சிவன் தத்துவமும், மிக்கேல் அதிதூதர் தத்துவமும் ஒன்றே
கன்னியாகுமரி பக்கம் இப்படி ஒரு படம் வருவதாக செய்திகள் சொல்கின்றன
அப்படி வந்திருந்தால் , இது உண்மையான செய்தி என நிரூபிக்கபட்டால் நிச்சயம் செய்தவனுக்கு மிக கடுமையான தண்டனை கொடுத்தாக வேண்டும்
என்ன செய்திருக்கின்றான்? விஷயம் வில்லங்கமானது
அதாவது கத்தோலிக்க / யூத வழிபாட்டில் புனித மிக்கேல் அதிதூதர் என்பவர் முக்கியமானவர். அவர் சாத்தானை சண்டையிட்டு காலில் போட்டு மிதித்தார் என்பது நம்பிக்கை, அதனால் அவர் சிலை இருக்குமிடமெல்லாம் சாத்தானும் காலில் இருக்கும்
குமரி மாவட்டம் ராஜாவூர் எனும் கிராமத்தில் இந்த மிக்கேல் அதிதூதருக்கு பெரும் ஆலயம் உண்டு , மிக சக்திவாய்ந்த ஆலயம் அது. உலகெல்லாம் பக்தர்கள் அதற்கு உண்டு
இப்பொழுது என்ன நடந்திருக்கின்றது என்றால் இந்த புனிதமான அதிதூதர் படத்தினை காலண்டருக்கு அச்சிட்டவன் அந்த காலடி சாத்தானின் நெற்றியில் திருநீற்று பட்டையினை தீட்டினான் என சர்ச்சைகள் வருகின்றன
இவை எல்லாம் போட்டோ ஷார்ப்பிலும் செய்யலாம் என்பதனால் மிகுந்த நிதானமும் அதே நேரம் வலுவான விசாரணையும் வேண்டும்
இச்செயல் கொஞ்சமும் அறிவில்லா , மதங்களை பற்றி தெளிவில்லா ஒரு பதரால் வந்திருக்கும் சர்ச்சை
ஆழ நோக்கினால் இந்த இந்து மதத்திற்கும், கத்தோலிக்க கிறிஸ்தவத்திற்கும் ஏராளமான ஒற்றுமைகளை பார்க்கமுடியும் , மிக சில உதாரணங்கள் இதோ
கிறிஸ்தவம் மூவொரு கடவுள் தத்துவம் கொண்டது, படைத்தல் காத்த்தல் மீட்டல் என மூன்று கடவுளை கொண்டது, இந்துமதத்திலும் அதனை காணலாம்
இந்த மிக்கேல் அதிதூதர் என்பவரின் இன்னொரு பணி என கிறிஸ்தவமும் யூதரும் சொல்வது என்னவென்றால், மரித்தவுடன் ஒருவனின் ஆன்மாவினை கடவுள் முன்னால் நிறுத்தி அவனின் பாவ புண்ணிய கணக்கினை காட்டுவது இவரே என்கின்றது
இதனால் அந்த மிக்கேல் அதிதூதர் கையில் தராசும் கொடுக்கபட்டிருக்கும், இது இந்துக்களின் எமதர்ம ராஜனின் சாயல்
இன்னும் இந்த அதிதூதரின் காலில் சாத்தான் இருப்பது போல, நடராஜ சிலையின் காலிலும் ஒரு உருவம் இருக்கும், அது அசுர உருவம், அதனை அடக்கியே சிவன் ஆடுவதாக அவர்கள் ஐதிகம்
ஆக யூதரும் கிறிஸ்தவரும் காணும் சக்தியும், இந்துக்கள் காணும் சக்தியும் ஒன்றே. அதாவது ஒரு சக்தி தீமையினை காலில் போட்டு மிதித்திருக்கின்றது
இது ஆழ சிந்திக்கும் கிறிஸ்தவன் என்றால் தெரியும், அற்ப கிறிஸ்தவன் என்றால் எப்படி புரியும்? அதிதூதர் காலில் கிடக்கும் சாத்தானுக்கு திருநீறு பூசிவிட்டால் அது சிவனாகுமா?
சிவன் தத்துவமும், மிக்கேல் அதிதூதர் தத்துவமும் ஒன்றே
மறுபடியும் உரக்க சொல்லலாம், கன்னியாகுமரி மாவட்டம் மத சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றது, மூச்சுவிட்டாலே பற்றிகொள்ளும் விஷயம்
ஆனால் இதே ராஜாவூர் ஆலயத்திற்கு இந்துக்களும் வருவார்கள், இந்துக்களின் பிரசித்திபெற்ற தலங்களுக்கு கிறிஸ்தவர்களும் செல்வார்கள் அப்படியும் ஒரு நல்லிணக்கம் உண்டு
இந்த செயல் கலவரம் ஏற்படுத்தும் கயவர்களுக்கு வாய்பாகிவிட கூடாது என்பதாலும், இது கணிணி யுகத்தில் வெட்டி ஒட்டி செய்யபடும் வேலை என்பதாலும் மிக நிதானம் தேவை
இது உண்மையான பட்சத்தில் மிக்கேல் அதிதூதர் காலடியில் இருக்கும் சாத்தானுக்கு பதில் அவன் படத்தை வைக்க வேண்டும்
இல்லை எவனாவது கலவரம் உண்டாக்க செய்தான் என்றால் நடராஜ பெருமானின் காலடி அசுரனின் முகத்தை அவன் முகமாக மாற்ற வேண்டும்
இவ்விஷயத்தில் எல்லா தரப்பிலும் நிதானம் மகா முக்கியம் என்பது அதிமுக்கிய தேவை
தீமை ஒரு நாளும் வெல்லாது, அது நன்மையின் காலடியிலே கிடக்கும் எனும் மாபெரும் தத்துவத்தின் யூத / கிறிஸ்தவ வடிவம் மிக்கேல் அதிதூதரின் திருவுருவம்
அதன் இந்து வடிவம் நடராஜர் சிலை
இதனை எல்லோரும் தெரிந்துகொண்டால் ஒரு சிக்கலும் இல்லை.