ஹரியான சிங்கத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து

வெள்ளையன் இந்தியாவில் பஞ்சாபில்தான் கிரிக்கெட்டை விதைத்தான், ஹாக்கியின் பூமியாக இருந்த பஞ்சாப் பிரிந்து பாகிஸ்தானுக்கு சென்றபின்பும் இந்திய பஞ்சாப் அட்டகாசமான வீரர்களை கொடுத்தது, அது ஹரியானா என பிரிந்த பின்பும் கொடுத்துகொண்டே இருக்கின்றது
அப்படி ஹரியானாவில் பிறந்த சிங்கம்தான் கபில்தேவ்
கிரிக்கெட் அவருக்கு உணர்வில் கலந்திருந்தது, நல்ல விளையாட்டு வீரனுக்கு மனமும் உடலும் உதிரமும் ஒரே நோக்கில் ஓட வேண்டும் கபிலுக்கு அப்படி ஓடியது
அதுவரை வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா , இங்கிலாந்து அணிகள்தான் வலுவானவர்கள், இந்திய அணி அன்று இப்போதிருக்கும் யுஏஇ அல்லது கென்யா போன்ற நிலையில் இருந்தது
பட்டோடி, சுழற்பந்தை சொல்லிகொடுத்த சந்திரசேகர் என சில முகங்கள் பிரபலாயிருந்தாலும் இந்திய அணி பிரபலம் ஆகவில்லை, யாரும் கணக்கில் எடுக்கவில்லை
கபில் உள்ளூர் கிரிக்கெட்டில் கவனம் பெற்றிருந்தார், அதனால் இந்திய அணியிலும் 20 வயதில் இடம்பிடித்திருந்தார், 24 வயதில் உலககோப்பைக்கு இந்தியா சென்றது
அன்று உலககோப்பை தொடங்கி இரு போட்டிகள் முடிந்திருந்தன, இந்தியாவில் பாஜக போல மிருக பலத்தோடு இருந்தது வெஸ்ட் இண்டீஸ், சோபர்ஸ், கிரிக்கெட் அரக்கன் விவிஎன் ரிச்சர்ட்ஸ், புயல்வேக பந்துவீச்சாளர் மார்ஷல், ஜோர்டன் என யாரெல்லாமோ இருந்தார்கள்
எல்லோரும் பெயரை கேட்டாலே அலற வைக்கும் ரகம், இதனால் முதல் இரு முறை கோப்பைகளை தட்டிய வெஸ்ட் இண்டீஸ் மூன்றாம் முறை கைபற்ற வந்திருந்தது
அடுத்து பலம் வாய்ந்த அணி ஆஸ்திரேலியா ஆலன் பார்டர் போன்றவர்கள் இருந்தாலும், அவர்களால் வெஸ்ட் இண்டீஸை நெருங்கமுடியவில்லை
அவர்களுக்கு எதிரி இங்கிலாந்து, இருவரும் மோதினால் அணல் பறக்கும், அவர்களில் ஒருவர் வெஸ்ட் இண்டீஸோடு மோதினால் அவர்கள் பறப்பார்கள்
இவைகள்தான் பலம் வாய்ந்த அணி, அடுதது எல்லாம் சும்மா இதில் ஜிம்பாப்வே அன்று அறியபட்ட அணி காரணம் அன்று அங்கு வெள்ளையன் ஆட்சி இருந்தது, தென்னாப்ரிக்க அணி இனவெறுப்பு காரணமாக வெளியில் அனுமதிக்கபடவில்லை
நியூசிலாந்து பெரிய அணி அல்ல, இலங்கை அணி எல்லாம் காட்சியிலே இல்லை
இந்தியாவும் பாகிஸ்தானும் பெரிய அணிகளிடம் மோதாமல் அவர்களுக்குள் மோதிகொள்வார்கள், அங்கு மியான்டட் போன்றவர்கள் இருந்தார்கள், இங்கு ஸ்ரிகாந்த், கபில் போன்றவர்கள் இருந்தார்கள்
இருவரும் மோதினால் அணல் பறக்கும், ஆனால் இருவரும் இவர்களை தவிர யாரிடம் மோதினாலும் பார்க்க ஆள்வராது, காரணம் முதுகிலே மிதிபட்டு திரும்புவார்கள், பின் இருவரும் முறைத்துகொண்டு நிற்பார்கள்
பாகிஸ்தான் ஆட்டத்தை காண ஆண்களை விட பெண்கள் கூட்டம் அலைமோதும், காரணம் அழகன் இம்ரான் கான். இன்று வயதானாலும் அன்று உலகெல்லாம் இளம்பெண்களை தன் பின்னால் அலையவிட்டதில் அவரை போல் யாருமில்லை, இன்னொருவன் வரவும் முடியாது
அவரை பற்றி இன்னொருநாள் எழுதலாம், இப்பொழுது கபில் பக்கம் வரலாம்
1983 உலக கோப்பை தொடங்கியது, புருடென்சியல் நிறுவணம் வழங்கிய கோப்பை அது. இந்தியா வெஸ்ட் இண்டீஸ் சிம்பபாவே, ஆஸ்திரேலியா ஒரு செட்டாகவும் இங்கிலாந்து, பாகிஸ்தான் ,நியூசிலாந்து ஒப்புக்கு சப்பாணியாக இலங்கையும் இருந்தது
அன்று 60 ஒவர்கள் கொண்ட போட்டி நடந்தது.
இந்தியா ஆரம்ப லீக் போட்டியிலே அசத்தியது, ஆம் ரவிசாஸ்திரி , யஷ்பால் சர்மா வின் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை வென்றிருந்தது, ஆனால் அது அதிர்ஷ்டத்தில் கிடைத்த வெற்றி, தூங்கிய சிங்கத்தின் மீதான எலியின் ஆட்டம் என சொல்லிவிட்டார்கள்
அடுத்த ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் அடித்து நொறுக்க, இனி யார் இவர்களை வெல்ல உண்டு என்றது உலகம்
இந்தியா ஜிம்பாப்வேயோடு மோதியது, வழக்கமான சொதப்பலை கொடுத்தது 20 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது, அதுவரை பவுலராக அறியபட்ட கவில் மட்டையோடு களம்புகுந்தார்
இதுதான் ஒரிஜினல் இந்தியா, இவர்கள் வெஸ்ட் இண்டீஸை வென்றார்களாம் என சிரித்தது அரங்கம்
அவர் வாழ்வில், ஏன் கிரிக்கெட் உலகிலே அசாத்திய இன்னிங்க்ஸை அவர் ஆடினார், அன்று அவர் பவுலர் என்பதையே மறந்தார், அணி வெற்றிபெற வேண்டும் என்ற வெறியே அவரில் இருந்தது. அவருக்குள் புகுந்த சாமி ஆடியது, அவர் ஆட ஆட அந்த கிரவுண்டே ஆச்சரியமாக பார்த்தது
ஆம் 175 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார், அன்று இன்றுபோல் வீடியோ எல்லாம் எடுக்கமாட்டார்கள், அதுவும் இந்தியா என்றால் கிடையவே கிடையாது. இன்றுவரை நீங்கள் எங்கும் அந்த அசாத்திய ஆட்டத்தை பார்க்கமுடியாது, கபில் இன்றும் ஏங்கி அழும் விஷயம் அது
அவர் என்ன? ஒவ்வொரு இந்தியனும் அதை நினைத்து அழுவான். நெடுங்காலம் அந்த 175 என்பது சாதனையாக இருந்தது பின்பு வெஸ்ட் இண்டீஸின் ரிச்சர்ட்ஸ் அதனை உடைத்து பழிவாங்கினார், பின் அன்வர் சென்னையில் தன் வசபடுத்தினார் (உபயம் கும்ப்ளே) அதன் பின் சச்சினும் ரோகித்சர்மாவும் மறுபடி இந்திய வசமாக்கினர், இந்தியர் தொடங்கிய சாதனை இன்று இந்தியரிடையே இருக்கின்றது
அதில் 16 பவுண்டரியும் 6 சிக்சரும் இருந்தது , இன்றுவரை உலகின் டாப் டென் இன்னிங்க்ஸில் அதுவும் ஒன்று.
அந்த போட்டியில் இந்தியா வென்றது, ஒரு வழியாக அரையிறுதிக்கு வந்தது, அங்கு இங்கிலாந்து சிரித்துகொண்டிருந்தது
காரணம் அவர்கள் சொந்தநாடு, இந்தியாவினை விட அது வலுவாக இருந்தது, முதலில் ஆடிய இந்தியா யஷ்பால் சர்மா, மொகீந்தர் அமர்நாத்தின் சாதுர்யத்தால் 217 ரன்கள் குவித்தது
சீ இவ்வளவுதான் ரன்னா, இப்பொழுது பார் என களம்புகுந்த இங்கிலாந்து வைகோவின் கட்சி போல் சரிந்தது. கபில் உட்பட அனைவரும் வீசிய அபார பந்துவீச்சில் 213 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து
4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்தியா இறுதிபோட்டிக்கு வந்தது, அங்கு வந்து நின்றது அரக்கன் வெஸ்ட் இண்டீஸ், அதுவும் அடிபட்ட புலியாக சீறி வந்த வெஸ்ட் இண்டீஸ்
தாவீது கோலியாத் கதைதான், இம்முறை இந்தியா தப்பாது என எல்லோரும் சொல்லியாயிற்று, இதற்கு ஒழுங்காக முதல்முறை தோற்றே வந்திருக்கலாம் என்றெல்லாம் எழுதினார்கள். இந்தியா அடிவாங்க போவதை பாகிஸ்தான், இங்கிலாந்து என எல்லா நாடுகளும் ரசிக்க தயாராயின
அது 25 ஜூன் 1983. லார்ட்ஸில் தொடங்கியது போட்டி. இந்தியா முதல் பேட்டிங். வெஸ்ட் இண்டீஸின் பந்து வீச்சு ஓக்கி புயலை விட மோசமாக இருந்தது, மூன்றாம் முறை கோப்பையினை வெல்லும் வெறி இருந்தது
இந்தியா முடிந்த அளவு ஆடியது, அரக்கர்கள் விடுவார்களா? மகா வேகம், அட்டகாசமான தடுப்பு என மிரட்டி 183 ரன்களுக்குள் சுருட்டினார்கள்
ஸிரிகாந்த் 36 ரன்கள் எடுத்தது அதிகபட்சம், அமர்நாத் 28,கபில் அதிரடியாக 3 பவுண்டரி அடிப்பதற்குள் தம்பி இது ஜிம்பாப்வே அல்ல என அனுப்பிவிட்டார்கள்
183 என்பது விவிஎன் ரிச்சர்ட்ஸ் மட்டுமே அடிக்கும் ரன், இல்லாவிட்டல ஹெயின்ஸும், கிரினீட்ஜூம் சேர்ந்து அடிப்பார்கள் என சொல்லிவிட்டனர் விமர்சனர்கள். இன்னும் 10 நிமிடத்தில் ஆட்டம் முடியும் என நம்பிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் லாயிட் கோப்பை வாங்க தயாரானார்
ஆரம்பத்தில் தூள் பரத்தியது வெஸ்ட் இண்டீஸ் முதல் விகெட் களற அரக்கன் ரிச்சர்ட்ஸ் வந்தார். மனிதர் பீமன் வகையறா
காட்டு ஆட்டம் ஆட ஆரம்பித்தார் ரிச்சர்ட்ஸ், அவர் ஒருவரே வெற்றிபெற வைப்பார் போலிருந்தது, ஒரு கட்டத்தில் கேப்பில் அவர் பந்தை தூக்கி அடிக்க பல மீட்டர் தூரம் மின்னல் வேகத்தில் ஓடிவந்து அற்புதமாக பந்தை பிடித்தார் கபில்
ரிச்சர்ட்ஸ் அரக்கன், போல்ட் , எல்பிடபிள்யு எல்லாம் அவரிடம் நடக்காது, தூக்கினால் சிக்ஸர் இல்லாவிட்டால் அட்டகாசமாக பவுண்டரி அடிப்பார், ஒரே வாய்ப்பு அந்த பந்துதான், அதை கபில் வீணாக்கவில்லை
அதன்பின் இந்தியா அசத்தியது, வெஸ்ட் இண்டீஸ் அணியினை 140 ரன்களுக்கு சுருட்டி வீசியது கபிலின் இந்திய அணி
இமாலய வெற்றி அது, தாவீது கோலியாத்தினை கொன்றது போல் ஆச்சரியமது. இந்திய அணி கோப்பைக்கான முழு தகுதி கொண்ட அணி, போராடி வெல்லும் போட்டிக்கு அந்த ஆட்டம் முழு எடுத்துகாட்டு என கிரிக்கெட் உலகம் குறித்துகொண்டது
முதன் முறையாக கிரிக்கெட் உலக கோப்பையினை இந்தியா பெற்றது, 24 வயது கபில் இந்தியா முழுக்க பிரபலமனார் அவரோடு கிரிக்கெட்டும் பிரபலமானது
இந்திய கிரிக்கெட்டின் பீஷ்மர் ஆனார் கபில்தேவ், அந்த வெற்றி ஆரவாரமான வெற்றி. அந்த வெற்றியில்தான் கபிலை முன்மாதிரியாக வைத்து பலர் வந்தார்கள், முழு உணர்ச்சி அவர்தான் கொடுத்தார், நம்பிக்கையினை அவர்தான் ஊட்டினார்
கபிலை கண்டு அசார், சச்சின் என எத்தனையோ ஜாம்பவான்கள் உருவாகி வந்தனர்
உலக கோப்பைபைக்கு பின்னும் கபிலின் ஆட்டம் தொடர்ந்தது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட் எடுத்தவர் எனும் சாதனையுடனே அவர் விடைபெற்றார்
அதன் பின்பும் சும்மா இருக்கவில்லை கிரிக்கெட்டை வளர்க்க சிசிஎல் என்ற போட்டிகளை தொடங்கினார், அதனை கண்ட வியாபாரிகள் கொண்டுவந்ததுதான் ஐபிஎல்
திறமையாளர்களை கண்டறிய அவர் கொண்டுவந்ததத முறைதான் சிசிஎல். ஆனால் ஐபில் என வந்து வணிமாயிற்று எல்லோரும் சம்பாதிக்கின்றார்கள்
இந்த தேசத்தில் கிரிக்கெட்டுக்கு புத்துயிர் ஊட்டிய அவருக்கு சில அவமானமும் நடந்தது, அவர் உண்மையான கிரிக்கெட்டை தேடுவதை அறிந்த மேல்வர்க்கம் பல பழிகளை சுமத்தியது , அப்பொழுது கண்கள் கலங்கிய கபில் தேவினை யாராலும் மறக்க முடியாது
அம்மனிதனை அப்படி அழவிட்டிருக்க கூடாது, கிரிக்கெட்டில் மிக பெரும் புரட்சியினை இத்தேசத்திற்கு கொடுத்தவன் அவன்
எத்தனை பேர் கடலை கடந்தாலும் கொலம்பஸ் வரலாற்றில் நிலைத்தவன், எத்தனை பேர் எவரெஸ்டில் ஏறினாலும் டென்சிங் வரலாற்றில் நிலைத்தவன்
அப்படி எத்தனை சச்சின், டோனி , கோலி வந்தாலும் கபில் என்றென்றும் இந்திய கிரிக்கெட்டின் பிதாமகன்
அந்த ஹரியான சிங்கத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து,
இந்திய கிரிக்கெட் அணி உலகின் எந்த அணிக்கும் குறைந்ததல்ல என பெரும் புலியான வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி உலகிற்கு சொன்ன அந்த சிங்கத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து