இன்று மலேசியாவில் நட்சத்திர கொண்டாட்டம்
இன்று மலேசியாவில் காலை பத்து மணி முதல் இரவு 11 மணி வரை நட்சத்திர கொண்டாட்டம் நடக்குமாம், இவ்வளவு நேரம் அடைபட்டு கிடக்க முடியுமா? என்பதால் செல்லவில்லை
காலையில் நடிகர்கள் கிரிக்கெட் விளையாடுவார்களாம், மலேசியர்களுக்கு கிரிக்கெட் பிடிக்காது, இவர்களுக்கு விளையாட்டு வராது என்றாலும் ஆடுவார்கள் , ஆக இவர்கள் என்ன விளையாடினாலும் அவர்கள் கைதட்ட போவது உறுதி
பேட்ஸ்மேன் போல்ட் ஆனாலும் அவர்கள் சூப்பர் சார் என பேட்ஸ்மேனுக்கு கரகோஷம் எழுப்புவார்கள், பேட்ஸ்மேன் சிக்சர் அடித்தால் பவுலருக்கு கை கொடுத்து வாழ்த்துவார்கள்.
இன்னும் பல கொடுமைகள் நடக்கலாம்
கிரிக்கெட்டை அடுத்து கால்பந்து விளையாடுவார்களாம், இதுதான் சிக்கல்
மிகபெரிய அணியாக உருவெடுக்கவில்லை எனினும் மலேசியர்கள் கால்பந்து வெறியர்கள், எல்லா டீக்கடையிலும் ரொனால்டோவோ நெய்மரோ அதிகாலை முதல் நள்ளிரவு வரை டிவியில் பந்தை மிதித்துகொண்டே இருப்பார், கிளப் மேட்சை எல்லாம் உறங்காமல் பார்ப்பார்கள்
அப்படிபட்ட மலேசியர்களிடம் இவர்கள் கால்பந்து ஆடபோவது காமெடி காட்சிகளில் ஒன்றாக இருக்கலாம்
கடும் மழைகாலம் என்பதால் நிச்சயம் மழை வந்து நடிகர்களை காப்பாற்றும் என நம்பலாம்.
இப்படியாக பொழுதை கழித்துவிட்டு இரவு கலைநிகழ்ச்சிகளுடன் முடியுமாம்
ஸ்பான்சர்கள் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் லைக்கா என சொல்லபடுகின்றது, லைக்கா என்பது ரஜினியின் 2.0 படத்திற்காக களமிறங்குகின்றது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை, இல்லாவிட்டால் ரஜினி இதற்கெல்லாம் வருவது சாத்தியமே இல்லை
விழாவிற்கு ரஜினியினை ஹெலிகாப்டரில் மைதானத்திற்கு அழைத்து வருவார்களாம், அந்த அளவு ரஜினியின் படத்திற்காக கொட்டி விளம்பரபடுத்துகின்றது லைக்கா
ஆனால் சரவணா ஸ்டோர் அதிபர் ஏன் உள்ளே வருகின்றார் என்பதுதான் யோசிக்க வேண்டிய விஷயம். விரைவில் அவர் படம் எடுக்கலாம் அதன் பின் உதயநிதி ஸ்டாலின் ஸ்டைலில் அவரே வரலாம்
அதன்பின் எப்படி போகபோகின்றார் என்பதை காலம் சொல்லும்
நேற்றிரவு நடந்த நட்சத்திர கிரிக்கெட் அணி அறிவிப்பு பற்றி சொல்லி இருந்தோம், ஆளாளுக்கு ரஜினியினை கலாய்க்கின்றார்களாம், ” ஏஏஏஏ இதுதான் ஆன்மீக அரசியலா?..” என கலாய்த்துவிட்டார்களாம்
ஆனால் 1972 இடைதேர்தலில் வென்றுவிட்டபின், ஏழைகளின் கட்சி என அரசியல் செய்த ராமசந்திரன் அதன்பின் கட்சி நடத்திகொண்டே உலகம் சுற்றும் வாலிபன், மதுரையினை மீட்ட பாண்டியன், மீணவ நண்பன் என படமெடுத்தது எல்லாம் எவன் நினைவுக்கும் வரவில்லை
கட்சி நடத்துபவன் தன் சொந்த வேலையினை பார்க்க கூடாதா, இதெல்லாம் நன்றாக கலாய்ப்பார்கள்
ஆனால் “அரசியல்வாதி என்றால் அவன் பிச்சைகாரனாய் அலைய வேண்டுமா?” என பகிரங்கமாக கேட்ட தினகரனின் கேள்விக்குத்தான் பதில் சொல்ல யாருமில்லை.