சிரியாவில் மாபெரும் மனித பேரழிவு நடக்கின்றது

Image may contain: sky, outdoor and nature

சிரியாவில் மாபெரும் மனித பேரழிவு நடக்கின்றது என்பது ஒன்றும் ரகசியமல்ல. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாட்டில் பலமான அரசு அமையாவிடால் இதுதான் நடக்கும்

சிரியா பழம்பெருமை மிக்க நாடு, போர்கள் அதன் அன்றாட நிகழ்வு , தாவீது மன்னனுக்கு முந்தைய காலத்தில் இருந்தே அது ரத்தபூமி, அலெக்ஸாண்டர் காலம் முதல் அதன் அழிவு அதிகம், ரோமானியர் காலமும் அப்படியே

சிரியா அமைதியான காலமெது என்றால் புனிதமான கலீபாக்கள் ஆட்சியும், அதனை தொடர்ந்த மாமன்னன் சலாவுதீன் ஆட்சியில் மட்டுமே

அதனை தொடர்ந்து சிலுவைபோர்கள் அதன் அமைதியினை குலைக்க, பின்னால் எழும்பிய ஓட்டோமான் சாம்ராஜ்யத்தில் அது அமைதியாய் இருந்திருக்கின்றது

பின் இஸ்ரேல் உருவாக்கபட்டபின் மறுபடியும் அழிவு.

சுருங்க சொன்னால் அரேபிய ஆட்சியில் அது அமைதியாகவும், ஐரோப்பிய தலையீட்டால் அது அழிவும் கொண்டு இருந்திருக்கின்றது, இப்பொழுது அமெரிக்கா எனும் நாடு அந்த அழிவினை நடத்துகின்றது

என்ன நடக்கின்றது?

விஷயம் ஒன்றுமே அல்ல, சதாம் வீழ்த்தபட்ட காலத்தில் இருந்தே சிரியா வழியாக குழாய் பதித்து எண்ணெயினை ஐரோப்பா கொண்டு செல்லவேண்டும் என்பது எண்ணெய் முதலாளி கணக்கு

ஈரான் இருக்கும் வரை துருக்கி வழியாக செல்வது நடக்கா காரியம், ஈராக்கின் வடக்கு எல்லை எல்லாம் ஈரான் செல்வாக்கு மகா முரட்டு நாடு அது என்பதால் கவனம் சிரியா மேல் படிந்தது

இதற்கு சிரிய அதிபரை தூக்க வேண்டும் அல்லது பொம்மை அரசு அமைக்க வேண்டும் இதுதான் திட்டம். பல திடீர் போராளிகள் வந்தனர், சிரிய அதிபர் பதவிவிலக வேண்டும் என்றனர்

சிக்கல் எங்கிருந்து வந்ததென்றால் ரஷ்ய வடிவில் வந்தது

சிரிய அதிபர் மாற்றபட்டு எண்ணெய் குழாய்பதிக்கபட்டால் ரஷ்ய எண்ணெய் விற்காது, விடுமா ரஷ்யா? சிரியாபற்றி எது பேசினாலும் என்னிடம் பேசு என வந்தாயிற்று

இதில் ஈரானும் ஷியா பாசத்தில் வர அதற்கு தடையாக ஐ.எஸ் இயக்கம் வந்தது, இப்பொழுது ரஷ்யா சிரியா ஈரான் ஒரு அணி, போராளி குழுக்கள் அமெரிக்கா ஒரு அணி, ஐஎஸ் இயக்கம் ஒரு அணி,

இப்பொழுது இந்த மூன்று அணியும் தமக்குள் மோத வேண்டும், இது போக குர்து சண்டையும் உண்டு

என்ன நடக்கின்றது என புரிகின்றதா? இந்த புரிந்து கொள்ளவே சிரமான சண்டைதான் அங்கு நடக்கின்றது , சிரிய கூட்டனிக்கு போராளி மற்றும் ஐஎஸ் இயக்கம் எதிரி. போராளிகளுக்கு ஐஎஸ் மற்றும் சிரிய அரசு எதிரி, ஐஎஸ்க்கு எல்லோரும் எதிரி

இதில்தான் சர்வ அழிவு நடக்கின்றது. ஐநா என்ன சொன்னாலும் சண்டை நிறுத்தயாரும் தயாரில்லை. ஐஎஸ் இயக்கம் கொஞ்சம் கட்டுபடுத்தபட்டாலும் முழுக்க ஓயவில்லை

இப்பொழுது அமெரிக்கா அணியா ரஷ்ய அணியா என சண்டை வலுக்கின்றது , இதில் இஸ்ரேலும் முடிந்த அளவு லாபம் பார்க்கின்றது

இந்த சண்டையில் அப்பாவி குழந்தைகள் கொல்லபடுவதுதான் மாபெரும் கொடுமை

அரேபியாவில் எண்ணெய் இருக்கும் வரை இக்கொடுமை தொடரத்தான் செய்யும். அமெரிக்காவின் ஈகோ விடாது இன்னொன்று அரேபியாவில் எங்காவது சண்டை நடக்காவிட்டால் அது அரபு அரசியல் செய்ய முடியாது

ரஷ்யாவிற்கு இது பொருளாதார சிக்கல் நிச்சயம் விட்டுகொடுக்காது

அரேபியாவின் வாழ்வு கச்சா எண்ணெய் அதன் பேரழிவிற்கும் அதுவே பெரும் காரணம், அரை ஸ்பூன் எண்ணெய் கிடைக்கும் வரை இத்துயரம் தொடரும் என்பதுதான் கலங்க வைக்கும் விதி

சிரியா தொடரும் போரினால் பாதி அழிந்தாயிற்று, இன்னும் அழிய கொஞ்சம்தான் இருக்கின்றது.

ஒரு கேள்வி எழலாம், இந்த கொடூர தாக்குதலை சவுதி போன்றவை ஏன் கண்டிக்கவில்லை என்பது. அவர்களை பொறுத்தவரை ஷியாக்கள் எல்லாம் ஒழிக்கபடவேண்டியவர்கள், அவர்கள் செத்த்தால் நல்லது அதனால் அமைதி

இந்த அமைதிதான் சிரிய குழந்தைகள் சாவதை விட மகா கொடுமையான விஷயம்

சிரிய யுத்தம் நிறுத்தபடும்வரை எண்ணெய் எடுக்கமாட்டோம் என சவுதி, குவைத், ஈராக் எல்லாம் முடிவெடுத்தால் மறுநொடியில் யுத்தம் நிற்கும் , ஆனால் செய்யமாட்டார்கள் ஷியா வெறுப்பு அப்படி.

இன்னொரு நபிபெருமான் வராமல் அவர்களுக்குள் ஒற்றுமை இனி வராது.

அமைதி பேச்சு தொடரும் என தொடர்கின்றார்கள், ஆனால் தவறாமல் கொல்கின்றார்கள். இது போகிற போக்கில் 3ம் உலக யுத்தம் வந்தாலும் ஆச்சரியமில்லை