“கோங் சீ பா சாய்” : சீன புத்தாண்டு வாழ்த்துக்கள்

No automatic alt text available.

எல்லா நாகரீக இனங்களுக்கும் நாட்காட்டி உண்டு, நாடிகாட்டி இருந்தால் நிச்சயம் ஆண்டு கணக்கு உண்டு, அதில் புத்தாண்டு கொண்டாட்டம் தவிர்க்கமுடியாதது.

அதில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு என்றே ஒரு இனம் வாழுமானால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் அது சீன இனம், அவர்கள் கலாச்சாரம் அப்படி, என்றைக்கு நாள்காட்டி என ஒன்றை கண்டார்களோ அன்றுமுதல் இன்றுவரை அப்படித்தான், புத்தருக்கு முந்தைய காலமுதல் இன்றைய பொதுவுடமை குடியரசு சீனா வரை மாறாத கொண்டாட்டம் அது.

12 விலங்குகளின் பெயரில் சுழற்சிமுறையில் வரும் சந்திர அடிப்படை நாள்காட்டி அவர்கள‌து, அவர்களின் டிராகன் முதல் பிடித்தமான பாம்பு வரை வரிசை உண்டு. இம்முறை நாய் வருடமாம்.

ஆசியாவை சரிபாதியாக பிரித்து ஆட்டம்போடும் சீன இனத்தவருக்கு இது பெரும் கொண்டாட்டம், மாண்டரின் தவிர ,ஹோக்கியான்,கெண்டனிஸ் என மொழிவாரியாக பிரிந்தாலும், சின்,ஹான்,டிங் என இனவாரியாக பிரிந்தாலும் ஏன் மதவாரியாக பிரிந்தாலும், அதனை எல்லாம் தாண்டி அவர்கள் மொத்தமாக கொண்டாடுவது இந்த ஒரு பண்டிகை மட்டுமே.

கிட்டதட்ட 15 நாள் கொண்டாடும் கொண்ட்டம் அது, நமது போகியை போலவே முந்தைய நாள் சுத்தபடுத்தும் நாள். முதல்நாள் சைவ பெரும் விருந்து (ஆச்சரியமாக…) , அங்க் பாவ் (Ang Pau) எனப்படும் மொய் அன்பளிப்பு, ஒற்றப்படை எண் வருமாறு கவனமாக பணம் பரிசளிப்பார்கள்.

இரண்டாம் நாள் அதிகாலை விழிப்பு, மூன்றாம் நாள் மருமகனுக்கு, நான்காம் நாள் மருமகளுக்கு, அப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர்க்கு.

9ம் நாள் யீ சாங் (Yee Sang) எனப்படும் மீன் விருந்து விஷேசம், செம்மறி ஆடு அளவில் இருக்கும் மீனை அவித்து வைத்து, குச்சியினால் பிய்த்து குடும்பமாக உண்பார்கள். 9ம் நாள் மகா விஷேசமானது நீண்ட ஆட்டுதாடி வைத்த ஒரு அரச தெய்வத்தை (King Jed) வணங்குவார்கள், நீளமான ஊதுபத்தி கொத்தை புகைய வைத்து குனிந்து குனிந்து வணங்குவார்கள். இது பெரும்பாலும் டாவோயிசம் சீனர்கள் செய்வது.

பெரும்பாலும் அவர்கள் கடவுளை வணங்கும் ஒரே நாள் அதுதான்.

மற்றபடி கடவுள் வேண்டுமானால் அவர்களுக்காக காத்திருப்பார், அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். புத்தாண்டு கொண்டாட காலண்டர் வேண்டுமே தவிர உழைக்க ஆரம்பித்தால் சகலத்தையும் மறக்கும் இனம் அது, ஓய்வு கிடைத்தால் சூதாட்டம்,

இதில் கடவுள் ஏன் வீணாக?

ஆனால் மூட நம்பிக்கையோ அல்லது மூட்டைகட்டி வைத்திருக்கும் நம்பிக்கை மிக அதிகம், மேற்கண்ட 15 நாள்களில் 5ம் நாள் அந்த அதிர்ஷ்ட கடவுளுக்கானது, அன்று எந்த சீனரும் எங்கும் செல்லமாட்டார், காரணம் அன்று கண்டிப்பாய் வீட்டுக்கு வருவாராம். இவர்கள் வீட்டில் இல்லாவிட்டால் அதிர்ஷ்ட கடவுள் அப்செட்.

அவர்கள் நம்பிக்கை அப்படி, ஒரு காலமும் மாறாத நம்பிக்கை அது.

கிழக்காசியா முழுவதும் மற்றும் சீனர் வாழும் பகுதி எல்லாம் விழாக்கோலம், நமக்கு மஞ்சள் போல அவர்களுக்கு மங்கள நிறம் சிகப்பு, சகலமும் சிகப்பு, அவர்களுக்கே உரித்தான “தங் லுங்” (Tang Lung)எனப்படும் சிகப்பு கூடு விளக்குகள் (சிகப்பு விளக்கல்ல) எல்லா இடங்களிலும் தொங்குகின்றன.

பட்டாசினை உலகிற்கே அறிமுகம் செய்தவர்கள். சொந்த விஷேசம் என்றால் விடுவார்களா? இரவெல்லாம் பட்டாசு திருவிழா.

அப்படி உலகில் சீனர் வசிக்கும் இடமெல்லாம் சிகப்பு மயமாக காட்சியளிக்கின்றது, சிங்க நடனம் அல்லது டிராகன் நடனம் எனப்படும் அவர்களுக்கு மட்டுமே சொந்தமான குழுநடனமும் நடைபெறுகிறது.
உலகில் சில இனங்கள் வித்தியாசமானவை, எங்கு சென்றாலும் அந்த இடத்தின் சூழலை தனது கலாச்சாரப்படி மாற்றிவிடும்.

அந்த இனத்தின் விஷேஷ குணம் அது, எங்கு சென்றாலும் சீன கலாச்சாரத்தை கொண்டே செல்வார்கள். அது கூட ஆச்சரியமில்லை ஆனால் எத்தனை தலைமுறை கடந்தாலும் அதனை பின்பற்றி கொண்டுவருகின்றார்கள் அல்லவா? அது தான் மகா ஆச்சரியம்.

யூத இனம் அதில் முக்கியமானது ஆனால் மற்ற இனத்தோடு கலக்கமாட்டார்கள், சீன இனம் கலந்தாலும் தங்கள் பாரம்பரியத்தை விட மாட்டார்கள். ஈழதமிழர் அப்படித்தான் இருந்தார்கள், இப்பொழுது கொஞ்சம் மாறுதல்

( தமிழக தமிழர்கள் இதில் மகா மோசம், நாடு என்ன தமிழக எல்லை கடந்துவிட்டால் இரண்டாம் தலைமுறை தமிழ்குழந்தைக்கு தமிழ்தெரியாது, அதனை சொல்வதில் பெற்றோருக்கு முகமெல்லாம் சிரிப்பு, உள்ளமெல்லாம் பெருமை)

இந்த புத்தாண்டு சீனா, அவர்களின் முக்கிய எதிரியும் ஆனால் சொந்த இனமான தைவான், மலேயா, தாய்லாந்து, சீனரின் குடியேற்றமான சிங்கப்பூர், போன்ற நாடுகளின் மிக மிக விமரிசையாகவும், மற்ற நாடுகளில் சீன மக்களாலும் கொண்டாடபடுகின்றது.

சீனாவில் 2 வாரம் விடுமுறை, காரணம் வட சீனா பின் தங்கிய பகுதி, ஷாங்காய், பீஜிங்,ஹாங்காங்,குவாங்சூ என தென்பகுதி உலகின் மிக பிசியான வியாபார பகுதி. இங்கு பணியாற்றுவோர் அதிகம் (சென்னை,மும்பை போல), பண்டிகைக்கு கண்டிப்பாக சொந்த ஊர் இடம்பெயர்வர்.

இந்த இடப்பெயர்ச்சித்தான் இன்று உலகில் நடைபெறும் அதிக மக்கள்தொகை பெயர்ச்சி, அப்படித்தான் அறிக்கைக்கள் சொல்கின்றன.

வேண்டுமானால் பாருங்கள் இன்னும் 3 வாரத்திற்கு இந்திய‌ சீன எல்லையில் ஒரு ஊடுருவலும் இருக்காது, எல்லோரும் சொந்த ஊரில் யீ சாங் மீன் சாப்பிட சென்றிருப்பார்கள்.

கொண்டாடி தீர்க்கட்டும், அவர்கள் ஆண்டுமுழுவதும் உழைப்பது கிட்டதட்ட இதற்காகத்தான், பணம் இருப்பவர்களுக்கு தினமும் பண்டிகைதான், அதுவும் ஒரு முக்கிய தினம் கிடைத்தால் விடுவார்களா?

சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், இந்தியாவின் நம்பர் 1 எதிரி சீனா, இருக்கட்டும் அவர்களின் அரசியல் அப்படி. ஆனாலும் நாம் எல்லை கடந்தவர்கள். அகத்தியர் கூட அங்கிருந்துதான் தமிழகம் வந்தார் என்பது ஒர் ஆராய்ச்சி முடிவு (உயரத்தையும் ஒடுங்கிய கண்ணை விடுங்கள், அவர் இமயத்திலிருந்துதான் தென்னகம் வந்தார் என்பது உண்மை)

அதே போல இங்கிருந்தும் போதி தர்மர் போன்றவர்கள் அங்கு சென்று பணி செய்து இன்று டாவோ எனும் பெரும் தெய்வமாக வாழ்கின்றார்கள்

எல்லாவற்றிற்கும் மேல் தனது நாட்டில் தமிழ் வளர்க்கும் நாடு சீனா, பீஜிங்கில் இருந்து சென்னை வந்து அரசு செலவில் தமிழ்படிப்போர் உண்டு, அவர்களுக்கு சீன வானொலி தமிழ்பிரிவில் அரசே பணிகொடுக்கும், அவர்களும் மைனா குரலில் சீன தமிழ் செய்திகளை நம்மை விட அழகாக வாசிப்பார்கள், அவர்களின் நாக்கு மட்டும் அதிகம் வளையாது.

ஆனால் தமிழின் இனிமை அவர்கள் பேசும்போது கூடுதலாக விளங்கும், வாய்ப்பு கிடைத்தால் கேட்டுபாருங்கள்.

அவர்கள் புத்தாண்டு கொண்டாடுகின்றார்கள் , நாமும் வாழ்த்துவோம் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்பதை அவர்கள் மொழியில் “கோங் சீ பா சாய்” என்றால் இன்னமும் சந்தோஷபடுவார்கள்.

“வன் சீ ரூ யீ” (Wan Chi Ru Yee) என்று பதிலுக்கு வாழ்த்துவார்கள், அதாவது எல்லா காரியங்களும் நன்றாக நடைபெறட்டும் என்று அர்த்தம் வரும்.

அவர்கள் எல்லையில் செய்யும் அத்துமீறல்களை தவிர , அடுத்த நாட்டு நுட்பங்களை காப்பிஅடிப்பதை தவிர அவர்களுக்கு எல்லா காரியங்களும் நன்றாய் நடக்கட்டும்.

ராமருக்கு கோயில், கிருஷ்ணருக்கு கோயில், கோட்ஸே கோயில், போக தேடி தேடி தூங்காமல் இந்துத்வா பேசுபவர்களும், அகண்ட பாரதம் பேசுபவர்களும் அறவே மறந்துவிட்ட திருகயிலாய மலை, சீனாபிடியில் இருக்கும் திருகைலாய மலையை அந்த மீட்பினை மறந்துவிட்ட பிறகு, நாம் ஏன் அதனைபற்றி பேசவேண்டும்.

அறவே மறந்துவிட்ட பிரச்சினை இது. அது அப்படியே உறங்கட்டும்.

Gong Xi Fa Cai

Wan Chi Ru Yee