நடிகையர் திலகம் சாவித்திரிக்கு கண்ணீர் அஞ்சலி
பல பெண்களின் விதி கொடுமையானது, அதுவும் நடிகைகளின் விதி மிகவும் கொடூரமானது , அந்த பெரும் அலையில் எப்படியோ நீந்தி, கிடைத்த கட்டையினை பிடித்து தப்பி சிலர் கரையேரலாம், சிலர் போராடிகொண்டே இருக்கலாம், சிலருக்கு அதிர்ஷ்ட வசமாக காற்றடித்து திசைமாறலாம்
ஆனால் புகழின் உச்சத்தில் இருந்து, பெரும் செல்வாக்காய் வாழ்ந்து பின் குப்புற வீழ்ந்து வயதிலே பணமும், குடும்பமும் இன்றி குடிசை வாசியாக செத்துகிடக்கும் விதி ஒரிரு நடிகைகளுக்கு அமைந்துவிடுகின்றது அந்த ஓரிருவரில் சாவித்திரியும் ஒருவர்.
15 வயதிலே நடிக்க வந்தவர், அக்கால ஜெமினி ஸ்டூடியோவில் வாய்பிற்காக வந்தபொழுது அந்த மேனேஜர் நீ நடிக்க சரியில்லை என விரட்டுகின்றார், அப்படி ஒரு காலம் இருந்த சாவித்திரிக்கு அதே மேனேஜர் வந்து தன்னை திருமணம் செய்யவும், தன்னோடு நடிக்கவும் காலில் விழ ஒரு காலம் வந்தது
அந்த மேனேஜர்தான் ஜெமினி கணேசன்
தேவதாஸ், மிஸ்ஸியம்மா என கொடிகட்ட தொடங்கிய சாவித்திரி அடுத்த 15 ஆண்டுகள் தமிழக திரையுலகினை ஆண்டார். ஆட்சி என்றால் அழகு, நடிப்பு என எல்லா விதத்திலும் சவால் விட்ட ஆட்சி
சிவாஜிக்கு நிகரான நடிப்பினை கொடுத்துகொண்டிருந்தார், அமைதியான அழகு முகம் அவரின் பெரும் வாய்ப்பு. ஒரு விதமான வெட்டி எடுக்கபட்ட அழகு அது, கூடவே நளினமான பெண்மையும் அழகு சேர்த்தது
அவர் நடிகையான பொழுதே அவரை வைத்து பணம் சேர்க்கும் சொந்தம் சதி செய்தது, அதனால் வேறுவழியின்றி ஜெமினியிடம் சரிந்தார். ஜெமினியும் நன்றாகத்தான் சாவித்திரியினை நடத்தினார்
சாவித்திர்க்கு அன்று வயது 16 ஜெமினிக்கு 32 .ஆயினும் ஒரு குறை இல்லை
எந்த நடிகையும் சாவித்திரியின் இடத்தினை அசைக்க முடியவில்லை, சரோஜா தேவி, தேவிகா ஜெயலலிதா என வரிசைகட்டி வந்தாலும் அழகில் உயர்ந்தார்களே ஒழிய சாவித்திரியின் நடிப்பினை கொஞ்சமும் நெருங்கவில்லை
சாவித்திரியின் பெரும் பலவீனம் அவரின் இளகிய மனம், இருப்பதை சற்றும் யோசிக்காமல் கொடுக்கும் குணம் அவருக்கு இருந்தது
சீனபோரின்பொழுது அவர் கொடுத்த நகைகளே 100 சவரன் இருந்தது, இன்னும் ஏராளம். எத்தனையோ தர்மங்களை செய்தவர் அள்ளி கொடுத்தவர்
பணம் குவிந்தது, புகழ் குவிந்தது இந்த இடத்தில் துதிபாடும் கூட்டமும் சாவித்திரியினை வைத்து பலன் பார்க்கும் கும்பலும் வராமல் இருக்குமா? கண்டிப்பாக வரும் அல்லவா வந்தது
சாவித்திரியினை ஜெமினியிடம் இருந்து பிரிக்கும் காரியத்த்தில் இறங்கியது, காரணம் ஜெமினி ஜெகதலபிரதாபன் என்றாலும் காசு விஷயத்தில் படு சமர்த்தர். சாவித்திரியினை சிக்கலில் சிக்கவிடாமல் பார்த்து கொண்டுதான் இருந்தார்
ஆனால் வஞ்சக கும்பல் விடுமா? சசிகலா கோஷ்டி போல அங்கும் ஒரு கூட்டம் சாவித்திரியினை சுற்றியது
ஜெமினியின் வாழ்வு ஊரறிந்தது, அதனை சாவித்திரியிடம் போட்டு கொடுத்தார்கள், சாவித்திரிக்கு ஜெமினியின் மனம் புரியும், தன் வாழ்வின் பெரும் ஆறுதலாகவே அவர் ஜெமினியினை கண்டார், ஜெமினியின் சந்தோஷங்களுக்கு என்ன எல்லை உண்டு என்பதும் தெரியும்
ஆனால் கரைப்பார் கரைத்தால் எல்லாம் கரையுமல்லவா? சாவித்திரி ஜெமினி சர்ச்சையினை பெரும் பள்ளமாக்கி இருவரும் முழுதாக இணையாமல் பார்த்துகொண்டது
அதன் பின் சாவித்திரியினை படம் தயாரிக்க அக்கும்பல் வழிகாட்டியது, ஜெமினி எச்சரித்தார்
காரணம் சினிமா தயாரிப்பு என்பது பாதாளத்தில் இறங்கி வைரம் எடுப்பதற்கு சமானம், கொஞ்சம் தவறினாலும் அவ்வளவுதான் மீள்வது மகா சிரமம்
அக்கும்பல் சாவித்திரியினை படம் எடுக்க சொன்னது, போதா குறைக்கு இயக்குநர் அவதாரமும் எடுக்க சொன்னது, புகழ்போதையில் சாவித்திரியும் பலியானார்
ஆனால் அவர் நல்ல படங்களை எடுத்தார், படம் ஓடத்தான் செய்தது , சுற்றி இருந்தவர்கள் பணத்தை அமுக்க சாவித்திரி நஷ்டமடைந்தார்
ஆனாலும் தொடர்ந்துபடமெடுத்து இதே நிலைவர கிட்டதட்ட திவால் நிலைக்கு சென்றார்
முன்பொருமுறை இந்தோனேஷியா அதிபரின் மாளிகைக்கு கலைகுழுவாக சென்றபொழுது முதன் முதலாக மதுவினை தொட்டார் சாவித்திரி, பின் அது பழக்கமாயிற்று
குடி அதிகரித்தது, பட வாய்ப்புகளும் குறைந்தன ஆயினும் தன் மகளை திருமணம் செய்துவைக்கும் கடமையில் அவர் தவறவில்லை, அதனை கஷ்டபட்டு நிறைவேற்றினார்
கடன் சுமை அவரின் சொத்துக்களை பறித்தது, பணம் சென்றபின் அவரை சுற்றி இருந்த கூட்டமும் ஓடிவிட்டது, தனி மரமானார் சாவித்திரி.
அதன்பின் அவர் மனம் வெறுத்தது, பல முகங்களை காண்பதை தவிர்த்தார், ஒதுங்கினார், கொஞ்சம் கொஞ்சமாக முடங்கினார்
அபிபுல்லா சாலையின் மகாராணியாக இருந்த சாவித்திரி சிறிய வீட்டில் புக நேரிட்டது, தன் சொல்பேச்சு கேட்காத சாவித்திர் மீது ஜெமினிக்கு கோபம் அப்படியே இருந்தது
கனவிலும் நினையாத கொடும் வாழ்வு தனக்கு நேர்ந்துவிட்டதை உணர்ந்த சாவித்திரி மதுவிலே நிம்மதி தேடினார், மிகபெரும் நடிகை, தென்னிந்தியா கொண்டாடிய மாபெரும் நடிகை தன் நிலை தாழ்ந்து பராரியானார்
பேசகூட யாருமில்லை, அந்த குப்பத்து ரிக்சாக்காரர்களிடம் வலிய சென்று பேசும் அளவுக்கு, அவர்கள் விரட்டும் அளவுக்கு அவர் நிலை மோசமானது
நன்றிகெட்ட திரையுலகம அவரை ஏறேடுத்தும் பார்க்கவில்லை, சந்திரபாபு மட்டும் சென்று பார்த்து வந்தார்
அந்நிலையிலும் கொடுப்பதை நிறுத்தவில்லை சாவித்திரி, தன் பழைய கார் டிரைவரை வழியில் சந்தித்தார் அவனுக்கு திருமண வயதில் பெண் இருந்தாள், கட்டிகொடுக்க வழியில்லை என அழுதான்
தன் பட்டுசேலைகளை விற்று அவனுக்கு பணம் கொடுத்து அனுப்பினார் சாவித்திரி, இன்னொரு வேலைக்காரனுக்கு தான் பெற்ற பரிசு பொருட்களை எல்லாம் அடமானம் வைத்தது பணம் கொடுத்ததாக உதவி பெற்றவன் சொன்னான், அவர் சொல்லவில்லை
கரையேறிய பிள்ளைகள், நின்றுவிட்ட திரைவருமானம், இருளான எதிர்காலம், தான் வாழ்ந்த பழம் வாழ்க்கை எல்லாம் நினைத்து நினைத்து கலங்கிய சாவித்திரி குடியிலே நிம்மதி தேடினார்
வாழ்ந்து கெடுவது என்பது நூறுமுறை சாவதற்கு சமானம், அனுபவித்தாலன்றி தெரியாது.
எத்தனை பட அதிபர்கள் அவர் கால்ஷீட்டுக்காக காத்திருந்தனர், எத்தனை ஹீரோக்கள் சாவித்திரி தனக்கு ஜோடியாக வேண்டும் என வெட்கம் விட்டு கேட்டனர், எத்தனை லட்சம் ரசிகர்கள் அவரை கொண்டாடினர்
பெண்களில் கூட சாவித்திரிக்கு பெரும் ரசிக கூட்டம் இருந்தது, அப்படி பெரும் வாழ்வு வாழ்ந்த சாவித்திரியால் விதி வகுத்த வாழ்வினை ஏற்றுகொள்ளமுடியவில்லை, மதுவிலே நிம்மதி தேடினார்.
எந்த காலம் அவரை கொண்டாட வைத்ததோ, அதே இரக்கமற்ற காலம் அவரை பரதேசியாகவும் ஆக்கி நிறுத்தியது.
குடி சர்க்கரை நோயினை அதிகரிக்க, ஒரு கட்டத்தில் மயக்கமாகி மருத்துவமனியில் சேர்க்கபட்டார்
அதுவரை கல்லாக இருந்த ஜெமினி கணேசன் ஓடிவந்து அழுதார், சாவித்திரி கோமா நிலைக்கு சென்றால்
சில வாரங்கள் ஓடிய நிலையில் நினைவு திரும்பாமலே இறந்தார்

அவர் இறந்தபொழுது வயது 46 , அவர் வணங்கிய அன்னை சாமுண்டீஸ்வரியும் அவரை காக்க வரவில்லை
நடிகைகளில் அவரை போல் வாழ்ந்தவருமில்லை, அவரை போல் அள்ளி கொடுத்தவரும் இல்லை அவரை போல் அவலமாய் இறந்தவருமில்லை
ஒரு நடிகை எப்படி நடிக்க வேண்டும் என இலக்கணம் எழுதிய சாவித்திரி, ஒரு நடிகை எப்படி திசைமாறி போக கூடாது என்பதற்கு எடுத்துகாட்டாய் ஆனதுதான் விதி
இன்று அவரின் நினைவுநாள்
நடிகர்களில் எல்லோரும் சம்பாதிக்கலாம், ஆனால் எப்படி வாழகூடாது என்பதற்கு தியாகராஜ பாகவதர் உதாரணம் ஆனார், அவரின் கடைசி காலமும் கொடுமையானது
நடிகை எப்படி தடம்மாறி போக கூடாது என்பதற்கு சாவித்திரியும் உதாரணம் ஆனார்
மிக சிறந்த நடிப்பினை கொடுத்த அந்த அழகு சாவித்திரியின் வாழ்வு நடிகைகளுக்கு பெரும் பாடம். அதில் பாடம் படித்தவர்கள் குஷ்பு போல் உயரம் பெறுகின்றார்கள்
பாடம் படிக்காதோர் சில நடிகைகளை போல தொலைந்துவிடுகின்றார்கள்
சாவித்திரியின் வாழ்வு பெரும் திருப்பு முனைகளை கொண்ட ஆச்சர்ய வாழ்வு.
அதனை சினிமாக கூட எடுத்திருக்கின்றார்களாம், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கின்றாராம்
நிச்சயம் சரிவராது, படம் சாவித்திரியின் மருத்துவமனை காட்சி போல ஆவது நிச்சயம்.
பெரும் ஆச்சரியமான, சோகமான அந்த சாவித்திரி வேடத்தில் நடிக்க அவரை போலவே பெரும் போராட்டத்தை எதிர்கொண்டு ஆனால் வெற்றிகரமாக வெளிவந்துவிட்ட குஷ்புவினால் மட்டுமே முடியும்
குஷ்பு நடித்தால் மட்டுமே சாவித்திரியின் முழு வாழ்வினையும் அப்படம் வெளிகொணரமுடியும்
இப்பொழுது நகைப்பீர்கள், படம் வெளிவரும்பொழுது நிச்சயம் தமிழகமே இதனை சொல்லும், அது உறுதி.
எப்படிபட்ட நடிகை? அந்த பாசமலரில் பார்த்த சாவித்திரி, நவராத்திரியில் சிவாஜிக்கு அசால்ட்டாக ஈடு கொடுத்த சாவித்திரி முகம் மறக்க கூடியதா?
அந்த குண்டு கண்களில் காட்டிய நடிப்பினை , முகத்தில் கொண்டு வந்த உணர்ச்சியினை இனி எந்த நடிகை காட்டிவிட முடியும்?
அந்த நடிகையர் திலகம் சாவித்திரிக்கு ஆழ்ந்த அஞ்சலி.
https://youtu.be/iUoAz3-nUSc