கடல் அது போக்கில் இயங்கிகொண்டிருக்கின்றது
அந்த கடலில் சில திமிங்கலங்கள் இருந்தன, சில சுறாக்களும் இருந்தன, எல்லா வகை மீன்களும் நண்டுகளும் இன்னும் பொடி நெத்திலி கூட்டமும் இருந்தது
அந்த கடல் தாங்களால் மட்டுமே காப்பாற்றபடுவதாக அவை நம்பிகொண்டிருந்தன
அந்த கடலுக்கு புதிதாக ஒரு சுறா வரலாமா? என தள்ளியிருந்து யோசித்துகொண்டே இருந்தது, அதை சுற்றி இருந்த மீன்கள் அதனை உள்ளே தள்ள நேரம் பார்த்துகொண்டே இருந்தார்கள்
அவ்வப்போது வேகம் காட்டுவதும், திடீரென ஆழ்கடலில் தியானத்தில் இருப்பது போலவும் அந்த சுறா போக்கு காட்டிகொண்டே இருந்தது
இப்பொழுது அந்த சுறா களமிறங்க நாள் குறித்ததாக சொல்லிவிட்டது
அந்த கடலில் ஒரே சலசலப்பு. பெரும் திமிங்கலங்கள் அமைதியாக கண்காணிக்கின்றன, அவை சத்தமில்லை
ஆனால் நெத்திலி , சென்னா துணி போன்றவை ஓலமிடுங்கின்றன, ஏ சுறாவே இது உன் கடல் அல்ல, எமது கடல் எங்கள் உரிமை, நீ உன் கடலுக்கே போ என கதறுகின்றன
ஒரே கடல்தானே, நீங்கள் எந்த கடலுக்கும் செல்லலாமே, ஏன் இந்த கடலிலே வசிக்கின்றீகள், முடிந்தால் செல்லுங்கள் இந்த சுறாவை தடுக்க உங்களுக்கு என்ன உரிமை என சுறாவின் சுற்றங்களும் சீறுகின்றன
நெத்திலி கூட்டமோ விடுவதாக இல்லை, எதிர்ப்பு என்ற பெயரில் அவை அழுவது தெரிகின்றது, கடல் என்பதால் கண்ணீர் தெரிவதில்லை
கடல்தேவன் அந்த சலசலப்பினை கூர்ந்துபார்த்தான், திமிங்கலங்களிடம் கேட்டான், அந்த புலிச்சுறா பற்றி நீங்கள் ஏன் அலட்டவில்லை?
இந்த கடலின் ராஜா நாங்கள், இத்தனை காலம் அசைக்கமுடியா சக்தி நாங்கள். புலிச்சுறா வரட்டும் பார்க்கலாம்
அங்கே சகல கடலிலும் சுற்றிவரும் சில நீல திமிங்கலங்களை கேட்டான் கடல்தேவன், அவைகளோ எல்லா கடலும் எங்களுக்கு சொந்தம் எனினும் இக்கடலில் எங்கள் ஆதிக்கமில்லை, இவைகள் தின்று தீர்த்த எச்சத்தினை எமக்கு தருகின்றன, அதனால் அப்புலிச்சுறா எங்கள் அணியில் சேர்ந்தால் நல்லது என சொல்லிகொண்டிருந்தன
கடல்தேவன் ஒப்பாரி வைத்து அழுத அந்த சென்னாதுணி, நெத்திலி பொடிகளிடமும் கேட்டான், அந்த புலிச்சுறாவினை நினைத்து நீ ஏன் அழுகின்றாய், அவை சொன்னது
அய்யா இந்த கடலில் நாங்களும் வாழவேண்டாமா? மிக பொடிதாய் இருப்பதால் எங்களை யாரும் கண்டுகொள்ளவுமில்லை, நாங்கள் காட்டும் வித்தையினை அவைகள் ரசிக்க தயங்குவதுமில்லை
ஏதோ அந்த திமிங்கலங்கள் வேட்டையாட எஞ்சியதை உண்டு வாழ்ந்து வருகின்றோம், அந்த நீல திமிலங்கள் இக்கடலை விழுங்கிவிடும், இக்கடல் நமக்கு மட்டுமே சொந்தம் என சொல்லி ஏதோ வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்
அந்த சுறா வந்தால் தனியாகவா வரும், அதுவும் ஒரு கூட்டத்தோடு வரும், அவைகள் எங்களை விழுங்கிவிடும் அய்யா, நாங்கள் வாழமுடியுமா? அந்த திமிங்கலங்க்ள் எப்படியும் வாழும் எங்கல் நிலமை அப்படியா? இந்த புலிச்சுறா வந்தால் இவ்வழியில் நிறைய சுறா வரும் இக்கடல் கெட்டுவிடும்
அதனால்தான் அந்த சுறாவினை எதிர்க்கின்றோம் என கண்ணீர் வடித்தது நெத்திலி பொடிகள்
கடல்தேவன் கேட்டான், என்னது கடல் இப்பொழுதுதான் கெட்டதா? மக்களை கரைசேர்த்த எத்தனை பெரிய கப்பல்களை அதோ அந்த திமிங்கலங்கள் எப்பொழுது கவிழ்த்துபோட்டதோ அன்றே இக்கடல் கெட்டது, கெட்டுவிட்ட கடலில் உருவாகியவர்கள்தான் நீங்கள்
இல்லை இல்லை நாங்கள் கடலடியில் இருக்கும் கப்பலை தூக்கி மிதக்க விடுவோம் எங்களை நம்புங்கள் என்றன நெத்திலிகள்
சிரித்தான் கடல்தேவன், அவ்வா சிரிக்காதீர் அச்சுறாவினை இங்கு அனுமதியாதீர் என கெஞ்சின நெத்திலிகள்
என்னால் அந்த சுறாவினை விரட்ட முடியாது, இக்கடல் எல்லோருக்கும் சொந்தம் என்றான் கடல்தேவன்
நெத்திலிகள் அழுதுகொண்டே சொன்னது, அப்படியா ஆனால் நாங்கள்தான் இக்கடலின் பூர்வகுடி என சொல்லி அந்த புலிச்சுறாவினை எங்கள் அணியில் சேர சொல்வீரா? இந்த நெத்திலி தலைவராக இருக்கட்டும்,
கடல்தேவன் வாய்விட்டு சிரித்தான், நெத்திலியினை தலைவனாக புலிச்சுறா ஏற்காது, இது மடத்தனம். அச்சுறா வந்தால் வரட்டும், காலதேவன் நிர்ணயித்ததே நடக்கும் என சொல்லிவிட்டு சென்றுவிட்டான் கடல்தேவன்
அந்த நெத்திலி பொடிகள் அலறல் கடல் அலையினையும் தாண்டி கேட்டுகொண்டே இருக்கின்றது, அந்த புலிச்சுறாவோ , திமிங்கலங்களோ கொஞ்சமும் கண்டுகொள்ளவே இல்லை
கடல் அது போக்கில் இயங்கிகொண்டிருக்கின்றது.