வழிதவறியோருக்கான பள்ளி….

இந்த கபாலி படத்தில் வருவது போல வழிதவறியோருக்கான பள்ளி ஒன்றின் மாணவர்களை சந்திக்க முடிந்தது. அவர்கள் சிறுவயதிலே வழிதவறியவர்கள் பதின்மவயது குழப்பமோ, சமூகமோ, குடும்பமோ அவர்களை போதை, காதல் என எதிலாவது விழவைத்து திசைமாற்றி விடுகின்றன‌

மிக சிறுவயதிலே குடும்பத்தாலும், சமூகத்தாலும் புறக்கணிக்கபடுகின்றார்கள், தன்னம்பிக்கை சுத்தமாக அற்றுபோய் ஒரு மாதிரியான வாழ்க்கையிலும் சிலர் குற்றவாளிகளாகவும் மாறிவிடுகின்றனர்.

மனசிக்கல் முதல் பல சிக்கல்களை கொண்டவர்களாக அவர்கள் தெரிகின்றனர். சிலருக்கு பேச்சே வராத அளவு நடுக்கம், அந்த அளவு சிக்கல்கள் அவர்களை சராசரி மனிதர்களிடமிருந்து பிரித்து காட்டுகின்றது

சிலரோ அச்சத்தில் கத்தியே பேசுகின்றார்கள், சிலர் சம்பந்தமின்றி பேசுகின்றார்கள் பரிதாபம், அவர்கள் நிச்சயம் சராசரி இல்லை, மனமும் உடலும் மூளையும் அந்த அளவு பாதிக்கபட்டிருக்கின்றது

அவர்களை அணைத்து, உளவியல் முதல் எல்லா பயிற்சிகளையும் வழங்கி மறுவாழ்வு கொடுக்கும் காரியங்களை இப்பள்ளிகள் செய்கின்றன. அரசு அவர்களை உற்சாகபடுத்துகின்றது, தனியார்களும் அவர்களும் இச்சமூகத்தில் வாழவேண்டும் என தன்னலமற்று உழைக்கின்றனர்

நிச்சயம் கண்களை குளமாக்கும் விஷயம் அது, யாரோ பெற்று யாராலோ சீரழிந்த இவர்களுக்கு சம்பந்தேமியின்றி யாரோ உதவி அவர்களும் வாழ வழிசெய்கின்றார்கள்

அந்த பயிற்சியாளரிடம் கேட்டபொழுது சொன்னார், “இவர்கள் வழிதவறியவர்கள், உதவி தேவைபடுபவர்கள் அவர்களை அபபடியே விட்டால் இச்சமூகத்திற்கு அவர்களால் என்ன பயன்?

அவர்களும் மனிதர்கள், இச்சமூகத்தின் அங்கங்கள். அவர்கள் யாராகவும் இருக்கட்டும், எப்படி வீழ்ந்தவர்களாகவும் இருக்கட்டும் ஆனால் சக மனிதர்கள், அவர்களை அரவணைத்து சராசரி மனிதர்களாக்கி இச்சமூகத்தில் அவர்களும் வாழ வாய்ப்புகொடுக்க வேண்டாமா? அதனைத்தான் நாங்கள் செய்கின்றோம்”

இவர்களை எப்படி நிலையத்தில் சேர்ப்பீர்கள் என கேட்டால் சில நேரம் நாங்களாக கண்டெடுப்போம் பல நேரங்களில் மக்கள் அடையாளம் கண்டு கொண்டுவருவார்கள் என்றவர் திடீரென கேட்டார்

உங்கள் நாட்டில் இப்படி எல்லாம் இல்லையா?

மது அடிமைகளுக்கு சில முகாம்கள் இருக்கின்றன மருந்தெல்லாம் கொடுப்பார்கள் என்றேன்

“அது வேறு, இம்மாதிரி குடும்பத்தால் புறக்கணிக்கபட்டவர்கள், சமூகத்தால் கண்டுகொள்ளாமல் விடபட்டு தன்னிலை மறந்து திரிபவர்கள், வெளி தெரியா அல்லது தெரிந்த கொடிய‌ போதையில் சிக்கியவர்கள், கல்வி இல்லாதவர்கள், உளவியல் சிக்கலில் சிக்கி ஒருமாதிரியாக திரிபவர்கள் எல்லாம் இல்லையா? அவர்களுக்கெல்லாம் என்ன வாய்ப்பு இருக்கின்றது?”

சட்டென சொல்லிவிட்டேன்

“இருக்கின்றார்கள், பூரா பயலும் அரசியல்வாதியாக திரிகின்றான் , எல்லா கட்சிகளும் இவர்களை சேர்த்து ஒரு மாதிரி ஆகிவிட்டன,அதனால்தான் இந்திய / தமிழக அரசியல் அப்படி ஆகிவிட்டது” என சொல்லிவிட்டு வந்துவிட்டேன்

யோசித்து பார்த்தால் அப்படித்தான் நிலமை ஆகிகொண்டிருக்கின்றது

முதலில் இம்மாதிரி முகாம்கள் திறந்து இந்த‌ இந்திய/ தமிழக அரசியல்வாதிகளுக்கு சிகிச்சை அளிக்க வெண்டும், அதுவன்றி இந்தியா உருப்பட வாய்ப்பே இல்லை.