திக் திக் நிமிடங்களுடன் புத்தாண்டு வருகின்றது
புத்தாண்டுக்கு நள்ளிரவில் கோவிலுக்கு செல்லவேண்டும் என்பது கிறிஸ்தவ விதி. இந்துக்களுக்கு இந்த சாங்கியம் எங்கிருந்து வந்தது என தெரியவில்லை. தமிழக கலாச்சாரபடி இந்த புத்தாண்டே கணக்கில் வராது, தை மாதமோ சித்திரை மாதமோதான் அந்த கணக்கு
பிறகு ஏன் இந்த இந்து ஆலயங்கள் நள்ளிரவு திறப்பு சர்ச்சை என தெரியவில்லை
அது இருக்கட்டும், நமது கடமைக்கு செல்ல கிளம்பியாயிற்று. இந்நாளில் திருமணமான பெண்கள் திருமண ஆடையினை அணிவார்களாம். என்றோ கேள்விபட்ட விஷயம்தான் ஆனால் தலையில் அடிபடாமல் நினைவுக்கு வராது என்பதுதான் சோகம்
அப்படி பாகம்பிரியாளும் பட்டுபுடவையில் வந்தார், நானோ கண்டு கொள்ளவில்லை மறுநாள் கிடைக்கும் கிடாகறியே கண்ணுக்குள் வந்தது, அந்த முகத்தில் ஒரு மாறுதல் வந்ததை கவனித்தாலும் காரணம் புரியவில்லை
அவள் விடுவதாக இல்லை, தன் தாயிடம் நீங்கள் திருமண சேலை கட்டவில்லையா என கேட்டதும் உள்ளூர அலாரம் அடித்தது. கண்ணி எங்கே விழுகின்றது என தெரிந்ததும் , கல்யாணத்து அன்று இந்த பட்டில் அழகாய் இருந்தாய் தெரியுமா? அதெல்லாம் பொன்னான காலம் என சொல்லிவிட்டு மறுபடியும் ஆட்டுகனவில் மூழ்கியாயிற்று
அங்குதான் இருந்திருக்கின்றது விதி, அது திருமண பட்டே இல்லையாம், அதன் பின் என்றோ அவள் அம்மா கொடுத்த பட்டாம்
போதாதா, புத்தாண்டு எப்படி விடியும் என்பது இப்பொழுதே தெரிந்துவிட்டது. “ஏண்டா டேய் உலக விஷயத்தை எல்லாம் தேதிமறக்காமல் எழுத தெரிந்த உனக்கு இது எப்படி மறந்தது? எப்படி மறக்கலாம்..” எனும் மவுன மொழி அந்த முகத்தில் சந்திரமுகி கோலத்தில் தெரியதொடங்கி இருக்கின்றது.
திக் திக் நிமிடங்களுடன் புத்தாண்டு வருகின்றது
இந்நிலையிலும் உங்கள் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தாயிற்று. இந்த புத்தாண்டில் என்ன தீர்மானம் என்றால் கிட்டதட்ட 25 ஆண்டுகளாக தொடரும் அதே தீர்மானம்தான்
ஆம், இந்த வருடத்திலாவது தங்க தலைவியினை சந்தித்து சங்கத்தின் கொள்கை, கஷ்டம், அதன் கடமைகளை எல்லாம் எடுத்துசொல்லி தலைவிக்கு உற்சாகம் ஊட்டிவிட வேண்டும்
அதனை தவிர என்ன தீர்மானம் இருக்கின்றது
முதலில் பிரார்த்திவிட்டு வரவேண்டும். தலைவிக்கும் உங்களுக்கும் சேர்த்து இந்த 2018 எல்லா வளமும் கொண்டுவரும் ஆண்டாக அமைய பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்