இந்து ஆலயங்களை பாதுகாப்பது எப்படி?
இந்து ஆலயங்களை பாதுகாப்பது குறித்து Badri Seshadri சொல்லியிருக்கும் கருத்துக்களை பலர் விமர்சிக்கின்றார்கள், எம்மை பொறுத்தவரை அதில் சில கருத்துக்கள் உடன்பாடானவை
ஆலயங்களை பொறுத்தவரையில் உள்ளூர் மக்கள் அதனை நிர்வகிக்க வேண்டும், அரசின் பெரும் கட்டுபாடு கூடாது என்பது ஏற்றுகொள்ளவேண்டிய விஷயமே
சிலர் கொதிக்கலாம், ஆனால் கிறிஸ்தவ ஆலயங்கள் எப்படி நிர்வகிக்கபடுகின்றது என பாருங்கள், அவை எல்லாம் உள்ளூர் மக்களாலே பராமரிக்கபடும், வேளாங்கண்ணி போன்ற மிக சில இடங்களில் கிறிஸ்தவ தலமை பீடம் ஆளலாம், மற்றபடி பெரும்பாலான ஆலயங்களில் உள்ளூர் மக்களை மீறி ஒரு துரும்பினையும் அசைக்க முடியாது
இஸ்லாமிய மசூதிகள் பற்றி நமக்கு அதிகம் தெரியாது எனினும் அதனை அம்மக்கள் மிக புனிதமாக பராமரித்து வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது.
இதே பாதுகாப்பான நிலை இந்து ஆலயங்களுக்கும் வரவேண்டும் என்கின்றார் Badri Seshadri, அப்படி செய்தால் கிறிஸ்தவ ஆலயம் போல இந்து ஆலயங்களும் பராமரிக்கபடும், சிலைகள் முதல் கல்வெட்டுக்கள் வரை மிகுந்த கவனமாக கையாளபடும் என்கின்றார்
இதற்குத்தான் பொங்குகின்றார்கள்
இவர்கள் சொல்லவருவது என்னவென்றால் இதனால் பிராமண ஆதிக்கம் பெருகும், சாதி சண்டைகள் உருவாகும் என்றெலாம் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்
பொதுவாக தமிழருக்கு கடவுள் பக்தி அதிகம், எங்காவது ஓரிரு இடங்களில் அம்மாதிரி நிகழலாம் அதற்காக மொத்த ஆலயங்களிலும் அப்படி நிகழும் என சொல்லமுடியாது
ஒவ்வொரு ஊரின் கிறிஸ்தவனுக்கும் அவன் ஆலயம் உயிர், இஸ்லாமியனுக்கும் அப்படியே
சில கத்தோலிக்க ஆலயங்கள் திருச்சபையின் கட்டுபாட்டிற்கே வராது, “பாதிரியார்களை பார்த்தே வா, திருப்பலி வை, அத்தோடு போ. உன் வேலையினை நீ பார், எங்கள் ஆலயத்தை நாங்கள் பார்க்கின்றோம்..” என சவால் விட்டு நிற்பவை
அப்படி பட்ட தமிழகத்தில் இந்து ஆலயங்களும் மக்களின் கட்டுபாட்டிற்கு வருவது ஒன்றும் தவறல்ல
அதே நேரம் அரசு என்னமும் சொல்லட்டும் , எம் ஆலயத்திற்கு நாங்கள் செய்யவேண்டியதை செய்வோம், பராமரிப்போம் என முன்னின்று செய்யும் ஊர்களும் உண்டு
குறிப்பாக வள்ளியூர் முருகன் கோவிலில் அந்த அதிசயம் நடந்தது, திருச்செந்தூருக்கு அடுத்து நெல்லையில் பிராதான கோவில் அது, பிரமாண்ட தெப்பகுளம் , குன்று உட்பட கொண்ட ஆலயம் அது, பாண்டிய மன்னர்களுக்கு முன்பாகவே உருவாக்கபட்டு, அருணகிரி நாதர் எல்லாம் வந்து பாடிய ஆலயம் அது
முன்பு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது, தெப்பகுளமெங்கும் பாம்புகள் நிரம்பின, பாழ்பட்டது கரைகள். திரும்பும் இடமெல்லாம் இடிபாடும், மடங்கள் இருந்த கட்டை சுவருமே இருந்தன, பல சமூக விரோத செயல்களும் அதை சுற்றி நடந்தன
மக்கள் திரண்டார்கள், சாதி மதம் கடந்து இது ஊரின் அடையாளம் என திரண்டார்கள், இரு தெப்பகுளங்களை தூர்வாரினார்கள், கல்வெட்டுகளை சிலைகளை புத்துயிர் பெறவைத்தார்கள்.
அந்த குன்றினை சுற்றிவர பாதை அமைத்தார்கள், இளைப்பாற திண்ணை கட்டினார்கள், மரம் வைத்தார்கள் விளக்கு அமைத்தார்கள்
மிகபெரும் பராமரிப்பு முடிந்து, இன்று பார்ப்பதற்கே அது மிக அழகாகவும் அற்புதமாகவும் மிளிர்கின்றது
ஆம் இளம்தலைமுறை அப்படி அற்புதமாக சாதித்திருக்கின்றது, அரசின் உதவி துளியுமில்லை அதனை எதிர்பார்க்கவுமில்லை
இதில் இந்துக்கள் மட்டுமல்ல எல்லா மக்களும் பங்குபெற்றனர் என்பதும் குறிப்பிடதக்கது, இந்துக்களுக்கு அது புனிதஸ்தலம் மற்றவர்களுக்கும் அது மரியாதைக்குரிய இடம் குறிப்பாக வரலாற்று தலம்
இந்த ஒற்றுமையில்தான் அந்த மாபெரும் மாற்றம் பாண்டிய, நாயக்க மன்னர்கள் காலத்திற்கு பின் நடந்திருக்கின்றது.
இது எல்லா ஊர் மக்களுக்கும் வந்தால் இங்கு ஏன் சிலை திருட்டு நடக்கும்? ஏன் தீபிடிக்கும்? ஏன் வீணான அரசியல் எல்லாம் நடக்கும்?
வள்ளியூர் முருகன் கோவில் புத்துயிர் பெற்றுவிட்டது, ஆனால் பிராமண ஆதிக்கமோ இல்லை ஆரிய பாசிசமோ அங்கு வரமுடியாது வாய்ப்பே இல்லை, அய்யர் என்பவர் சம்பளம் வாங்கிவிட்டு அவர்போக்கில் பூஜை செய்கின்றார்
கிட்டதட்ட கத்தோலிக்க ஆலயத்தில் பாதிரியாருக்கு திருப்பலி சம்பளம்கொடுத்து விரட்டிவிடும் அதே பாணி, அவ்வளவுதான். இதில் எங்கிருது ஆரிய பாசிசம் வரும்? அதுவும் எண்ணிக்கையில் மிக சிறிய அந்த பிராமணாள் ஒன்றும் செய்துவிடவும் முடியாது
ஆலயம் மிக நன்றாய் இருக்கின்றது, கண்ணார கண்டது.
Badri Seshadri பதிவு பல உண்மைகளை கொண்டிருக்கின்றது, வம்பர்களும் குறுக்குபுத்தி உள்ளவர்களும் அதனை சர்ச்சையாக்குகின்றார்கள்
பெருந்தன்மையாக நோக்கினால் அதில் ஆழ்ந்த உண்மையும், ஆலயத்தின் நிலையான பாதுகாவலும் இருக்கத்தான் செய்கின்றது.
உண்மையான பகுத்தறிவில் சிந்தித்தால் Badri Seshadri பதிவினை குறை சொல்ல முடியாது,
கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் அவர்கள் ஆலயத்தை பொன்போல் பாதுகாக்கும்பொழுது இந்து ஆலயங்கள் மட்டும் பாழ்பட வேண்டுமா என அவர் கேட்பது மிக சரியான நியாயமே
மதவெறியனாக இல்லாமல் மத நெறியில் ஆலயத்தின் மீதான அக்கறையில் சிந்தித்தால் அந்த மாபெரும் உண்மை விளங்காமல் போகாது.
மாறாக திராவிட பகுத்தறிவில் சிந்தித்தால் உண்மை ஒருநாளும் புரியாது, காரணம் திராவிட பகுத்தறிவில் முக்கால்வாசி அரசியல் கணக்கு.