அந்த கவியரசிக்கு வாழ்த்துக்கள்
அந்த பெண் கவிஞர் நிச்சயம் வாழ்த்துகுரியவர், தமிழகத்தில் அவ்வையாருக்கு பின் பெண் கவிஞர்கள் குறைவு, அதுவும் தமிழக திரையிசைபாடல்களில் பானுமதி என்பவர் ஏதோ எழுதினார் என்பார்கள் உறுதியான செய்தியில்லை. ஆனால் பெரும் போராட்டத்திற்கு பின் தனக்கென ஒரு இடம் பிடித்திருப்பவர் அவர், எளிதில் பிடித்துவிட்ட இடம் அல்ல அது.
Kavignar Thamarai , அவர் பாடல் எழுத வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டதாம்
கவிஞர்களில் அவர் கொஞ்சம் வித்தியாசமானவர், ஆச்சரியமானவர் .
சுத்த தமிழ்வார்த்தைகளில்தான் பாடல் எழுதுவேன் என சொல்லி இன்றுவரை நிலைத்தும் இருப்பவர்.
அந்த உறுதி பாராட்டதக்கது. இது ஹாலிவுட் படமா என டிக்கெட்டை அடிக்கடி பார்த்துகொண்டே இருக்க வைக்கும் கவுதம் மேனன் போன்ற ஆங்கிலம் அதிகம் வரும் படங்களிலும் தமிழில் மட்டும்தான் எழுதுவேன் என நிற்பது பெரும் விஷயம்
பாரதியே ஆங்கிலத்தில் கட்டுரை எழுதினான், அவன் தொழில் அது , தொழில் தர்மம் அது.
திரையுலகில் அது முடியாத காரியம் ஆனானபட்ட கண்ணதாசனே “ஜாலியோ ஜிம்கானா” என மெட்டுக்கு வரிகளை போட்ட திரையுலகம் இது, எந்த தமிழ் திரை கவிஞனும் தப்பவில்லை
அப்படிபட்ட திரையுலகில் மிக தேர்ந்த தமிழ் வரிகளை கொண்டு மிக நுண்ணிய உணர்வுகளை மிக அழகான பாடலாக கோர்க்கும் கவிஞர் அவர்
அந்த பாடல்கள் நிச்சயம் மனதை உருக்குபவை. பெண்களின் ஏக்கம், ஆசை, ஏமாற்றன் மனதை அப்படியே படம்பிடித்து காட்டும் வரிகள் அவை. அதற்கு மேல் இன்னொருவர் எழுத முடியாது
உறுதியாக சொல்லலாம், உணர்வுகளை பாடல் வரிகளாக எழுதுவது என்பது கலை. கண்ணதாசனுக்கு இருந்தது. வைரமுத்துவிற்கு முன்பு இருந்தது, நா.முத்துகுமாருக்கு இறுதிவரை இருந்தது
இந்த கவியரசிக்கும் அது அற்புதமாக வாய்த்திருக்கின்றது
நிச்சயம் அவரின் சில பாடல்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். அப்படியான சிறந்த பாடல்கள் அவை. விருது கிடைத்த பாடல்களுக்கு சற்றும் குறைந்தவை அல்ல
ஆனால் பல்வேறு அரசியல் காரணமாக கிடைக்கவில்லை. ஆனானபட்ட சிவாஜிகணேசனையே விருதுகொடுக்காமல் இழுத்தடித்த கமிட்டிக்கு இதெல்லாம் சாதாரணம்
அதனால் என்ன? விருதுகொடுத்து பாராடினால்தான் அது சூரியனா? அதோ தெரிகின்றதே அதுதான் நட்சத்திரம், இந்த மணம் கொடுப்பது சந்தணம் என யார் சொல்லவேண்டும்
Kavignar Thamarai பாடல்களும் அந்த ரகமே, விருதுகளை தாண்டிய தரத்திற்கு அது சென்றுவிட்டது
தமிழ் யாருக்கும் சோறுபோடாது கலைஞரை தவிர. அதனால் அதில் முழுக்க நின்று போராட தமிழை முழுக்க நேசிக்க வேண்டும், சுவாசிக்க வேண்டும், தமிழாய் வாழவேண்டும்
அந்த வேள்வியினைத்தான் செய்கின்றார், பொறியாளர் என்கின்றார்கள், ஆனால் இப்பொழுது முழுக்க தமிழ் கவிஞராய் ஆகிவிட்டார்
ஒரு விஷயம் உறுதியாக சொல்லமுடியும், தமிழுக்காய் தமிழ் வரிகளுக்காய் அவர் பெற்றதை விட இழந்தது ஏராளம். பல்வகை சிக்கல்களால் பாதிக்கபட்ட அந்த கவிகுயிலின் வலிகளை கடந்த சில மெட்டுக்கள்தான் நாம் காண்பது
அந்த வலிகளும், சுமையும் இல்லாவிட்டால் இந்நேரம் எங்கோ சென்றிருப்பார்
அவரை அறிமுகபடுத்தியது அங்கிள் சைமன் என அவரே சொல்கின்றார். சைமன் செய்த ஒரே ஒரு உருப்படியான விஷயம் இவரை அறிமுகபடுத்தியதுதான்
இன்றல்ல, என்றும் அது ஒன்றுதான்
Kavignar Thamarai அவர்களுக்கும்
நமக்கும் பொருந்தாது. அவர் தீவிர தமிழ்தேசியவாதி, இன்னும் பல விஷயங்களில் தீவிரமான தமிழ், தமிழர் எனும் மனப்பான்மை கொண்டவர்.
அவரின் பலமும் அது, பலவீனமும் அதுவே.
நாமோ தேசியவாதி அவரோ சுத்த தமிழ்தேசியவாதி, நமக்கோ புலிகள் மீது அபிமானமில்லை அவருக்கோ அவ்வையார் கண்ட அதியமான் அந்த புலிகள்
நட்பாக இருக்க கூட முடியாத இடைவெளி அது
ஆனால் அவரின் பாடல் வரிகளை எந்த முகாமில் இருந்தாலும் ரசிக்கலாம், உருகலாம், சில இடங்களில் அழுதோ அல்லது ஆர்பரித்தோ ரசிக்கலாம்
அந்த கவியரசிக்கு வாழ்த்துக்கள்
ஓரளவு அவர் பல சிக்கல்களிலிருந்து மீண்டுவிட்டார், பொதுவாக கவிஞர்கள் இம்மாதிரி சிக்கலில் எளிதாக விழுவார்கள். காரணம் கவிஞர்கள் மனம் மிக மென்மையானது, உணர்ச்சிமிக்கது
பாரதி அப்படித்தான் தேசிய தீயில் விழுந்து வாழ்வை தொலைத்தான், கண்ணதாசன் திராவிட கழகத்தில் இருந்து தன் திறமையினை முதலில் வீணாக்கினார்
பின் எல்லாமே அரசியல் என கண்டபின் வெளிவந்தார். அதன்பின் அவரின் பாடல்கள் எங்கோ சென்றன, அசாத்திய வரிகளை எழுதி பெரும் வரலாராய் ஆனார்
இந்த கவியரசியும் தன் சிக்கல்களிலிருந்து மீண்டு பெரும் காவியங்களை, அழியா பாடல்களை தன் பொன்விழா காலத்திற்குள் எழுதி குவிக்கட்டும்
அவரின் பொற்காலமாய் அது காலமெல்லாம் நிற்கட்டும்.
வல்ல தெய்வம் அவர் மனதில் நிம்மதியும், கொட்டும் ஞானமும் கொடுத்து அந்த தமிழ்தேவதையினை கைபிடித்து நடத்தட்டும்
காலம் அந்த கவியரசியினை தன் கவிமகளாக அடையாளம் காட்டட்டும்