சட்டமன்றத்தில் படம் திறப்பாம், எப்படி ஒரு அநியாயம்? பெருங்கொடுமை?

அது பிரிட்டிஷ் ஆட்சிக்காலம், 1800களின் கடைசியாக இருக்கலாம். இந்தியா பிரிட்டிஷ் அரசின் கட்டுபாட்டிற்கு வந்த காலத்தில் சென்னை கோட்டை அவர்களின் தென்னிந்திய தலமையகம் ஆனது

அங்கொரு அதிகாரி இருந்தார், சென்னை நகரின் குடிநீர் நிர்மானிப்பு பணி அவருக்கு ஒதுக்கபட்டிருந்தது. அவரும் திறம்பட செய்தார். அவருக்கும் சில எதிரிகள் இருந்தனர். ஒதுக்கபட்ட நிதியில் அவர் கையாடல் செய்து மனைவிக்கு வைரம் வாங்கியதாக மேலிடத்திற்கு புகார் அனுப்பினார்கள்

அவர் வைரம் வாங்கி இருந்தது உண்மை ஆனால் சொந்த பணத்தில் வாங்கியிருந்தாரே அன்றி ஊழல் பணத்தில் அல்ல‌

ஆனால் விசாரணை வளையத்தில் வந்தார், மனம் வெறுத்த மனிதர் ஒரு கடிதம் எழுதிகொண்டு கோட்டைக்கு விரைந்தார். கடிதத்தை வீசிவிட்டு வைரத்தை விழுங்கினார்

அரசு பணம் ஒரு பைசா எடுக்கவில்லை என்றும், அவதூறு குற்றம் சாட்டபட்டபின் தான் உயிர்வாழ விரும்பவில்லை என்றும் அதன் விவரங்களை கடிதத்தில் சொல்லிவிட்டு அங்கே செத்த்தும் போனார், இது நடந்த சம்பவம் என வரலாறு சொல்கின்றது

பிரிட்டன் அரசு கூடுமானவரை அந்த விஷயத்தை மறைத்தது என்பார்கள், ஆனால் சம்பவம் நடந்திருக்கின்றது. அப்படிபட்ட மகா நேர்மையான ஆட்சியாளர்கள் அக்கோட்டையில் வெள்ளையன் காலத்தில் இருந்திருக்கின்றார்கள். இவ்விஷயம் சில இடங்களில் படிக்க முடிந்தது, அந்த அதிகாரியின் பெயர் சற்று மறந்துவிட்டது

அப்படியான , தன் மீது கறைபடிய தொடங்கியவுடன் உயிரைவிட்ட அதிகாரிகள் எல்லாம் அங்கு இருந்திருக்கின்றார்கள்

சர்ச்சைகுரியவர் என்றாலும் ராஜாஜி மீது ஒரு ஊழல் குற்றம் சொல்ல முடியாது, காமாராஜரின் நிலை உலகறிந்தது

அப்படி பெரும் பாரம்பரியம் மிக்க சென்னை கோட்டை அரசு வளாகத்தில் ஜெயலலிதாவின் படம் திறக்க போகின்றார்களாம்

எந்த ஜெயலலிதா?

1997 முதல் ஊழல் வழக்கில் சிறைக்கு போவதும் வருவதுமாக இருந்த அந்த ஜெயலலிதா, வழக்கினை சட்டத்தின் சந்து பொந்துகளில் எல்லாம் 17 வருடம் இழுத்தாலும் இறுதியில் குற்றவாளி என தீர்ப்புபெற்ற ஜெயலலிதா

இந்திய முதல்வர்களில் அவரைபோல் ஏராளமான வழக்கு பதியபட்டவருமில்லை, 100 கோடி அபராதம் பெற்ற குற்றவாளியுமில்லை

அவருக்குத்தான் சட்டமன்றத்தில் படம் திறப்பாம், எப்படி ஒரு அநியாயம்? பெருங்கொடுமை?

என்ன சாதனை செய்தார் என அவருக்கு படமாம்? ஊழல் குற்றசாட்டில் சிறை சென்றவருக்கு சட்டமன்றத்தில் படம் வைப்பார்களா? ஊழல் சிறைச்சாலையில் படம் வைப்பார்களா?

சென்னை கோட்டை மிக பெரும் அவமானத்தை சந்திக்கின்றது, பிரிட்டன் ஆட்சி, நீதிகட்சி ஆட்சி, காங்கிரஸ் ஆட்சி, திமுக ஆட்சி, ராமசந்திரன் ஆட்சி என எதிலும் இல்லா மாபெரும் அவமானம் இந்த ஆட்சியில் அரங்கேறுகின்றது

ஆளுநர் என்பவர் இந்திய சட்டங்களின் பாதுகாவலர், அவர் எப்படி இப்படி ஒரு குற்றவாளியின் படம் இடம்பெறுவதை அனுமதிக்கின்றார் என்பதுதான் புரியவில்லை

ஜெயா படம் வைப்பதாக இருந்தால் மற்ற எல்லா தலைவர்களின் படத்தையும் எடுத்துவிட்டு ராமசந்திரன், ஜெயா படத்தை மட்டும் வைக்கட்டும் அர்த்தமிருக்கின்றது

உன்னதமான தலைவர்களுடன் இக்குற்றவாளி படத்தினையும் வைப்பது என்பது நிச்சயம் பெரும் இழுக்கு

பூலன் தேவி வரிசையில் வைக்க வெண்டிய படங்களை இத்தலைவர்கள் படம் வீற்றிருக்கும் மாபெரும் அவையில் வைக்க நற்றமிழர் யாரும் ஒப்பமாட்டார்கள்

அந்த படம் அவர் ஆட்சியில் வீசபட்ட கண்ணகி சிலை இருந்த இடமான அந்த பழம்பொருள் அறைக்கு செல்லட்டும், அது இருக்க வேண்டிய இடம் அதுதான்

இதற்கு மேலும் ஜெயாவிற்கு ஒரு அடையாளம் வேண்டுமென ஆசைபட்டால் சிறைச்சாலை ஒன்றுக்கு அவர் பெயரை தாராளமாய் சூட்டட்டும், அவர் படத்தையும் வாசலில் வைக்கட்டும்

யார் தடுப்பார்கள்?