பாவம் கமல் கட்சிக்காரர்கள்…
கமலஹாசனுக்கும் சில தும்பிகள் இருக்கின்றார்கள், அவர் நாட்டிற்கு நல்லது செய்வது உனக்கு ஏன் பொறுக்கவில்லை என பலர் கொதிக்கின்றார்கள்.
நம்மவர், கம்மவர், கம்மாய்க்காரர் , கடலைமிட்டாய்க்காரர் என பல அடைமொழியோடெல்லாம் குதிக்கின்றார்கள்
குதிக்கட்டும், அவர்கள் விருப்பம்
ஆனால் கமலஹாசனிடம் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் உண்டு. கமல் தும்பிகள் அதை கேட்டால் கேட்கட்டும் இல்லாவிட்டால் ஒழியட்டும்
கமலஹாசன் அறிவாளி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எல்லோரும் தன்னைபோல் அறிவாளியாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பதும், தனக்கு தலையாட்டுபவர்களை மட்டும் அருகில் இருத்துவதும் அவரிடம் உள்ள பெரும் குறை.
கவனியுங்கள் அந்த கட்சி கூட்டத்தில் எல்லோருமே அவருக்கு ஆமாம் போட்டவர்கள், போடுபவர்கள். இல்லாவிட்டால் சினேகன் என்பவருக்கு அங்கு என்ன வேலை?
இன்னும் ஆழமாக செல்லுங்கள் , அவரை இன்னொருவர் இயக்கி வந்த படங்களை பாருங்கள், மனிதர் மிளிர்வார்.
நாயகன், கடல் மீன்கள் , சலங்கை ஒலி எல்லாம் அந்த ரகம்
ஆனால் அவர் இயக்கி வந்த படங்களை பாருங்கள், தாங்கமுடியாது அதற்கு சைமனின் பேச்சே பரவாயில்லை என தோன்றும்
ஆளவந்தான், விருமாண்டி, மன்மதன் அம்பு, ஓவராக கமல் திணிக்கபட்ட தசாவாதரம் போன்றவை இந்த ரகம்
அதாவது அவர் அறிவுக்கு எட்டியவகையில், அறிவாளிகள் மட்டும் புரிந்துகொள்ளும் வகையில் அந்த படங்கள் இருக்கும், தமிழகத்தின் அறிவு நிலைபற்றி சொல்லவேண்டியதில்லை எடப்பாடி பழனிச்சாமியே முதல்வரான மாநிலம் இது
ஆக இந்த மாநில அரசியலுக்கு கமல் அவர் மேட்டிமை நிலையில் இருந்து இறங்க வேண்டும்
வரலாறுகளை புரட்டுங்கள், ராஜாஜி போல அறிவாளி இல்லை ஆனால் எப்படி தோற்றார் என்றால் அவரிடம் ஒரு மேட்டிமை தன்மை இருந்தது, அது பேச்சிலும் இருந்தது எழுத்திலும் இருந்தது
அக்காலத்தில் பெரும் அரசியல்வாதிகள் ஏன் தோற்றார்கள் என்றால் இப்படி புரியாமல் பேசியதும், எழுதியதுமே ஆனால் அறிவாளிகள்
காமராஜர் தொடர்ந்து வெல்ல காரணமே அவரின் எளிமையும், பாமரதன்மையுமே
அந்த காமராஜரை திமுக வீழ்த்திய காரணமே அதன் பிரச்சாரமும், எழுத்தும் மக்கள் புரியும் வகையில் இருந்ததால்
அண்ணா அந்த வகையில் கில்லாடி, கலைஞர் இறுதிவரை பாமரருக்கும் புரியும் வண்ணமே பேசிவந்தவர். அவரின் அரசியல் வெற்றிக்கெல்லாம் அதுதான் காரணம்
கமல் திருந்த வேண்டும். தான் அறிவாளியாக இருப்பது போல தமிழகமும் இருக்க வேண்டும், மையினை மய் என இலக்கிய பூர்வமாக சொன்னால் தமிழன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதெல்லாம் நிச்சயம் கிறுக்குத்தனம்
தன் மேட்டிமையினை சினிமாவில் காட்டி பல நல்ல படங்கள் தோற்க காரணமானவர் கமல், விருமாண்டி , ஆளவந்தான் போன்றவை அந்த வகை
அதே மேட்டிமை மனப்பான்மையில் அரசியலுக்கு வந்து அதனையே செய்வாரானால் ஒரு வாக்கு அல்லது “வ்வ்வஆஆக்கு” கூட வாங்கமுடியாது
கமல் அடுத்தடுத்த திருமணம் செய்யும்பொழுது முதல் மனைவி வாணி சொல்வார், “பாவம் அந்த பெண்..”
இந்த வசனத்தை அவர் அடிக்கடி சொல்ல நேர்ந்தது, சில நேரம் பல பெண்கள் சேர்ந்தும் சொல்ல வேண்டி இருந்தது.
இனி அதனை மாற்றி “பாவம் கமல் கட்சிக்காரர்கள்” என சொல்ல வேண்டி இருக்கின்றது