ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை
பெரும் பரபரப்பினை எற்படுத்திய வழக்கும், திமுகவிற்கு பெரும் நெருக்கடி என கருதபட்டதுமான ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை செய்யபட்டுவிட்டனர், நியாயம் வென்றிருக்கின்றது.
திமுக எனும் யானையினை காயபடுத்தி கட்டுபடுத்தி பயமுறுத்திய சங்கிலி உடைத்தெறியபட்டிருகின்றது
கலைஞர் டிவியும் முடக்கத்தில் இருந்து தப்பிவிட்டது
நீதிக்கும் , நேர்மைக்கும், கண்டிப்பிற்கும் பெயர் போன நீதிபதி ஷைனி தன் சுத்தமான தீர்ப்பில் தன் பெருமையினை தக்க வைத்துகொண்டார்
எவ்வளவு பெரும் பூகம்பாக அது வெடித்தது? 2 லட்சம் கோடி ஊழல் என்றார்கள், 50 ஆயிரம் கோடி திமுக சுருட்டியது என்றார்கள், இன்னும் ஏராளம்
அனுதினமும் பத்திரிகைகள் எழுதின, இந்தியாவின் எல்லா பக்கமும் சுவரொட்டி அடித்து ஒட்டினார்கள். தமிழக திமுக கட்சியினை எவ்வளவு அசிங்கபடுத்தமுடியுமோ அவ்வளவும் செய்தார்கள்
கிட்டதட்ட பல வருடங்களாக தொடர்ந்து எழுதினார்கள், ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன என தெரியாதவன் கூட விஞ்ஞானியாகவும், வருமான வரிதுறை அதிகாரி போலவும் எழுதிகொண்டிருந்தான் . கற்பனையிலே உருவாக்கபட்ட மிக பெரும் வழக்கு இது
திமுக தரப்பு தன் நியாங்களை சொன்னது, இவ்வளவு கோடி ரூபாயினை ஒருவன் சுருட்ட முடியுமா? புராணங்களில் வரும் அசுரனை விட பெரும் கற்பனை இது என்றெல்லாம் திமுக சொன்னது யார்காதிலும் விழவில்லை
இந்த வழக்கால் கலைஞர் சுமந்த வலி கொஞ்சமல்ல, இதனால்தான் ஈழமக்களை அழியவிட்டார் என்றார்கள், சன்டிவி பணத்திலே தன் பங்கு 100 கோடி பெற்ற கலைஞரை பார்த்து, இதில் சுருட்டிய பணத்தில்தான் கலைஞர்டிவி தொடங்கியது என்றார்கள்
ஆ.ராசா பதவியிழந்தார், கனிமொழி சிறைபட்டார், தயாளு உள்ளே போகும் ஆபத்து இருந்தது. இனி கலைஞர் குடும்பம் தப்ப முடியாது என்றெல்லாம் கர்ஜித்தார்கள்.
அமைதியாக “இது சோதனைகாலம், நியாயம் வெல்லும்” என சொல்லி நகர்ந்தார் கலைஞர், அவரின் தீர்க்கதரிசனம் வென்றிருக்கின்றது
ஸ்பெக்ட்ரம் செய்தி எங்கிருந்து தொடங்கியது என்றால் அந்த சர்ச்சை இப்பொழுது தேவையில்லாதது, ஆனால் விடாபிடியாக வழக்கினை தொடங்கியவர் சு.சாமி
அவர்தான் எனக்கு அங்கு ஆதாரமுண்டு, வெளிநாட்டில் கணக்கு இருக்கின்றது. இந்தோனேஷிய தீவினையே திமுக வாங்கிவிட்டது என்றெல்லாம் சொல்லி 50, ஆயிரம் கோடி அடித்தார்கள் என முறையிட்டவர்
வழக்கு தொடங்கியது, சிபிஐதான் நடத்தியது. ஆனால் கலைஞர் டிவிக்கு வாங்கிய கடனும் அது அடைக்கபட்ட விஷயமும் தெரிந்தது. வேறு எந்த சொத்தையும் சிபிஐயினால் காட்ட முடியவில்லை
வழக்கின் தொடக்கத்திலே சிபிஐ தடுமாறியது. அடிப்படை ஆதாரங்களை பலமுறை கேட்ட ஷைனி ஒரு கட்டத்தில் ஆதாரமே இல்லாமல் வழக்கு தொடர்ந்தீர்களா? என கேட்ட அன்றே வழக்கின் தீர்ப்பு தெரிந்தது
காங்கிரஸ் அரசில் 2 லட்சத்து 75 ஆயிரம் கோடி வரவேண்டிய இடத்தில் 50 ஆயிரம் கோடி வந்தது. பிஜேபி அரசில் 4 லட்சம் கோடி வரவேண்டிய இடத்தில் வெறும் 30 ஆயிரம் கோடிதான் கஜனாவிற்கு வந்தது என நிதிநிலை அறிக்கை வந்தபொழுதே திமுக தரப்பிற்கு ஓளி தெரிந்தது
இத்தீர்ப்பில் பலருக்கு மகிழ்ச்சி
நாம் ஒருகுற்றமும் செய்யவில்லை, கட்டுண்டோம் பொறுத்திருப்போம், இது திமுகவிற்கு சோதனையான காலம், காலம் மாறும்பொழுது நமக்கு வெளிச்சம் வரும் என உடைந்த குரலில் கலைஞர் உறுதியாக சொன்னது நிறைவேறிற்று, தன் தலைக்கு மேல் தொங்கிய கத்தி நீக்கபட்டதில் திமுகவிற்கு மகிழ்ச்சி
எங்கள் ஆட்சியில் நீதிதுறை மிக சுதந்திரமாக செயல்படுகின்றது என மோடி கும்பலும் உற்சாகமாக சொல்லிகொள்ள வாய்ப்பு
திமுக மீது அரசியலுக்காக ஆயிரம் புகார்களை சொல்லலாம், வழக்கும் தொடுக்கலாம் ஆனால் ஒன்றில் கூட குற்றம் நிரூபிக்கபடவில்லை அதுதான் எங்கள் பெருமை என்ற கவுரவத்தை திமுக தக்க வைத்துகொண்டது
நிச்சயம் திமுகவிற்கு மிகபெரும் நிம்மதி. பத்தாண்டுகளுக்கு முன்பு அவர்கள் தொலைத்த நிம்மதி திரும்பியிருக்கின்றது
சுப்பிரமணியன் சாமி இனி என்ன செய்ய போகின்றார் என தெரியாது, உச்சநீதிமன்றம் சென்றாலும் செல்லலாம்
ஆனால் குன்ஹா போல மிக நேர்மையாவனர் ஷைனி என்பதால் அந்த தீர்ப்பு எங்கு சென்றாலும் மாறாது
திமுக முகாம் மகிழ்ச்சியில் திளைக்கின்றது, அது நியாயமான மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்
கலைஞர் நலமாக இருந்திருந்தால் வார்த்தைகள் இப்படி வரும்
“உடன்பிறப்பே இந்த மாபெரும் இயக்கம் சந்தித்த பெரும் சிக்கலில் இந்த வழக்கும் ஒன்று. கருணாநிதி என்பவனை கிட்டதட்ட 70 வருடம் தொடமுடியாதவர்கள் அவன் குடும்பத்தாரை சாய்க்க, அப்படியே இயக்கத்தையும் சாய்க்க தொடுக்கபட்ட கனை இது
நியாயமும், தர்மமும் நம்மிடம் உண்டு , எள்முனையேனும் தவறு நம்மிடம் இல்லை என்பதால் தைரியமாய் எதிர்கொண்டோம், வாதிட்டோம் , வெற்றிபெற்றோம்
என்னதான் பார்பண கும்பல் ஆண்டாலும் அன்னல் அம்பேத்கர் இயற்றிய சட்டம் இன்னும் ஏழைகளுக்கும், தாழ்த்தபட்டவருக்கும் பாதுகாப்பானது என்ற நம்பிக்கை மறுபடியும் காப்பாற்றபட்டிருக்கின்றது
எப்படி எல்லாம் இந்த பத்திரிகைகள் நம்மை தூற்றினார்கள்? எப்படி எல்லாம் கட்டுகதை கட்டினார்கள் என்பதை என்னை விட நீ அறிவாய்
இப்பொழுது அதே ஊடகங்கள் நம்மீது துளியும் குற்றமில்லை, நம் கரங்களில் துமியும் கறையிலை என சொல்வதை கேட்டு என்னை விட நீதான் ஆனந்த கண்ணீர் வடிப்பாய் .
அத்துறையில் ராசா அமைச்சராக இருந்தபொழுது எளிய மக்கள் பயன்பெற எத்தனை அறிவிப்புகளை செய்தார், இந்நாட்டு மக்கள் எவ்வளவு பயன்பெற்றனர் . அந்த அழகிய கோலத்தை எல்லாம் இந்த வழக்கு எனும் சாணியால் அடித்து அசிங்கபடுத்தினார்கள்
கொஞ்சமும் குற்றமின்றி வம்புக்காய் நம்மை இழுத்துபோட்டு அடித்தார்கள், இதயத்தில் ரத்தம் கசிய கசிய வலி பொறுத்தோம்
நாம் நியாயத்தை நம்புபவர்கள், அது நம்மிடம் இருப்பதால் எந்த மன்றம் ஆனாலும் எந்த நேரமானாலும் சென்றோம், நின்றோம்
18 வருடமாக இழுக்கவில்லை, இல்லா பொய்கள் சொல்லி வாய்தா வாங்கவில்லை. முடிந்தவரை நீதிமன்றத்திற்கு நல் ஒழ்த்துழைப்பு கொடுத்தோம், காரணம் மடியில் கனமில்லை
இந்த வெற்றி, நம் ஒவ்வொருவரின் வெற்றி. நீதியின் வெற்றி, நியாயத்தின் வெற்றி அதை உற்சாகமாய் கொண்டாடுவோம் வா
என் மகள் விடுபட்டாள் என்பதைவிட, என் அன்புதம்பி ராசா விடுபட்டான் என்பதை விட, அண்ணா கண்ட இந்த மாபெரும் இயக்கம் என் தலமையில் இருக்கும்பொழுது ஒரு குற்றமும் நிரூபிக்கபடாத தூய இயக்கமாய் இருந்தது என்ற பெருமையுடன் கண்களில் நீர் துளிர்க்க உங்களின் ஒருவனாய் கூட்டத்தின் ஓரு ஓரத்தில் இருந்து ஆனந்த கண்ணீர் வடிக்கின்றேன் உடன்பிறப்பே
அய்யா ஷைனி , நியாத்தின் தாய் நீ. நீர் இருக்கும் திசைபார்த்து வணங்குகின்றேன்
உடன்பிறப்பே நெருப்பாறை தாண்டிவிட்டோம், காட்டாறை கடந்துவிட்டோமென்ற மகிழ்வில் இன்றைய தினம் சுணங்கிவிடாதே
ஆர்.கே நகரில் கழகம் வெற்றியீட்ட, உதய சூரியன் உதிக்க இன்று மாலை வரை கடும் உற்சாகத்துடன் கடமையாற்றுவாய். இந்த நாள் கழகத்தின் புது உதய நாளாக அமையட்டும், தமிழகம் செழிக்கட்டும்”
அடுத்த நல்ல செய்தி என்ன? ஆர்.கே நகர் தேர்தல் முடிவா?
தன் சோதனை காலத்தை கடந்து, தன் பொற்காலத்தை மீட்க தொடங்கியிருக்கின்றது திமுக