வாஸந்தி எழுதிய ஜெயலலிதா மனமும் மாயையும்

ஜெயலலிதா மனமும் மாயையும் என்ற புத்தகம் வாசித்துகொண்டிருக்கின்றேன், வாஸந்தி அட்டகாசமாக எழுதியிருக்கின்றார். பல விஷயங்கள் அதிர்ச்சி ரகம்

முன்பே ஜெயலலிதாவால் தடுக்கபட்ட புத்தகம் என்பதால், மிக சமார்த்தியமாக ஜெயா தோழிகள், பத்திரிகையாளர் சோலை என பலர் சொல்லியதாகவே புத்தகத்தை கொண்டு செல்கின்றார் வாசந்தி

பாதிவரை படித்திருக்கின்றேன்

ஜெயலலிதா எனும் பெண்ணின் மனம் ஏன் அப்படி இறுகிபோனது என்பதை முதல்பாதி விளக்குகின்றது. அவர் நிச்சயம் புத்திசாலி ஆனால் இளமையில் இருந்து அவர் விரும்பிய எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை, விதி அவரை அலைக்கழித்திருக்கின்றது, பின்பு எம்ஜிஆர் அலைகழித்திருக்கின்றார்

இறுதியில் எம்ஜிஆர் தனக்கு வாழ்வளிப்பார் என்ற நிலையில் அவரும் கட்சியே முக்கியம் என இவரை ஏமாற்றிவிட்டே இறந்திருக்கின்றார், அவரின் சூழல் அப்படி

எதிர்காலம் தெரியா இருட்டு நிலையில்தான் சசிகலாவின் தொடர்பு கிடைத்திருக்கின்றது, ஆனால் அக்குடும்பமும் ஜெயலலிதாவினை பயன்படுத்தியே இருந்திருக்கின்றது

எம்ஜிஆரிடம் இருந்து விடுபட நினைத்த ஜெயாவால் சசிகலாவிடமிருந்து விடுபடமுடியவில்லை

மொத்தத்தில் தங்க கிளி ஜெயா, எல்லோரும் அவரவர் தேவைக்கு பயன்படுத்திவிட்டு தூர எறிந்திருக்கின்றார்கள்

ஜெயா அந்த ராமசந்திரனிடம் தனக்கு உரிமை உண்டு என தர்மயுத்தம் நடத்தியிருக்கின்றார், அவரிடமிருந்து அங்கீகாரமான உறவு கிடைக்காமல் இருந்திருக்கலாம் ஆனால் அவரின் அரசியல் வாரிசு நான் என அந்த நாற்காலியில் அமர்ந்து காட்டிவிட்டவர் ஜெயா, இன்று எம்ஜிஆருக்கு அடுத்து கல்லறையில் துயில் கொள்வதும் அவர் சவாலில் வென்றுகாட்டிய விஷயங்கள்

இந்த புத்தகத்திற்கு ஜெயா எதிர்ப்பு தெரிவித்ததில் விஷயம் உள்ளது, இன்று ஜெயா இல்லாவிட்டாலும் நிச்சயம் ஆர்.எம் வீரப்பன் எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம், காரணம் மாபெரும் மனிதர், சுத்தமான மனிதன், பத்தினி விரதன், வள்ளல் என அவர்கள் உருவாக்கி வைத்த பிம்பம் சரிந்து கிடக்கின்றது

இந்திராவுடனுன் 1977 முதல் 1984 வரை இந்தி , ஈழம் , சுயாட்சி என மல்லுகட்ட வேண்டிய முதல்வர் இப்படி ஜெயாவிற்கும் ஆர்.எம் வீரப்பனுக்கும் பஞ்சாயத்தா செய்துகொண்டிருந்தார் எனும் விஷயம் நிச்சயம் ராமசந்திரனுக்கு வரலாற்று அவமானம்

ஆனால் ஏன் ஆர்.எம் வீரப்பன் தடுக்கவில்லை?

தன்னை மீறி ஜெயாவினை அரவணைத்து தனக்கு எதிர்காலமின்றி ஆக்கிய அந்த சனியன் பெயர் எப்படியும் நாசமாகட்டும் என விட்டுவிட்டாரோ என்னமோ?

தொடர்ந்து வாசிக்கின்றேன், மனதளவில் பாதிக்கபட்ட பெண், தாயின் சினிமா தொடர்பினால் ஆண்களை மிக வெறுத்த பெண், ஆண்களின் சுயநலத்தால் ஏமாற்றத்தை மட்டுமே பெற்ற பெண்ணின் மனது வானளாவிய அதிகாரம் கிடைக்கும்பொழுது எப்படி எல்லாம் வெடித்து பழிவாங்கும் என்ற பகிரங்கத்தை பார்க்க முடிகின்றது.

வாசந்தி மிக சாதுர்யமாக எழுதியிருக்கின்றார், சசிகலா குடும்பத்தை மிகவும் தாக்கவிலை, சோ ராமசாமியினை பெரிதும் பிடித்துகொடுக்கவில்லை

மாறாக கலைஞரை அடிக்கடி போட்டு வறுக்கின்றார், அதில் அவருக்கு ஒரு சந்தோஷம் போலிருக்கின்றது

இதனால்தான் என்னமோ புத்தகம் தடையின்றி வந்திருக்கலாம்

வாசிப்பு தொடர்கின்றது….