என்னமோ ஸ்ரீதேவி படமாக , பாடலாக‌ வரிசைகட்டி அடிக்கின்றார்கள்…

இதை விட்டால் நேரமில்லை என எல்லா டிவிக்காரர்களும் நினைத்தார்களோ என்னமோ ஸ்ரீதேவி படமாக , பாடலாக‌ வரிசைகட்டி அடிக்கின்றார்கள், இதில் ஜெயா டிவி விதிவிலக்கு மூன்றாம் உலகப்போர் வந்தாலும் அங்கு ராமசந்திரனும் ஜெயாவும் ஆடிகொண்டிருப்பார்கள்

ஒரு டிவியில் 16 வயதினிலே ஓடுகின்றது. பாரதிராஜா செய்த நல்ல காரியங்களில் ஒன்று அக்கால கிராமங்களை படம்பிடித்து வைத்தது, காரை பெயர்ந்த வீடு, மாட்டுவண்டி, திண்ணை, சிம்னி விளக்கு, வாரசந்தை, கடவாய்பெட்டி சுமக்கும் கிழவி என 1980வரை ஆங்காங்கே இருந்த கிராம அடையாளங்களின் நினைவினை கிளறிவிட்டது படம்

இன்று எல்லா கிராமங்களும் மாறியாயிற்று, அக்கால கிராமங்கள் அவ்வளவு எளிமையாய் அழகாய் இருந்திருக்கின்றன, அவர்கள் வாழ்க்கையும் கூட எளிமையாய் இருந்திருக்கின்றன‌

இனி அக்காலங்கள் திரும்பாது , பழைய நினைவுகளை திரும்பி பார்த்துவிட்டு கண்களை துடைக்க வேண்டியதுதான்

இந்த படத்தில் மய்யல் கொள்ள வைக்கும் மயிலு, வய்யம் அதாவது வசவு நிறைந்த பேச்சு பேசும் காந்திமதி, டைரக்டர் சொன்னபடி நடித்தால் மய்ய நடிப்பில் பின்னும் கமலஹாசன் என ஆளாளுக்கு பின்னுகின்றார்கள்

இப்படத்தை கவனித்தால் இந்த படத்தில் வரும் அனைவரும் பின் உச்சம் தொட்டிருக்கின்றார்கள். ஸ்ரீதேவி, ரஜினி, கமல், கவுண்டமணி, இளையராஜா, பாரதிராஜா என எல்லோருமே பெரும் நட்சத்திரமாகி இருக்கின்றார்கள்

இந்த படத்தில் இருந்தும் காணாமல் போனது இருவர். ஒருவர் அந்த டாக்டர், இன்னொருவர் தயாரிப்பாளர்

படத்தின் நட்சத்திரங்களை விட , கதையினை விட அந்த கிராமமும் , அந்த பாத்திரங்களும் அக்காலத்திற்கும் அந்த சூழலுக்குமே இழுத்து செல்வதே படத்தின் பலம்

மாறிவிட்ட அந்த அக்கால‌ எளிய‌ கிராம வாழ்க்கையினை இம்மாதிரி படங்களில்தான் இனி தேடவேண்டும்.