இந்திய பயணம் இனிதாகவே முடிந்தது…

அவிழ்த்து விடபட்ட கன்று ஒன்று தொழுவத்தில் கட்டபட்டாயிற்று, செக்கு மாட்டின் கழுத்தில் நுகத்தை பொருத்தியாயிற்று

அதாவது சங்கம் இந்திய பயணத்தை முடித்துவிட்டு திரும்பிவிட்டது.

எத்தனையோ பயணங்களை செய்தாலும் இப்பயணம் வாழ்வில் மறக்க முடியாது, அந்த அளவு நண்பர்கள் நெகிழ செய்திருக்கின்றார்கள், சிறிய கொடியில் பெரும் பூசனி காய்ப்பது போல இந்த முகநூல் எனும் சிறிய முயற்சி ஏராளமானவர்களை பெற்று கொடுத்திருப்பது அங்கு சென்றபின்புதான் தெரிந்தது

நண்பர் Kennedi M G விமான நிலையத்திற்கே வந்திருந்தார், அவர் இல்லத்திற்கு அழைத்து அற்புதமான விருந்தளித்தார். அதுவும் மீன் குழம்புடன். அவரின் அன்னை முகமும் அந்த சமையலும் மறக்க முடியாதது.

சென்னையில் என்னை 3 நாட்கள் நிழலாக இருந்து கவனித்துகொண்டவர் Senthil Kumar Krishnan என்பவர். உண்மையில் அவர் செய்த உதவிகளுக்கு பல இடங்களில் கண்ணீரே வந்தது. அப்படிபட்ட உதவிகள்

அவன் உடன்பிறவா சகோதரன் ஆகிவிட்டான், அதற்காக‌ பாட்டன் சொத்தில் எல்லாம் பங்கு கொடுக்க முடியாது.

நண்பர் Durai Dhurai Sathish அரக்கோணத்திலிருந்து ஓடிவந்தார், நெடுநாள் பார்க்க விரும்பிய சென்னை கோட்டையினை அவரோடுதான் சுற்றிபார்த்தேன். அற்புதமான விருந்தும் அளித்தார், மறக்க முடியாத நண்பர் அவர்.

சென்னை நிச்சயம் வளர்கின்றது, சர்வதேச தர கட்டங்கள் வந்திருக்கின்றன, ஆனால் இந்தியாவிற்கே உரிய வசதி குறைபாடுகள் குறிப்பாக சாலைகள் அப்படியே இருக்கின்றன‌

சென்னை வாசிகளுக்கு ஸ்பெஷல் வாகனங்கள் தயாரிக்கின்றார்கள் போல, அவர்களுக்கு சிக்னல் இண்டிகேட்டர் எல்லாம் தேவையே இல்லை. எல்லா விஷயத்திற்கும் சவுண்ட் ஹாரன் தான்

நிச்சயம் ஒழுங்காக விதிகளை மதித்தால் இந்த ஹாரன் அடிக்கும் அவசியமே இல்லை. இண்டிகேட்டர்கள் கண்ணாடி போன்றவற்றை சரியாக பின்பற்றினால் ஹாரன் அடிக்கும் அவசியமே இல்லை

நமக்கு சென்னை சாலைகளில் குறிப்பாக சிக்னலை கடந்து செல்லும்பொழுது முள்ளிவாய்க்காலில் சிக்கியது போலவே இருந்தது, நிச்சயம் சாவுதான் என பல நேரங்களில் எண்ணம் வந்தது

அது என்ன மர்மமோ தெரியவில்லை அந்திபொழுது பறவை கூட்ட கீச்சு குரலாக ஏகபட்ட ஹாரன்கள் ஒலித்தாலும் யாருக்கு யார் ஹாரன் எழுப்புகின்றார்கள் என்பது சம்பந்தபட்டவர்களுக்கு மட்டும் அட்டகாசமாக புரிகின்றது. சென்னையின் பெரும் விந்தை இதுதான்

புத்தக கண்காட்சியினை ஒட்டி Rajathi Salma வினை சந்திக்க முடிந்தது, தனது வழக்கமான சிரிப்புடன் மிக எளிமையாக இருந்தார், புத்தக கண்காட்சியில் அவரின் அர்த்த ஜாமத்து கதைகள் புத்தகம் அப்பொழுதுதான் வாங்கி இருந்தேன்

இரவில் அப்புத்தகத்தை வாசித்தால் அது சாதாரண நாவல் அல்ல, பெரும் அதிர்வுகளை மனதில் கொடுக்கும் வலி நிறைந்த நாவல், கொஞ்சம் பொறுமையுடன் நுண்ணிய ரசனையுடன் வாசிக்க வேண்டிய நாவல் அது. சந்தேகமில்லை அவர் தமிழகத்து “தஸ்லிமா நஸ்ரின்”.

மிக நீண்ட நாள்களாக சந்திக்க இருந்த இருவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. கலைஞரின் சந்திப்பு தனியாக எழுத வேண்டிய விஷயம். Pa Raghavan மிக பிசியான மனிதர். நீண்ட நேர காத்திருப்புக்கு பின் அவரை சந்திக்க முடிந்தது

அவர் பெரும் சுரங்கம், அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் ஏராளம் இருக்கின்றன. நேரமின்மையால் அதிகம் பேச முடியவில்லை. மின்னல் வேக சந்திப்புகள் எல்லாம் இப்படித்தான்

ஆனாலும் துரோணரை கண்ட ஏகவலைவன் போல அப்படி ஒரு மகிழ்ச்சி, கொஞ்ச நேரம் பேசினாலும் நிலமெல்லாம் ரத்தம் புத்தகத்திற்காக அவர் ரத்தம் சிந்தி உழைத்த கதை தெரிந்தது, கொண்டாடபட வேண்டிய உழைப்பு அது.

பைபிள் என்ன சொல்லும்? கிறிஸ்து விண்ணகம் சென்றதோடு முடிந்துவிடும். அதன் பின் 2000 ஆண்டுகளாக யூத இனம் என்ன பாடுபட்டது என்பது எந்த நூலிலும் சொல்லபடாத விஷயம், நமக்கு அதன் பின் தெரிந்ததெல்லாம் ஹிட்லர் கால அட்டகாசம் அதன் பின் பாலஸ்தீன பிளப்பு

ஆனால் 2000 வருட யூத வரலாற்றை அதையொட்டி கிறிஸ்தவ, இஸ்லாமிய உலக வரலாற்றை தேடி கொடுத்த அந்த மனிதன் நிச்சயம் இந்த மும்மத மனிதர்களாலும் கொண்டாடபட வேண்டியவர். கிறிஸ்தவ குருமார்கள் எல்லாம் அவரை கவுரவிக்க வேண்டும், ஆனால் அந்த சனியன்கள் வீரமணி மேடையிலும், மோடி ஒழிக என கோஷமிட்டு அர்த்தமில்லா விஷயங்களை செய்துகொண்டிருக்கின்றது

Savithri Ramakrishnan அவர்களை பார்க்க முடிந்தது, கொஞ்ச நேரம் பேச முடிந்தது. உலகில் கடவுளின் பாஷை தவிர எல்லா மொழியும் அறிந்திருக்கின்றார் அதுவும் இலக்கண சுத்தமாக‌ அவரின் இல்லம் கோவில் போலவே இருந்தது, இம்மாதிரி பெரியவர்கள் இக்காலத்திலும் இருப்பது மிக மகிழ்ச்சியான விஷயம்.

சில விஷயங்கள் மனதில் பாரமும் கவலையும் ஏற்றுகின்றன, நாம் மிகபெரும் மனிதர் என்பது போல பலர் ஓடி ஓடி வந்து சந்தித்தார்கள், திருச்சியில் ரெயில் 2 நிமிடம் நின்றபொழுது நள்ளிரவில் காத்திருந்த நண்பர் Periya Samy மனதை உருகவைத்தார், அதன் பின் தூங்க நெடுநேரம் ஆனது

இதுதான் நம்பர் என சொன்னவுடன் ஆளாளுக்கு அழைத்தார்கள், தமிழகத்தின் எல்லா நகரங்களிலிருந்தும் அழைப்பு வந்தது, முடிந்த வரை பதிலளித்தேன்

அழைத்தவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, மிக பெரும் அந்தஸ்தில் இருப்பவர்கள், அவர்கள் நம்மை அழைத்தபொழுது தகுதி மீறுகின்றோமோ எனும் அச்சம் ஆட்கொண்டது

சில சீமானியர்கள் அழைப்பும் வந்தது, “ஏய்ய்..” என அவர்கள் கத்த தொடங்கியதும் ஹலோ என சொல்லிவிட்டு போனை பாக்கெட்டில் வைத்துவிட்டேன், பின் மறக்காமல் கொஞ்ச நேரம் கழித்து அடுத்த ஹலோ, இப்படி வெறுப்பேற்றியதில் அதன் பின் அவர்கள் அழைக்கவே இல்லை

புத்தக கண்காட்சி முதல் எமது பக்கத்து டவுண் வரை பலர் ஓடிவந்து கை கொடுத்தார்கள், இத்தனை பேரின் கவனத்தையா பெற்றுவிட்டோம் என்ற அதிர்ச்சி இன்னும் விலகவில்லை

ஆலய சிறப்பு வழிபாட்டில் இருக்கும்பொழுதும் பலர் தேடி வந்தனர். அவர்களில் Alankara BenedictRaja Paul Ignatius இருவரும் முக்கியமானவர்கள்.

அதுவும் Raja Paul Ignatius சவுதியில் இந்தியர்களுக்கு ஆற்றிய பணியால் மிகபெரும் மதிப்பினை பெற்றவர். அம்மனிதர் நம்மை தேடி ஆலயம் வந்தது சாதாரண விஷயமாக தோன்றவில்லை

அதே வளாகத்திற்கு அடுத்தநாள் தூத்துகுடி நண்பர் Sundar G Santhosh ஒரு அழகிய பால் சங்கும், ஒரு முத்தும் கொண்டுவந்து கொடுத்து வாழ்த்தினார், கிட்டதட்ட 90 கிமீ தூரம் கடந்துவந்து அவர் சந்தித்ததில் அசந்து விட்டோம்

சென்னையில் இருக்கும்பொழுது ஒரு பைசா செலவில்லை, எது எமது தேவை என அறிந்து சிம் கார்டு முதல் போக்குவரத்து வரை நண்பர்களே பார்த்துகொண்டார்கள், இதெல்லாம் கொஞ்சமும் எதிர்பாரா அதிர்ச்சிகள்.

ஒரு சில அரசியல் தலைவர்களுடன் பேசும் வாய்ப்பும் கிடைத்தது.

எத்தனை சந்திப்புகள் , எத்தனை அன்பளிப்புகள், எத்தனை விருந்துகள், இவர்களுக்கெல்லாம் நாம் என்ன செய்தோம் என்றால் ஒன்றுமே இல்லை

அதனிலும் ஆச்சரியம் இவர்களை இதற்கு முன் சந்தித்ததே இல்லை, ஆனால் பல்லாண்டு பழகியவர்களை போல பழகினார்கள்

இவர்களுக்கு எல்லாம் என்னால் செய்ய முடிந்த‌ கைமாறு ஒன்றே ஒன்றுதான், எல்லோருக்காகவும் புனித அந்தோணியாரிடம் மனமுருக வேண்டிகொண்டேன், நிச்சயம் அவர்களை அந்தோணியார் ஆசீர்வதிப்பார்

எல்லோரையும் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி, ஒரு சிலரை பெரு முயற்சி எடுத்தும் சந்திக்க முடியாததில் பெரும் வருத்தம். காரணம் சென்னையில் நினைத்தபடி பயணங்களை முடிக்க முடிவதில்லை என அங்கு சுற்றியபின்புதான் தெரிந்தது

அவ்வகையில் Somas Kandhan, கு.மா.பா இளங்கோவன் , Senthil Vasan MJyothi MahalingamS PremaJebamani MohanrajVino JasanArivarasu Coonghya போன்றோரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கின்றேன், அந்த பெரியவர்கள் என்னை மன்னிப்பார்கள் என மனமார நம்புகின்றேன்

Babu Rao என்பவர் வருவதாக சொல்லி ஏமாற்றிவிட்டார், அவர் வாழ்வில் நயந்தாராவினை சந்திக்காமலே போகட்டும் என சாபமிட்டாயிற்று

புத்தக கண்காட்சியும், கலைஞர் சந்திப்பும் தனியாக எழுத வேண்டிய பதிவுகள். ஒவ்வொன்றாக எழுதலாம்

எம்மை சந்தித்தோருக்கும், அழைத்து பேசியவர்களுக்கும் மிக்க நன்றிகள்

தங்க தலைவி குஷ்புவினை சந்திக்கா பெரும் குறையினை தவிர சங்கத்து பயணம் இனிதே நிறைவேறிற்று. அதற்கான காலம் இன்னும் வரவில்லை என சங்கம் மனதை ஆற்றிகொள்வதை தவிர வேறு வழியில்லை

தலைவி வாழும் சென்னையினை சுற்றிவந்ததே சங்கத்திற்கு பெரும் மகிழ்ச்சி..

இத்தனை பேர் தேடி ஓடி வந்ததிலும், பெரும் வரவேற்பையும் அன்பையும் அன்பளிப்புகளையும் கொட்டி கொடுத்ததில் உணர்ந்தது ஒன்றுதான்

இனி எழுதுவதை நிறுத்த முடியாது, அது அவர்களுக்கு செய்யும் துரோகம் ஆகிவிடும் , நன்றி கொன்ற பாவமாகிவிடும்

இன்னும் ஏராளம் எழுதவேண்டும் என்ற பொறுப்புணர்வு மனதில் வந்து அமர்கின்றது. அந்த பொறுப்பினைத்தான் எல்லோரும் வந்து கொடுத்துவிட்டு சென்றிருக்கின்றார்கள். அவர்களின் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் பாத்திரமான மனதினை இறைவன் எமக்கு அருளட்டும்