எவன் தயவும் தேவை இல்லை : ஸ்டாலின்

எவன் தயவும் தேவை இல்லை என கூட்டணி குறித்து ஸ்டாலின் சொன்னதாக செய்திகள் வந்தது

இதற்கு பெரிதாக சீறவேண்டிய உரிமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு, காரணம் திமுகவின் வெற்றியில் எல்லா தேர்தலிலும் அதன் பங்கும் உண்டு

இதனால் வழக்கம் போல இளங்கோவன் மட்டும் சீறியிருக்கின்றார், தங்க தலைவி குஷ்பு விரைவில் பதிலளிப்பார் என சங்கம் நம்புகின்றது

வேறு யாரும் வாய் திறக்கவில்லை

உண்மையில் திமுக தனியே நின்று வெற்றிபெறும் பலம் கொண்ட கட்சியா என்றால் ஒருகாலமும் இல்லை

ஆனானபட்ட அண்ணா காலத்திலே அது 7 கட்சி கூட்டணியோடுதான் ஆட்சிக்கு வந்தது, இவ்வளவவிற்கும் அண்ணா, ராமசந்திரன் என எல்லா ஜாம்பவான்களும் இருந்தனர்

ராமசந்திரன் பிரிந்தபின்னால் இன்னும் மோசம், வேறு வழியின்றி “நேருவின் மகளே வருக” என திமுக வரவேற்றதெல்லாம் அப்படித்தான்

1989லும் தேசிய முண்ணணி கூட்டணியிலே அது ஆட்சிக்கு வந்தது, தனியாக வரவில்லை, பின்பு டெல்லியில் காட்சி மாற அதுவும் டிஸ்மிஸ் ஆனது

அதன் பின் அதிமுக வலுவானதும் ரஜினி மூப்பனார் என 1996ல் கூட்டணி வைத்தே ஆட்சிக்கு வந்தது

2006ல் காங்கிரஸ் ஆதரவிலே அதன் ஆட்சியும் நடந்தது, நிச்சயம் அது மைனாரிட்டி ஆட்சி, காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு கொடுத்திருக்க வேண்டும் ஆனால் ஒருவித தந்திரத்தில் “எங்களால் அரியணை இழந்த காங்கிரஸ் எங்களால் அரியணைக்கு வந்தால் என்ன அர்த்தம்”” என்ற வகையில் கொண்டு சென்றார்

2011ல் விஜயகாந்தின் வரவால் திமுக ஆட்சியினை இழந்தது, இதனை சரியாக கணித்த திமுக பின்பு 2016ல் அவரை கூட்டணிக்கு கொண்டுவர தலைகீழாக நின்றது

பழம் கனிந்தது, பால் பொங்கியது என என்னவெல்லாமோ சொல்லி காவல் இருந்தார்கள், இறுதியில் போயஸ் கார்டனில்தான் பால் பொங்கியது

திமுகவிற்கும் இழப்பு அதே நேரம் விஜயகாந்திற்கும் பெரும் இழப்பு

ஆக 60 வருட திமுக வரலாற்றை நோக்கினால் தகுந்த‌ கூட்டணி இன்றி அது ஆட்சிக்கு வந்ததாக சரித்திரமே இல்லை, இது கலைஞருக்கு தெரியும்

அதனால்தான் அவர் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகளை அமைப்பார், பல கட்சிகளுடன் நெருக்கமாக இருப்பார்

தேர்தல் தேதி அறிவித்தவுடன் அவரின் சிந்தனை கூட்டணி பற்றியும் தொகுதிபங்கீடு பற்றியுமே இருக்கும், அப்படித்தான் பலமுறை வெற்றிபெற்றார்

சுருக்கமாக சொன்னால் திமுக என்பது பெரும் வாக்கு வங்கியற்ற கட்சி, ஓட்டை மட்டையினை வைத்துகொண்டு சிக்ஸர் அடிப்பது போல கலைஞர் தன் தந்திர சாகசத்தால் வெற்றி பெற்றார்

1989ல் அதிமுக பிரிந்தபொழுது திமுக வெற்றி பெற்றிருக்கலாம், அப்பொழுது காங்கிரசும் கனிசமான இடங்களை பெற்றிருந்தது

ஆனால் இப்பொழுது நிலமை அப்படி அல்ல, ஏகபட்ட கட்சிகள் களத்தில் இருக்கின்றன, போதாகுறைக்கு ரஜினி கமல் வேறு

பெரும் பலம் கையில் இருந்தும் ஆர்.கே நகரில் தினகரனை ஆளும்கட்சியால் அடக்க முடியவில்லை என்பதும் இன்னொரு அபாய சங்கு

இக்காலத்தில் இருந்து கொண்டு எவன் தயவும் எனக்கு தேவை இல்லை என சொல்வாரானால் முக ஸ்டாலினின் கப்பல் நிச்சயம் கரையேறாது

இது இன்று இல்லாவிட்டாலும் இன்னொருநாள் உலகிற்கு புரியும்