பாரதியார் பலகலைகழக ஊழல் பெரும் விவகாரமாகின்றது…
இந்த பாரதியார் பலகலைகழக ஊழல் பெரும் விவகாரமாகின்றது, பல்கலைகழக துணை வேந்தர் என்பவர் ஊழலுக்கு துணை போன வேந்தராகிவிட்டார்
இது ஏதோ பாரதியார் பலகலைகழகத்தில் மட்டும் நடக்கும் விவகாரம் அல்ல, எல்லா பல்கலைகழகங்களும் இப்படித்தான் ஊழலில் திளைக்கின்றன, பாரதியார் பல்கலைகழகம் சிக்கிவிட்டது அவ்வளவுதான்
ஆசிரியர் நியமணத்திற்கு குறைந்தபட்சம் 50 லட்சம் என்பது மார்கெட் நிலவரம், இந்த துணைவேந்தரை முறையாக விசாரிக்கும் பட்சத்தில் அவர் எத்தனை கோடி கொடுத்து பதவிஅடைந்தார் என்பது புரியும்
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சசிகலாவினை சந்திக்க எல்லா பல்கலை கழக துணைவேந்தர்களும் அணிவகுத்து சென்ற காட்சி இப்பொழுது நினைவுக்கு வந்து தொலைக்கின்றது
பல்கலைகழக விவகாரம் வெளிதெரிகின்றது, இங்காவது 50 லட்சம் வாங்கிவிட்டு பணி அமர்த்துகின்றார்கள். இந்த அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகள் இருக்கின்றதல்லவா, சாதி மதம் என்ற போர்வையில் இயங்கும் அவைகள் செய்யும் அட்டகாச கணக்கே தனி
ஒருவன் வேலைக்கு சேரும் பட்சத்தில் அவனுக்கு 5 ஆயிரம் சம்பளத்தில் பணிக்கு அமர்த்துவது, பின் அவன் 10 வருடம் பணியாற்றியபின் அவனை அரசு சம்பளத்துடன் நிரந்தரபடுத்த 40 லட்சம் பிடுங்கிகொள்வது
ஆக அவன் 10 வருட உழைப்பு வீணாயிற்று, கொடுத்த 40 லட்சத்திற்கு அவனின் வருங்கால உழைப்பும் வீணாயிற்று
அவன் பணிஓய்வுபெறும்பொழுது என்ன மிஞ்சியிருக்கும்? ஒன்றும் இருக்காது. இப்படி ஏக கொடுமைகளுக்குள் சிக்கி இருக்கின்றது உயர் கல்வி துறை
எங்கே செல்கின்றது பணம்? நிச்சயம் புல்லுக்கு பாய்ந்தது போக அரசியல்வாதிகளுக்கும் செல்லும், செல்கின்றது.
இம்மாதிரி கொடுமையில் பணிக்க்கு வருபவர்கள் என்ன செய்வார்கள்? வசூல் செய்ய நினைப்பார்களா மாட்டார்களா?
விளைவு என்னாகின்றது?
மாணவன் பாஸ் செய்ய ஒரு வசூல், பட்டம் பெற ஒரு வசூல், பிஎச்டி வாங்க சில லட்சங்கள் என அறுவடை செய்கின்றார்கள். எல்லா பட்டமும் யாரும் வாங்கலாம் கவனியுங்கள் படிக்க வேண்டாம் வாங்கலாம்.
இவ்வளவு பணம் கொடுக்கின்றோம் நம்மை யார் என்ன செய்யமுடியும் எனும் இறுமாப்பில் சில பேராசியர்கள் எல்லை மீறி செய்வதுதான் பாலியல் இம்சைகள் முதல் பல
காரணம் பணம் மட்டுமே தங்களை காக்கும் எனும் மனப்பான்மை. அவர்கள் வசூலித்து கப்பம் கட்டும் பணம் அவர்களுக்கு அந்த தைரியத்தை கொடுக்கின்றது.
இந்த லஞ்சத்தாலும் கொடுமையாலும் மாணவர்களின் படிப்பும் தரமும் பாதிக்கபட்டு திறனற்ற தரமற்ற மாணவர்களை பட்டதாரிகளாக, ஆராய்சி டாக்டர்களாக உருவாக்கி பெரும் துரோகம் செய்கின்றன பல்கலைகழகங்கள்
பள்ளிகளிலும் இதே அட்டகாசம் உண்டு, பல்கலைகழகங்களுக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல பள்ளிகள்
கல்லூரியில் பட்டம் வாங்க காசு என்றால், பள்ளிகள் பெற்றோரை கசக்கி பிழியும் காட்சிகள் எல்லாம் நீங்கள் அறிந்தவை
இன்றெல்லாம் மூலைக்கு 3 மெட்ரிகுலேஷன் முதல் சிபிஎஸி வரை முளைத்திருப்பது எப்படி? யார் அனுமதி கொடுக்கின்றார்கள்? கொடுப்பவர்கள் சும்மா கொடுப்பார்களா? அல்லது கொடுத்த இவர்கள் மாணவ குடும்பங்களை சும்மா விடுவார்களா?
கல்வி என்பது மனிதனை மனிதாக மாற்றும் புண்ணிய செயல்
தமிழகத்தில் புத்தரும், சமணரும் இலவச கல்வியினை கொடுத்தனர், பின் இந்து குருகுலங்களும் வளர்த்தன. எந்த குருவும் மாணவனை சுரண்டி நிலசுவாந்தார் ஆகவில்லை
தாங்கள் இலவசமாக பெற்றதை இலவசமாகவே கொடுத்தார்கள்
வெள்ளையரில் எத்தனையோ பேர் தங்கள் சொத்துக்களை விற்று, பிச்சை எடுத்து இங்கு கல்வி நிலையம் கட்டினர்
அண்ணாமலை செட்டியார் போன்ற, மதுரை திரவியம் தாயுமானவர் போன்றவர்கள் எல்லாம் சொந்த பொருளை கொடுத்து கல்வி வளர்த்தனர்
அப்படிபட்ட இந்த தமிழகம் அரசியல்வாதிகளின் அட்டகாசத்தால் கல்வியினை இந்த அளவு கடைசரக்காக்கி நாசமாக்கி விட்டன
கல்லூரி ஆசிரியர்களுக்கு அளிக்கபடும் தகுதிக்கு மீறிய ஊதியமும் அதில் கட்டிங் அடிக்க கிளம்பும் தரகர் கூட்டமும் இந்த அநியாயங்களுக்கு இன்னொரு காரணம்
உலகளாவிய பல்கலைகழகங்களில் 200ம் இடத்திற்கு பின் வருவது சென்னை ஐஐடி மட்டுமே, இந்த பாரதியார் மனோன்மணியம் எல்லாம் வரிசையிலே வராது
அந்த அளவு கீழிருக்கும் பல்கலைகழகத்திலே இவ்வளவு பெரும் ஊழலாம், இந்த அளவு ஊழல் இருந்தால் அதன் இடம் அப்படித்தான் இருக்கும்
இந்த நிலையினை கண்டு தமிழகம் நாணத்தால் தலைகுனிந்து நிற்கின்றது, கல்விச்சாலை கசாப்புகடை அளவிற்கு சென்றுவிட்டதை எண்ணி மனம் வெம்புகின்றது
உடனடியாக செய்ய வேண்டியது பாரதியார் பல்கலைகழக பெயரை மாற்றி பூலான் தேவி பெயரை சூட்ட வேண்டியது
அவ்வளவு ஏன்? ஜெயலலிதா பெயரை சூட்டினாலும் சாலபொருந்தும்