கமல் கட்சி பெயர் ‘மக்கள் நீதி மய்யம்’
குடும்பம் நடத்த ஏன் தாலி என ஒரு காலத்தில் புரட்சி செய்த கமலஹாசன் , இப்பொழுது கட்சி நடத்த ஏன் கொள்கை? என புரட்சி செய்து கொள்கை இல்லா கட்சியும் தொடங்கலாம் என்ற புதிய சாதனையும் செய்துவிட்டார்
கட்சி பெயர் மக்கள் நீதி மய்யமாம் , சுருக்கமாக ம.நீ.ம , கிராமங்களில் சடலத்தை மய்யம் என்பார்கள், மய்யகுழி, மயானம் என்பதெல்லாம் அது சம்பந்தமானவை
கமல் கட்சியில் மக்கள் நீதி மயானத்திற்கு போகாதவரை நல்லது, எழுத்தை மாற்றி போட்டாலும் ம.நீ.ம தான் விகடமான கட்சி போல
கட்சி அடையாளமாக 5 கைகள் ஒன்றையொன்று பிடித்து நிற்கின்றது, கவனியுங்கள் கைவிரல் கோர்த்து நிற்கவில்லை மாறாக மணிகட்டை பிடித்து நிற்கின்றது

ஆக இப்பொழுதே கூட்டணிக்கு கை தேடுகின்றாரோ என்னமோ? சீமான் கை மட்டும் இப்பொழுது வந்திருக்கின்றது , இன்னும் 3 கை வரும் போல, மக்கள் நல கூட்டணி போல ஆகலாம்
கட்சிக்கு கொள்கை இல்லையே தவிர செயற்குழு உண்டு அதில் உறுப்பினரும் உண்டு. மாபெரும் போராளி கு.ஞான சம்பந்தன், எல்லையில் சாகசம் புரிந்த சுகா, இன்னும் பெரும் சிந்தனயாளரான கமீலா நாசர் போன்ற பெருமக்கள் எல்லாம் அதில் உறுப்பினர்களாம்
கட்சி பற்றி கமல் என்ன விளக்கினார் என்றால் இது பொங்க இருக்கும் சோறின் ஒரு பருக்கை, ஊழல் கை தொட்டால் வெந்துபோகும் என என்னவெல்லாமோ சொல்லியிருக்கின்றார்
மனிதர் ஒரு பருக்கை என வறுமையின் நிறம் சிகப்பு நினைவில் இருக்கின்றாரா? அல்லது அரிசி அரசியல் செய்கின்றாரா என தெரியவில்லை, ஆனால் அரிசி சோறு வந்தாகிவிட்டது, அநேகமாக திராவிட பாதை உறுதி
கெஜ்ரிவாலை அழைத்த கமல் மயிலு ஸ்ரிதேவியினை அழைக்காதது பெரும் சோகம், அட குட்டி பத்மினியினையாவது அழைத்திருக்கலாம், முதல்படத்தில் கமலை கொஞ்சிவிளையாடும் கே.ஆர் விஜயா கூட அழைக்கபடவில்லை போல
நன்றிகெட்ட உலகம் என்பது இதுதான்
மதுரையில் விழா நடந்ததாம், நல்லது. ஆனால் அதே மதுரையில்தான் மருதநாயகம் சமாதியும் உள்ளது
மதுரையினை ஆண்ட அம்மாவீரன் கதையினை சினிமாவாக எடுப்பேன் , அதுவும் பாகுபலி போல மகா பிரமாண்டமாய் எடுப்பேன் என சொல்லிகொண்டிருந்தவர் கமல், அன்று அவர் கனவு அது
இப்பொழுது அரசியல் கனவு வந்துவிட்டதால் மருதநாயகம் கடாசபட்டுவிட்டான், வீரபாண்டிய கட்டபொம்மன் போல பெரும் காவியம் கிடைக்கும் என எண்ணிய தமிழகம் இப்பொழுது கண்ணீர் துளிகளை துடைக்கின்றது
அதே மதுரையில் உறங்குகின்றது அவன் வீரவரலாறு, அதனை வெளிகொணர்வேன் என சூளுரைத்த மாபெரும் கலைஞன் ஒருவன் மய்யமாகிவிட்டான்
மதுரையில் அரசியல் கூட்டத்தில் கமல் நிற்க, நம் நினைவெல்லாம் அந்த மருதநாயகம் கல்லறை மீதே நிறைந்திருக்கின்றது
எப்படி அதனை மறந்தார் கமலஹாசன்? மாபெரும் நடிகன் அவர் என்பதை இன்றுதான் உணரமுடிகின்றது