பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பெண்மையைப் போற்றுவோம் : மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

Image may contain: 1 person, smiling, text

1908 – மார்ச் 8. நியூயார்க் நகர ஆலைகள் அனைத்தும் செயலற்று போயின, உலகம் அதுவரை கண்டிராத புதிய பரபரப்பு, இப்படியும் நடக்குமா? என வியந்த அதிசயம்.

காரணம் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் எல்லாம் வீதியில் திரண்டு ஊர்வலமாக போராட‌ புறப்பட்டனர்.

பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம்பளம் வேண்டும், வேலை நேரத்தினை எட்டு மணி நேரமாக குறையுங்கள் , என்றெல்லாம் கோரிக்கை வைத்து உலக வரலாற்றிலே அதிரடியாக பெண்கள் புரட்சி நடந்தது.

இந்த போராட்டத்தின் தலைவிகளான‌ (கவனிக்கவும் நான் புரட்சியின் தலைவிகள் என சொல்லவே இல்லை..) கிளாரா ஜெட்கின், ரோஸா லக்ஸம்பர்க் ஆகியோரின் பெருமுயற்ச்சியால் 1910 ஆண்டு கோபன்ஹேகனின் சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு கூட்டப்பட்டபோது அந்த மார்ச் 8ஐ “சர்வதேச உழைக்கும் பெண்கள் தினமாக” ஆண்டுதோறும் கொண்ட முடிவெடுக்கப்பட்டது.

இன்றும் “காண்ட்ராக்ட் ஸ்டாப்” என ஒப்பந்தமிட்டு உழைப்புரிஞ்சும் அமெரிக்கா எளிதில் ஒத்துக்கொள்ளுமா? காவேரியில் கன்னடத்திடம் நீர் கேட்பது போல மிக வேகமாக மறுத்தார்கள்.

சிக்கல் நீடித்தது ஆனால் மகளிர் உரிமைகளை கேட்டு கொண்டே இருந்தார்கள்

1945ல் ஐ.நா சபையிலும் இதே கோரிக்கை வைக்கபட்டபொழுது மறுத்தது அமெரிக்கா,

(ஐ.நா சபையின் நிலமை நமது முதல்வர் பழனிச்சாமியினை விட‌ மகா மோசம், 70 வருட வரலாறு அப்படித்தான் ஐ.நா சபைக்காக அழுகிறது..)

இக்கால கட்டத்தில் இந்திய ஆண்களே சொத்து இருந்தால்தான் வோட்டளிக்க முடியும், அப்படியானால் பெண்களின் நிலை கிட்டதட்ட அதிமுக கருணாஸ் நான் தான் அடுத்த முதல்வர் என சொல்லிகொள்வது போல, கனவுகூட காணமுடியாத கற்பனை.

1925க்கு பின்னர் அமெரிக்காவின் எதிரியான சோவியத்யூனியன் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து என்னலாமோ செய்தது, குறிப்பாக 2 கோரிக்கைகள்

ஆண்களுக்கு நிகரான சம்பளம் (கம்யூனிசத்தில் ஆணெண்ண பெண்ணெண்ண எல்லாம் ஒரே தொழிலாளர்தாம், சம்பளம் கொடுத்தால்தான் பிரச்சினை, தேவைகள் எல்லாம் அரசு பார்த்துகொள்ளும், வீணாக மக்கள் கைகளில் பணம் இருக்கவேண்டாம்) ஏற்றுகொள்ளபட்டது

8 மணிநேர வேலை (கம்யூனிச சித்தாந்தமே தொழிலாளர் நலன்பற்றியது, அதுவும் கம்யூனிசபூதம் தோழர்,தோழி என உலகை மிரட்டிய காலம் ) உடனே நிறைவேற்றி உலகிற்கு அறிவித்தது

இது போல மகப்பேறு விடுப்பு, குழந்தைகளை பணி இடங்களுக்கு கொண்டுவர அனுமதி, அக்குழந்தைகளை பராமரிக்க ஏற்பாடு என சோவியத் யூனியன் அசத்தியது

பெண்களை அடக்கி வைத்திருந்த மதங்களுக்கு (உண்மையும் கூட) அடி கொடுத்தாகிவிட்டது, முதலாளி உலகின் தொழிலாளர்களை உசுப்பேத்தியாகிவிட்டது, அமெரிக்காவிற்கும், அதன் அடிப்பொடிகளுக்கும் செக் வைத்தாகிவிட்டது.

எந்த கிறிஸ்தவ திருச்சபை பெண்களை அடக்கி வைத்திருந்ததோ அவர்கள் முகத்திலும் கரிபூசியது.

ஐரோப்பிய மகளிர் எல்லாம் சோவியத் நாட்டில் மணமுடிக்க விரும்பும் அளவு மகளிர் நலனை முன்னிறுத்தியது சோவியத் ரஷ்யா

உலகில் சாதாரண தீவிரவாதி மாரடைப்பில் செத்தாலே, தான் கொன்றதாக தம்பட்டம் அடிக்கும் அமெரிக்கவிற்கு இது தாங்குமா?

கொஞ்சம் கொஞ்சமாக குழம்பி 1975ல் அப்படியே “சர்வதேச உழைக்கும் பெண்கள் தின” கோரிக்கையை (அப்படியே ஏற்றுகொண்டால் அமெரிக்க கெத்து என்ன ஆவது??, திருத்த சொல்லி ஏற்றுகொண்டால் தானே உயரதிகாரி) திருத்த சொன்னது, பின்னர் ஏற்றுகொண்டது.

மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினம் ஆன கதை இப்படித்தான்.

உண்மையில் உழைக்காத பெண்கள் என்று எந்த பெண்ணையாவது காட்டமுடியுமா? அடுப்படியோ இல்லை கிணற்றடியோ ஏதோ ஒரு வேலையை பெண்கள் செய்துகொண்டேதான் இருப்பார்கள், உழைத்து ஓய்ந்த முதியவர்களை தவிர.

இன்று எல்லா தமிழக அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவிப்பார்கள், நாமும் தெரிவித்து கொள்வோம், முகநூலில் இருக்கும் சகோதரிகள் மட்டுமல்ல, உலகின் மகளிர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.

லக்ஸ்,பேரல் லவ்லி இன்னபிற அழகு சாதன கம்பெனிகள் தங்களின் அழகான மாடல்கள், நகை கடைகளின் நடிகைகள் என செயற்கை புன்னகையோடு வாழ்த்துக்களாக தெரிவிப்பார்கள்.

ஆனால் உண்மையில் டாஸ்மாக்கில் எல்லாம் இழக்கும் கணவனோ,மகனையோ பெற்ற பெண்கள். வரதட்சனை கொடுமையால் வாழ முடியாத பெண்கள்,

உழைக்கும் இடத்திலும்,பொது இடத்திலும் பாதுகாப்பில்லாத பெண்கள், சரிகா ஷா,டெல்லி சம்பவம், நந்தினி சம்பவம் வரை வெளியில் தெரிந்த, இன்னும் தெரியாத ஏராளமான பெண்களுக்கெதிரான‌ கொடுமைகள் நடக்கும் நாட்டில் தான், இன்னும் பெண் பல கண்ணீரோடு வாழும் நாட்டில்தான்

3000 ஆண்டுகளுக்கு முன்பே நீதிக்காக அரசனை எதிர்க்க துணிந்த கண்ணகியும்,

1908 – மார்ச் 8. நியூயார்க் நகர ஆலைகள் பிரச்சினைக்கு முன்பாகவே “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொழுத்துவோம்” என உலகிற்கு சொன்ன மகாகவி பாரதியும்,

1925 முதல் போராடி பால்ய விவாகம், தேவதாசி முறை இவற்றை ஒழிக்க அரும்பாடு பட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும்

1945 உலக மாநாட்டிற்கு முன்பே “பெண்களெல்லாம் ஆண்களை போல முடிவெட்டிகொண்டு, உடையணிந்துகொண்டு தன் சொந்த சம்பாத்தியத்தில் வாழும்வரை பெண்விடுதலை இல்லை” என இக்கால உண்மையினை அன்றே சொன்ன பெரியாரும்,

இந்த தமிழகத்திலிருந்து உலகிற்கே முதலில் மகளிர் வாழ்த்து சொன்னவர்கள்.

இந்த நவீன காலத்தில் பெண்ணுரிமை புரட்சியினை நிச்சயம் சோவியத் யூனியனே தொடக்கி வைத்தது, பெண்களுக்கு உரிமை, கல்வி , இன்னும் பல சலுகைகளை அதுதான் கொடுத்தது

சாதாரண பால்காரி தெரஸ்கோவாவினை விண்வெளிக்கு அனுப்பி வரலாற்றின் முதல் விண்வெளி பெண் என பதிந்தது

அந்த லெனின் இயக்கத்திற்கு பின் உலகம் தங்கள் நாட்டிலும் அப்படியான பெண் புரட்சிகள் வரலாம் என கருதி பெண்களுக்கு வாய்பளித்தன‌

உலகம் முழுக்க அதன்பின் பெண்கள் ஜொலிக்கவந்தார்கள், நிச்சயமாக அந்த வாசலை திறந்து வைத்தது சோவியத் சாதனை

இந்த லெனின் இயக்கத்திற்கு பின் பெண்களை கவுரவபடுத்திய இயக்கம் எம்ஜிஆர் அஇஅதிமுக இயக்கமே

தமிழகத்தின் இரு பெண் முதல்வர்களை அதுதான் கொடுத்தது, மூன்றாம் பெண் முதல்வர் மயிரிழையில் வாய்ப்பினை தவறவிட்டார்

30 வருடமாக அக்கட்சி பெண் தலமையில்தான் செயல்பட்டது, இன்னும் 20 வருடம் அப்படித்தான் செயல்படும் போலிருக்கின்றது, இன்றும் சி.ஆர் சரஸ்வதி, வளர்மதி , கோகுல இந்திரா என பெண் தலைவர்கள் வரிசை அங்கும் உண்டு

அக்கட்சியின் சமீபத்திய பிரிவு கூட தீபா எனும் பெண் தலமையில் நடக்கின்றது

சினிமாவிலும், அரசியலிலும் எம்ஜி ராமசந்திரன் செய்த பெண் விடுதலை புரட்சிகள் கொஞ்சமல்ல, மனிதரை மகளிர் தினத்தில் மறக்கவே முடியாது.

அதனால் தமிழகத்தில் மகளிர் வாழ்த்து சொல்லும் பெரும் உரிமை அவர்களுக்கே இருக்கின்றது

இருக்கட்டும்

இன்றைய இந்தியாவில் எத்தனையோ பெண்கள் சாதிக்கின்றார்கள், தனி மனுஷியாக குடும்பத்தை காக்கும் பெண் முதல் 104 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்திய பெண் விஞ்ஞானிகள் வரை வாழ்த்துகுரியவர்கள்

இப்படி பல வாழ்த்துகுரியவர்கள் இருந்தாலும், அபிமானத்திற்குரியவர் ஒரு பெண்ணாக இருந்துவிட்டால் வாழ்த்தாமல் இருக்கமுடியுமா?

உதவ யாரும் இல்லாமல் 1986களில் சினிமாவிற்கு வந்து, அப்பா, அண்ணன், மாமன், மச்சான் என யாருமில்லாமல் தனித்து போராடி அதில் தனக்கொரு இடமும் பெற்று

தமிழ்நாட்டில் காலூன்றி, எத்தனையோ எதிர்ப்புக்கும் அவமானங்களுக்கு இடையிலும் மிக தைரியமாக எல்லா எதிர்ப்புகளையும் அடித்து நொறுக்கி இன்று தனக்கென தனி இடம் பெற்றிருக்கும் குஷ்பூ நிச்சயம் தன்னம்பிக்கையின் வடிவம்

எத்தனையோ நெருக்கடிகள், வழக்குகள், மிரட்டல்களை எல்லாம் தாண்டி இன்று அசைக்கமுடியாத இடத்தினை அவர் பிடித்துவிட்டார்

ஜெயலலிதா போல அவருக்கு சினிமா வழிகாட்டிகளோ, அரசியல் வழிகாட்டிகளோ இல்லை.

ஆனால் தனக்கான பாதையினை நதி கண்டுபிடித்து நடப்பது போல வெற்றிபடி ஏறிகொண்டிருக்கின்றார்

அவருக்கொரு ஸ்பெஷல் வாழ்த்து

மற்ற எல்லா மகளிருக்கும் வழக்கமான மகளிர் தின வாழ்த்து

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications