சென்னையில் வங்கி கொள்ளை இட முயன்றவன் கைது

சென்னையில் வங்கி கொள்ளை இட முயன்றவன் கைது : பரபரப்பு செய்தி

அவன் யாரென தெரியவில்லை ஆனால் கொஞ்சம் கூட இந்திய யதார்த்தம் அந்த முட்டாள் கொள்ளையனுக்கு தெரியவில்லை

வங்கிகளை துப்பாக்கி முனையில் கொள்ளையடிப்பது சுதந்திர போராட்ட காலத்தில் போராளிகள் ஆயுதங்களுக்காக கொள்ளையடிப்பதோடு போயிற்று

இது சுதந்திர இந்தியா, இங்கு இப்படியா கொள்ளை அடிப்பார்கள்?

இங்கு எல்லா கொள்ளைக்கும் லைசன்ஸ் வேண்டும். மணல் அள்ள ஒரு லைசென்ஸ் வைத்து மணல் கொள்ளை அடிக்கலாம், கல்குவாரிக்கு லைசென்ஸ் வைத்து மலை விழுங்கலாம், தாது மணலுக்கு லைசென்ஸ் இருந்தால் கடற்கரையினையே சுரண்டலாம்

கல்லூரி பள்ளிகளுக்கு லைசென்ஸ் பெற்றால் கல்வி கொள்ளை அடிக்கலாம் , மருத்துவ லைசென்ஸ் பெற்றால் பெரும் பணம் சுருட்டலாம்

இப்படி லைசென்ஸ் பெற்று அரசியல் துணையோடு வென்றால் அவர்கள் தொழிலதிபர்கள், 4 எம்பி 10 எம்.எல்.ஏ உருவாக்கி கையில் வைத்துகொண்டு ஒரு டிவியும் தொடங்கிவிட்டால் ஒரு பயலும் கேள்வி கேட்க முடியாது

இது தெரியாமல் அப்பாவியாக செத்தவன் வீரப்பன்

அவன் மட்டும் ஒரு சந்தண வியாபார லைசென்ஸ் பெற்று தொழில் நடத்தியிருந்தால் இந்நேரம் வீரப்பனார் கல்லூரி, வீரப்பனார் ரிசார்ட், சேத்துகுளியார் டிரக்கிங், முத்துலட்சுமி டிவி, வீரப்பனார் யானை சவாரி நிலையம் என எங்கோ சென்றிருக்கலாம்,

ஏன் வனத்துறை அமைச்சர் கூட ஆயிருக்கலாம்

ஆனால் இப்படி செய்யாமல் வீணாக செத்துவிட்டான் வீரப்பன்

இந்த வங்கிகொள்ளையனையே எடுங்கள், இப்படியா 6 லட்சத்திற்கு ரிஸ்க் எடுத்துமாட்டவேண்டும், அவன் என்ன செய்திருக்க வேண்டும்?

தொழிலதிபர் வேடம் போட்டிருக்க வேண்டும், வங்கிகள் பூராவும் பலநூறு கோடிகணக்கில் லோன் வாங்கி இருக்க வேண்டும், போலி பத்திரங்களை எல்லாம் காட்டி இருக்க வேண்டும்

ஒரு வங்கி விடாமல் வாங்கியாயிற்று இனி அன்புசெழியன் மட்டும்தான் பாக்கி என்ற நிலையில் கம்பி நீட்ட வேண்டும்

மக்காவ், மொரிஷியஸ், லண்டன் என சென்று கடற்கரையில் மல்லாக்க கிடக்க வேண்டும்

பாரத பிரதமரே வந்தாலும் அவர்களை தொடமுடியாது, காரணம் பணம் டிப்பாசிட் செய்தவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு

இது புரியாமல் வெறும் 6 லட்சத்திற்கு ஆசைபட்டு வங்கி கொள்ளையில் சிக்கி இருக்கின்றான் ஒருவன்

கொள்ளையனுக்கும் பகுத்தறிவு, பொது அறிவு, யதார்த்த அறிவு எல்லாம் வேண்டும், சும்மா கொள்ளையன் ஆனால் இப்படித்தான்

இந்த பிரஷ்சர்ஸ் கொள்ளையர்களுக்கு சொல்லிகொள்வது ஒன்றுதான், கொஞ்ச நாளாவது அரசியல் கட்சிகள் அவர்களின் தலைவர்களிடமிருந்து அப்ரண்டிஸாக தொழில் கற்றுகொண்டு வாருங்கள், பிற்காலம் அமோகமாக இருக்கும்

இல்லாவிட்டால் இப்படித்தான் சிக்கிகொள்வீர்கள்.