரறுப்போம் என கேட்ட கோஷங்கள் அவரை என்ன பாடு படுத்தியிருக்கும்?
ஈழசிக்கலில் விதி தள்ள ராஜிவ் தடுமாறுகின்றார், கூடவே போபர்ஸ் பேர ஊழலும் வந்து அடிக்கின்றது, இரண்டையும் சமாளித்துகொண்டிருக்கும் வேளையில்தான் ராஜிவ் கொலை நடந்தது.
கொழுந்தனும், மாமியாரும், கணவனும் கொடூரமாக கொல்லபட பிஞ்சு குழந்தைகளுடன் ஒரு பெண், அதுவும் வெளிநாட்டுபெண் என்ன செய்திருப்பாள். இந்தியா பாதுகாப்பான தேசம் அல்ல என அலறி அடித்து ஓடியிருப்பாள்
ஆனால் சோனியா துணிந்தார், என்னவோ தெரியவில்லை பெண்களுக்கு அழுத்தமும் சில வைராக்கியங்களும் சில நேரங்களில் வந்துவிடுகின்றன, இந்தியாவிலே அமர்ந்தார்.
கட்சியில் இருந்தும் ஒதுங்கினார், ராஜிவ் அலையில் அனுபவசாலி நரசிம்ம ராவ் தான் பிரதமர் ஆனார்.
இந்த நேரத்தில்தான் அதாவது இனி காங்கிரஸினை நடத்த யாருமில்லை என்ற நேரத்தில்தான் கொடுமையான பாபர் மசூதி இடிப்பும் கலவரங்களும் அதிகரித்தன, மத ரீதியான கோஷங்கள் வலிமை பெற்றன
காங்கிரஸ் தன் பலத்தினை இழந்திருந்தது, சீதாராம் கேசரி போன்றவர்கள் தடுமாறினர். கிட்டதட்ட அது அழிந்துகொண்டிருந்தது, இந்த நேரத்தில்தான் களம் இறங்கினார் சோனியா
என்னவோ தெரியவில்லை, மக்களிடம் அவருக்கு வரவேற்பு இருந்தது, நேரு குடும்பத்தின் வாரிசுகளில் ஒன்றாகவே அவரை கண்டார்கள். ஆதரவளித்தனர்
காங்கிரஸ் கட்சியினை தூக்கி நிறுத்தினார் சோனியா, உண்மை. இனி காங்கிரஸ் இல்லை அங்கு யாரும் இல்லை என்றவர்களுக்கு சோனியா பெரும் சவால், காங்கிரசை மீட்டார்.
வெளிநாட்டில் பிறந்தவர் ஆள அனுமதிக்கமாட்டோம் என போர்கொடி தூக்கினார் அத்வானி, கட்சிக்குள்ளும் சங்மா, சரத்பவார் என எதிர்ப்புகள் எழுந்தன , சில பிரிவுகளும் நடந்தன
மன்மோகன் சிங்கினை அமர்த்திவிட்டு லகானை கையில் பிடித்தார் சோனியா, நன்றாக தெரிந்தது ஆட்சி சோனியாவுடையது ஆனால் மன்மோகன்சிங்கின் நியாமனான செயல்பாடுகளை அவர் தடுக்கவில்லை
ஓரளவு நல்ல ஆட்சியினைத்தான் சோனியா கொடுத்தார். கூட்டணி சிக்கலில் சில பிரச்சினைகள் வந்திருக்கலாம், கூட்டணிக்காக சில காரியங்களை அவர் பொறுத்திருக்கலாம், காரணம் நிச்சயம் அவர் அல்ல
சோனியா வெளிநாட்டு உளவாளி, சோனியா ராஜிவ் கொலையில் அக்கறை காட்டவில்லை என பலர் புகார் பட்டியல் வாசிப்பார்கள், நிச்சயமாக அப்படி இருக்க முடியாது
அரசியல் அவர் மீது திணிக்கபட்டதே தவிர, அவராக ஏற்கவில்லை. குடும்பம் காலம் காலமாக செய்து வந்த சேவைகளை ஒரு இந்திய மருமகளாக தொடர்ந்தாரே அன்றி வேறல்ல
ராஜிவ் கொலையில் குற்றவாளிகளின் மரண தண்டனையினை அவர் ஆயுளாக மாற்றினார், ராஜிவ் கொலையின் உண்மை குற்றவாளிகள் பெரும் கைகள், எதிர்க்க முடியாத கைகள்
மூன்று படுகொலைகளை நேரில் அண்ணியாக, மருமகளாக, மனைவியாக பார்த்தவரின் தாய்மனம் சில் எச்சரிக்ககளில் ஒதுங்கியது
புலிகளை அவர் அழிக்க நினைத்திருந்தால் 1995ல் சந்திரிகாவுடன் கை கோர்த்தால் முடிந்தது விஷயம், யாழ்பாணத்தை சந்திரிகா மீட்டபொழுதே பிரபாகரன் கதையினை முடிக்க சில நாழிகை ஆகியிருக்காது, சோனியா செய்யவில்லை, காரணம் உண்மை குற்றவாளி யாரென அவருக்கும் தெரிந்திருந்தது
2009 இறுதியுத்தத்தில் சோனியாவினை சாடுபவர்கள், பிரபாகரனின் மவுனத்தை புலிகளின் அமைதியினை சொல்லமாட்டார்கள், இந்தியா எதிர்பார்த்தது அதுதான், பிரபாகரன் வாய்விட்டு சில விஷயங்களை பேசவேண்டும் என எதிர்பார்த்தது, பிரபாகரன் வாய்விட்டு சொன்னது என்ன?
“வைகோவும், நெடுமாறனும் எங்களுக்காக இந்தியாவில் போராடுவார்கள்”, இது உருப்படுமா?
இறுதி யுத்தம் யாராலோ நடத்தி, யாரெல்லாமோ செத்தார்கள், பிரபாகரனிடம்தான் யுத்தம் நிறுத்தும் சக்தியும் வார்த்தையும் இருந்தது, மனிதர் மகா மவுனம், செத்தும் போனார்
சோனியாவினை நினைத்துபார்த்தால் சில விஷயங்கள் புரியும்
இந்தியா வந்தபின் இந்திய மகளாகவே மாறினார், இந்திய பாரம்பரியத்திற்கு வந்தார்
கிட்டதட்ட 45 ஆண்டுகால இந்திய வாழ்வில் ஒரு சர்ச்சையிலும் அவர் சிக்கியதில்லை, அதுவும் இன்றுவரை அவரின் தனிபட்ட முறையில் கூட எதிரிகளால் ஒரு குற்றச்சாட்டையும் வைக்க முடியாது.
அப்படி தூய இந்திய விதவையாகவே வாழ்ந்தார்.
மதரீதியான போக்குகளை உடையவர்களே அவரை சாடுவார்கள், காரணம் சோனியா அழிந்த காங்கிரசை மீட்டார், அந்த காங்கிரஸ் ஒரு நாளும் மதவாதத்தை ஆதரிக்காது
இன்று மோடி வந்துவிட்டதாகவும், காங்கிரஸ் அழிந்துவிட்டதாகவும் பலர் சொல்லிகொண்டிருக்கலாம்
10 ஆண்டு காலம் தொடர்ந்து ஆண்டுவிட்டு இப்போது பாஜ ஆட்சி நடக்கின்றது, இவர்கள் செய்யும் அழிச்சாட்டியங்களை கண்டால் அடுத்த ஆட்சி கண்டிப்பாக காங்கிரசுக்கே
இருக்கட்டும்
இன்று பிறந்தநாள் காணும் அவரை வாழ்த்துவோம், அவர் பல்லாண்டு வாழட்டும்
இன்றைய இந்தியா மதவாதமில்லாத இந்தியாவாக இருக்க ஒரு வலுவான எதிர்கட்சி அவசியம், தேசிய அளவில் அவசியம்
பாஜக் எனும் தேசிய கட்சியினை எதிர்க்க தேசிய அளவில் காங்கிரஸ் அவசியம்
அதே நேரம் பாஜக எனும் தேசிய கட்சியும் நாட்டுபற்றளவில் இருக்கட்டும், மதவாதமே ஆபத்தானது.
அப்படி காங்கிரஸ் எனும் தேசிய கட்சி எந்நாளும் இந்நாட்டில் தேவையே
அதனை காத்து மீட்டெடுத்து இன்று நிறுத்தியிருக்கின்றார் சோனியா, மறக்க முடியாதவர்
1967ல் தமிழகத்தில் காலிசெய்யபட்டது காங்கிரஸ், 1989ல் சோனியா ராஜிவோடு சூறாவளி சுற்றுபயணம் செய்தும் 25 இடங்கள்தான் கிடைத்தன. அதன் பின் அது தனியே நிற்கவே இல்லை
இப்பொழுது தமிழக சூழல் மாறுகின்றது, பெரும் ஆலமரங்கள் சரிகின்றன, பெரும் மாற்றங்கள் இனி சாத்தியம்
தேசிய அளவில் காங்கிரசில் கேசரி கோஷ்டி, நரசிம்ம ராவ் கோஷ்டி என பல கோஷ்டிகளை ஒழித்த சோனியா, தமிழக கோஷ்டிகளையும் ஒழித்துகட்டி வலுவாக்கட்டும்
தமிழகத்தில் பாஜக வளர்வது சாத்தியமா, காங்கிரஸ் வளர்வது சாத்தியமா? என்றால் நிச்சயம் காங்கிரசுக்கே வாய்ப்பு மகா அதிகம்
இவைகளை காலம் காட்டும்
எங்கோ பிறந்து, இங்கு வந்து ரத்த காட்சிகளை கடந்து இந்த தேசத்தின் மாபெரும் கட்சியினை வலுவாக்கி வைத்திருக்கும் அந்த பெண்மணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சோனியாவிடம் கற்றுகொள்ள நிறைய உண்டு எனினும் தற்போதைய தேவை சசிகலாவிற்கு இருந்தது
வெளிநாட்டுக்காரி சோனியா என பெரும் எதிர்ப்பினை எப்படி மன்மோகன் சிங்கினை கொண்டு ஆட்சி செய்து கட்சியினையும் ஆட்சியினையும் சோனியா காப்பாற்றினாரோ
அப்படியே ஒரு நல்ல நிர்வாகியினை கொண்டு ஆட்சியினையும் கட்சியினையும் சசிகலா மிக அழகாக கொண்டு சென்றிருக்கலாம் தான்
ஆனால் மகா அவசரபட்டு குழிக்குள் விழிந்துவிட்டார், சரி இது சசிகலா பிரச்சினை
ஒரு விதவை கோலத்துடன், பெரும் பாதுகாப்பு பிரச்சினைகளுடன் அவர்களையும், கட்சியினையும், அதன் மூலம் இந்த நாட்டினையும் காத்து நிற்கும் சோனியாவின் வாழ்வு ஒரு தவ வாழ்வே, சந்தேகமே இல்லை
(தியாக தலைவி எனும் வார்த்தை சோனியாவிற்குத்தான் பொருந்தும், ஆனால் யாரெல்லாமோ சூட்டிகொண்டபின் அப்பெயரே களங்கபட்டு நாசமாயிற்று, மரியாதையே போயிற்று..)
இந்த தேசம் தத்தெடுத்த முத்தான தலைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இப்பொழுது ராகுலை தலைவராக்கிவிட்டு கிட்டதட்ட தன் கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு ஏதோ சொல்ல வரும் அவரை நினைக்கையில் கண்கள் கலங்குகின்றன
எங்கிருந்தோ வந்து இத்தேசத்தின் மிகபெரும் கட்சியினை காத்துவிட்டு , அதற்கோர் தலைவனையும் கொடுத்துவிட்டு கை அசைக்கும் அவரை கண்டால் ஏதோ ஒரு உணர்வு மனதில் அழுத்தத்தான் செய்கின்றது
அவர் பல்லாண்டு வாழட்டும்,
இந்திராவும், ராஜிவும் வாழாத அந்த ஆயுள்நாளெல்லாம் சேர்த்து அவர் பல்லாண்டு வாழட்டும், அவர் சேவை தொடரட்டும்.
அன்றே கலைஞர் சொன்னது முக்கால உண்மை “சொக்க தங்கம்” சோனியா
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாயே…