மலேசியாவில் நடைபெறும் நட்சத்திர கிரிக்கெட்டுக்கான தொடக்கவிழாவில் ….

இன்று நடந்த சம்பங்களை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகின்றது, அவ்வளவு சுவாரஸ்யங்கள்
சபதமெடுத்தது போலவே சங்கம் மிக தீவிரமாக கோலாலம்பூர் ஹோட்டல்களில் சிட்டிவேஷன் சாங் பாடி தலைவியினை தேடிற்று, ஒரு ஹோட்டல் விடாமல் தேடல் தொடர்ந்தது
நாம் பட்ட சிரமம் கண்டு ஆண்டவனுக்கு இரக்கம் வந்ததோ இல்லையோ முகநூல் நண்பர்களுக்கு இரக்கம் வந்து சில சைகளை காட்டிவிட்டார்கள்
விடுமா சங்கம்? அலறி அடித்து அந்த ஹோட்டலுக்கு சென்றாயிற்று, அங்கு நாளை மலேசியாவில் நடைபெறும் நட்சத்திர கிரிக்கெட்டுக்கான தொடக்கவிழா ஒரு ஹாலில் நடைபெற்றது, எல்லா நடிகர் நடிகைகளும் வருவதாக ஏற்பாடாம், முதல் ஆளாக சங்கம் சென்றது, தலைவி வரும்பொழுது வரவேற்க வேண்டாமா?
அங்கு முதலில் அமர்ந்திருந்தது சச்சுவும் வெண்ணிற ஆடை நிர்மலாவும். இருவரும் 1960களில் கலக்கி எடுத்தவர்கள் அதுவும் சச்சுவின் ரோஜாப்பூவே ராஜகுமாரி பாடல் இன்றும் கிளாசிக், காதலிக்க நெரமில்லை சச்சுவினை மறக்க முடியுமா?
வெண்ணிற ஆடை நிர்மலாவினை பார்த்ததும் பகீரென்றது, காலையில்தானே அவரை கலாய்த்து பதிவிட்டோம், நம் முகங்களை அதிகம் காட்டாததும் நல்ல விஷயம் என நினைத்து அவரிடம் பேசியாயிற்று, நன்றாக பேசினார்
இருவரும் வயதான சுபாவத்தில் அமர்ந்திருந்தார்கள், இருவருக்குமே கண்கள் பேசின, பல விஷயங்களை பகிர துடித்தார்கள், பேச ஆர்வம் இருந்தது, வயதானவர்களுக்கு வரும் சிக்கல் அது. அமர்ந்து கேட்க ஆசைதான், ஆனால் நேரமில்லை என்பதால் அவர்களை அழைத்து சென்றுவிட்டார்கள்
இருவருக்குமே திருமணம் ஆகவில்லை என்பது பெரும் சோகம், அவர்களை கண்டதும் மனம் கனக்கத்தான் செய்தது. விதி கொடுமையானது சுத்தமான நதி எல்லாம் விளைநிலங்களுக்கு வருவதுமில்லை, அழகானவர்கள் எல்லாம் வாழ்ந்து விடுவதுமில்லை
ஹாலுக்கு ஒவ்வொருவராக வந்தார்கள், எல்லோருடனும் படம் எடுப்பது சாத்தியமில்லை , எடுக்கும் எண்ணமுமில்லை
ஆனால் பாக்யராஜ் பூர்னிமா தம்பதியர் வந்தபொழுது ஆர்வம் கட்டுபடுத்தமுடியவில்லை. எப்படிபட்ட கதாசிரியர் பாக்யராஜ்? எப்படிபட்ட ரசனையான படங்களை கொடுத்தவர், இனி இன்னொருவன் அப்படி வரமுடியுமா? அவரின் கைகளை பிடித்து குலுக்கியபொழுது அப்படி ஒரு அதிர்வு மனதில் ஏற்பட்டது, எத்தனை சுவாரஸ்ய கதைகள் எழுதிய கரங்கள் அவை?
அவர் மெலிந்திருந்தார் , அவர் பாக்யராஜ் என நம்ப அவர் நடையினை தவிர எந்த அடையாளமுமில்லை.
தங்கமகன், டார்லிங் டார்லிங், பயணங்கள் முடிவதில்லை படங்களில் வந்த பூரனிமாவா அது, ஆனால் அவரேதான், அந்த சிரிப்பு அவரை மீட்டு கொடுத்தது
பூர்னிமாவிற்கு கண்களில் வயது தெரிந்தது, ஆனால் புன்னகை முகமாக இருந்தார், தேங்யூ மேடம் என்றவுடன் ஒரு புன்னகை செய்தார், பழைய படங்களில் பார்த்த அதே சிரிப்பு
அருகில் ஷோபனா அமைதியாக நின்றார். அந்த கண்களை பார்த்தபொழுது பத்மினி ஞாபகம் வந்து போனது, அப்படியே வெட்டின அந்த கண்கள். தளபதி படத்து ஷோபனா ஒரு நிமிடம் கண்ணுக்குள் வந்து சென்றார்
எல்லோரூம் ஹாலுக்கு சென்றார்கள், கொஞ்ச நேரத்தில் பெரும் பாதுகாவலர்களுடன் அந்த மனிதர் வந்தார், பார்த்தவுடன் புலப்படவில்லை என்றாலும் கடந்து சென்றபின் அவர் அல்லிராஜா சுபாஷ்கரன் என்பது புரிந்தது
உலகின் மிக சில பணக்கார தமிழர்களில் அவரும் ஒருவர். நொடிக்கு இத்தனை ஆயிரம் டாலர்கள் என குவிக்கும் பெரும் வியாபார உலகம் அவருடையது, ஐரோப்பாவில் கொடிகட்டி பறக்கும் தமிழர் அவர். அமைதியாக நடந்து சென்றார்
அதன் பின் அமைதியான வரவேற்பரை திடீரென ஓ என அலறியது, பார்த்தால் ரஜினி, கிட்ட நெருங்க முடியாத அளவு பவுன்சர்களும் கூட்டமும், மனிதரும் மின்னல் வேடத்தில் நடந்து லிப்டுக்குள் புகுந்துவிட்டார். மொத்த கூட்டமும் அவருக்காகத்தான் காத்திருந்தது போல
அந்த ஹாலுக்குள் நாம் செல்லவில்லை, மிக சிறிய ஹால் அது. எல்லோருக்கும் இடமில்லை
கொஞ்ச நேரத்தில் கூட்டம் முடிந்தது, வழக்கம் போல ரஜினி முதல் ஆளாக பறந்துவிட்டார், அதே வேகம் அதே சிரிப்பு அதே ஓட்டம் , சும்மாவா? இனி கட்சி தொடங்கி எவ்வளவு வேலை இருக்கின்றது அவருக்கு, ஓடத்தான் செய்வார்
அவருக்கு முன்பே சத்தியராஜ் கிளம்பி ஓடிவிட்டார், மனிதர் அட்டகாசமான நடிகர், பாகுபலிக்காக வாழ்த்தலாம் என்றால் பறந்துவிட்டார்
ஒவ்வொருவராக கடந்து சென்றார்கள், சரோஜாதேவி அதே புல்மேக் அப்பில் இருந்தார், அந்த வயதான கேங்கில் செம்மீன் ஷீலாவும் இருந்தார் புன்னகைத்தார் , பதிலுக்கு புன்னகைத்தேன். செம்மீனில் வந்த ஷீலாவா அது? அன்பே வா படத்தில் வந்த சரோஜாதேவியா அது? நம்ப முடியவில்லை ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும்
காலத்தின் முன்னால் எல்லாம் மாயை
கூட்டத்தில் தனிந்து தெரிந்தது நிக்கி கல்ராணியும், ஸிரிதிவ்யாவும், பிந்து மாதவி ஒரு மாதிரி பொம்மை போல நடந்து சென்றார்
நிக்கி மார்டன், ஆனால் திவ்யா கொள்ளை அழகு, அதுவும் அந்த விளக்கு வெளிச்சத்தில் அப்படி மின்னினார், மகளை பார்த்ததும் குழந்தை போல் அணைத்து போட்டோவிற்கு போஸ் கொடுத்தார், நானும் சென்று அருகில் நிற்க முயன்றபொழுது பாகம்பிரியாளின் முகம் மாற தொடங்கிற்று, அது வேறு மாடி கீழே விழுந்தால் ஒன்றும் தேறாது என்பதால் செல்லவில்லை
ஏதோ குஷ்புவிற்கு நேர்ந்துவிட்ட மனம் என்பதால் கஷ்டபட்டு அடக்கியாயிற்று, இல்லை என்றால் இன்னொரு சங்கம் தொடங்கியிருக்கலாம்
நந்திதா பள்ளிமாணவி போல் இருந்தார், குழந்தைகளோடு குழந்தையாகவே தெரிந்தார், அவரோடு கலையரசன் நெடுநேரம் பேசிகொண்டிருந்தார், நிச்சயம் நடிப்பு சம்பந்தமாக இருக்கும்
ரஜினி போய்விட்டார், இனி நாமும் கிளம்பலாம் எனும்பொழுது சிவகார்த்திகேயன் எதிர்வந்தார், அவருக்கும் ஏகபட்ட கெடுபிடி. சும்மா சொல்ல கூடாது மலேசியாவில் அவருக்கு ஏகபட்ட ரசிகர்கள் சுற்றிவிட்டார்கள், ஆனால் சிரித்து கொண்டே எல்லோருக்கும் ஒத்துழைப்பு கொடுத்தார்
வேகமாக கடந்து சென்றாலும் 12 மணிக்கு தனக்காக காத்திருந்த குழந்தைகளை அவர் ஏமாற்றவில்லை மனிதரிடம் அசந்த விஷயம் அது. குழந்தை போல படமெடுத்தார், நிச்சயம் பெரும் நட்சத்திரம் எனும் பந்தா அவரிடம் சுத்தமாக இல்லை. இந்த எளிமை அவருக்கு இன்னும் பெரும் கூட்டம் சேர்க்கும்
அவரை அடுத்து வந்தார் விஜய் சேதுபதி, அவருக்கும் காவல் ஆனால் காவலை மீறி ராகுல்காந்தி போல எல்லோரையும் கட்டிபிடித்து இயல்பாய் பழகினார், தள்ளி நின்ற என்னையும் வாங்க பாஸ் என பிடித்து படம் எடுத்தார்
அந்த கூட்டத்தில் மிக எளிமையாக , யதார்த்தமாக சினிமா பந்தா இல்லாமல் இருந்தது இவர்கள் இருவரும்தான்
இவர்கள் இன்று உச்ச இடத்தில் இருப்பதில் ஆச்சரியமே இல்லை, இந்த குணம் இன்னும் அவர்களை எங்கோ உயர்த்தும்
விஜய் சேதுபதி முகத்தில் ஒரு விஷேச ரேகை ஓடுகின்றது என்பது புரிந்தது, மனிதரிடம் ஏதோ விஷயம் இருக்கின்றது நிச்சயம் இன்னும் உயர்வார்
ஜெயம் ரவி ரோஸ் நிறத்தில் இருந்தார், முகத்தில் அதே புன்னகை
மிர்சி சிவா கடும் பிசி, வெங்கட்பிரபுவினை காணவில்லை கண்டிருந்தால் சோனா வரவில்லையா என கேட்டிருக்கலாம்
வசந்தகுமார் மகன் விஜய் நின்றிருந்தார், சரளமாக பேசினார். என்ன இருந்தாலும் தமிழிசையின் தம்பி அல்லவா? மிக கலகலப்பாக இருந்தார்
வரலெட்சுமி நன்றாக மெலிந்திருந்தார், பிக்பாஸ் ஆர்த்தி வையாபுரி எல்லாம் ஆஜர், இந்த காயத்திரியினை பெண்களின் கண்கள் தேடுவது புரிந்தது, அவரை காணவில்லை சிக்கினால் அவ்வளவுதான்
கிராமங்களில் சுடுகாட்டில் அங்கும் இங்கும் ஓடும் சுடலை மாட சாமி போல 4 பேரை கூட்டிகொண்டு அங்கும் இங்கும் சீரியசாக ஓடிகொண்டிருந்தார் விஷால், விஷயம் என்னவென்றால் ஒன்றுமே இல்லை
சும்மா ஓடிகொண்டே இருப்பது,, நில்லுங்க சார், நீங்க இங்க அங்க ஓடி என்ன செய்றீங்க சார், 1 நிமிசத்துல 10 வாட்டி ஓடிட்டிங்க சார் , ஆனால் ஏன் ஓடினீங்கனுதான் தெரிலிங்க சார்” என கவுண்டமணி பாணியில் கேட்க துடித்தாலும் அடக்கிஆயிற்று
மனிதர் சீன் பார்ட்டி என்பதில் சந்தேகமே இல்லை
யார் வந்தால் என்ன? யார் நின்றால் என்ன? நமது நோக்கமும் தவமும் தலைவி அல்லவா? எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை
ஆம், அவர் வரவில்லையாம் கடைசி நேரத்தில் அவரின் பயணம் ரத்து செய்யபட்டுவிட்டதாம்
அதை கேட்டு ஆத்திரம் பொங்கிற்று, தலைவி இல்லாத விழா நடத்த உங்களுக்கு என்ன தைரியம் என மகா கோபம் வந்தது
பைபிளில் வரும் சாம்சன் போல அந்த ஹோட்டலை இடித்து போடும் அளவு ஏமாற்றம் வந்தது, ஆனால் என்ன? தலைவி இனி அமைச்சர் என்ற அடைமொழியோடு வருவார், அன்று பார்த்துகொள்ளலாம்
அந்த ஹோட்டல் சாமான்யம் அல்ல, மோடி வந்தபொழுது அங்குதான் தங்கினார், கூட்டம் நடத்தினார், இனி குஷ்புவும் அமைச்சராக அங்குதான் வருவார்
எப்படியோ தலைவிக்காக தேடி தேடி அவரை தவிர மற்ற எல்லோரையும் மிக அருகிருந்து பார்த்தாயிற்று
நிகழ்ச்சி ஸ்பான்சர் என்ற முறையில் சுபாஷ்கரனை போல சரவணா ஸ்டோர் அண்ணாச்சியும் வந்திருந்தார், நல்ல வேளையாக அவர் ஆட்டம் எல்லாம் பார்க்கவில்லை
சச்சு முதல் ஸ்ரிதிவ்யா வரை, ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை எல்லோரையும் ஒரே இடத்தில் பார்த்தாயிற்று
எங்கோ சிறைவாழ்வு வாழும் ஒருவனுக்கு அதுவும் சொந்த மண், இனம், மக்கள் என எல்லாவற்றையும் துண்டித்து வாழும் ஓருவனுக்கு இவை எல்லாம் எப்படி சாத்தியமாயிற்று என்றால் நிச்சயம் முகநூல்தான்
அந்த அற்புதமான நண்பர்களால்தான் சாத்தியமாயிற்று
வெட்டியாக எழுதினாலும் உருப்படியான காரியங்களுக்கு உதவும் பெரும் அதிகாரத்தில் உள்ளவர்கள் நட்பினை பெற்றிருக்கின்றேன், அதனை நினைத்து மகிழ்ச்சி
“எப்ப பாத்தாலும் பேஸ்புக், எப்ப பாத்தாலும் வாசிப்பு..” என சொல்லி சில நேரம் விவாகரத்து என பூகம்பம் எல்லாம் காட்டிய பாகம்பிரியாளுக்கு சிவகார்த்திகேயனை கண்டதில் மகிழ்ச்சி
“இனி நீங்க நைட் முழுக்க எழுதினாலும் சரி, காப்பி வேண்டுமானாலும் போட்டுதருகின்றேன்..” என்ற அளவில் இறங்கிவிட்டார், இது மாபெரும் வெற்றி, பொன் எழுத்துக்களால் பொறிக்கபட வேண்டிய வெற்றி
உதவிய முகநூல் நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி, விழலுக்கு நீர் இறைக்கவில்லை என்பது மட்டும் புரிகின்றது, அந்த நண்பர்களை இறைவன் ஆசீர்வதிக்கட்டும்
ஆக தங்க தலைவியினை பார்த்து சங்கத்தின் நடவடிக்கைகளை எடுக்க மேற்கொள்ளபட்ட பெரு முயற்சி இப்படி எல்லா நடிகைகளையும் பார்த்த்து அக்கால படங்களுக்குள் சென்று வந்து, சிவகார்த்திகேயன் படம் பார்த்த திருப்தியோடு முடிந்தது
“கானமுயல் எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது” என்பது இதுதான்.
“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து”. என ஊக்கம் பெற வேண்டிய இடமும் இதுதான்
இதனால் விரைவில் தங்க தலைவியினை சந்தித்துவிடலாம் எனும் நம்பிக்கை வலுபெற்றிருக்கின்றது
“வாங்க பாஸ்..” என யதார்தமாக படமெடுக்க இழுத்த விஜய் சேதுபதியும், “உங்கள் படம்னா என் மகளுக்கு பிடிக்கும் சார்” என்றவுடன், “அப்படியா இந்த தூங்கு மூஞ்சியும் எனக்கு ரசிகையா.” என கலாய்த்த சிவகார்த்திகேயனும் மறக்க முடியாதவர்கள்
.
ஆனாலும் ரஜினியோடு படம் எடுக்க முடியவில்லை என்பதில் மகளுக்கும் பாகம்பிரியாளுக்கும் கொஞ்சம் வருத்தம்
அதனால் என்ன?
மனிதர் இன்னும் கொஞ்சநாளில் “அம்மா வோட்டுபோடுங்க தாயே என வீடு வீடாக வரபோவது உறுதி, “எப்பா இங்க நில்லு, ம்ம் பின்னாடி நில்லு, குனிஞ்சி நில்லு” என வளைத்து வளைத்து படமெடுக்கும் காலம் நெருங்கி வருகின்றது பின்னர் ஏன் ஓடி சென்று பார்க்க வேண்டும்? அவரே வருவார்.