அந்த அனாதை மகனுக்கு ஆழ்ந்த அஞ்சலி

நெல்லையில் தந்தை குடியினை நிறுத்தா கோபத்தில் பாலத்தில் தூக்கில் தொங்கியிருக்கின்றான் மாணவன்

டாஸ்மாக் திறந்திருப்பதால் அவன் தந்தை குடித்தார் என சொன்னாலும், குடிகாரர்கள் வள்ளுவர் காலத்திலிருந்து இன்றுவரை இருக்கின்றார்கள்

வள்ளுவன் கள்ளுண்ணாமை என அதிகாரம் இயற்றும் அளவு அன்றே குடிபழக்கம் சீரழித்திருக்கின்றது

நெருப்பை நெய்யால் அணைத்தேன் என குடிபற்றி கம்பன் கூட ராமயணத்தில் சொல்கின்றான்

டாஸ்மாக்கை நிறுத்தவேண்டும் என்பது சரி, அதே நேரம் பழைய கள்ளச்சாராய சாவுகளும் கொஞ்சமல்ல‌

குடியினை சட்டம் போட்டு வென்றதாக ஒரு நாடுமில்லை, சொல்லிகொள்ளலாமே தவிர முழுவதும் சாத்தியமன்று

குடிக்க முடிவெடுத்தவன் சொந்தமாக காய்ச்சி கூட குடிப்பான், பழகிவிட்டால் அது ஒரு வேதாளம் முதுகை விட்டு இறங்காது.

இந்த மாணவனுக்கு தாய் இல்லை, தந்தை மறுமணம் செய்திருகின்றார் , குடிபழக்கமும் அவரை தொற்றியிருக்கின்றது

குடிகாரனின் மகன் என்பதும், குடியால் தந்தை செய்யும் கொடுமை என்ன என்பதும் தீ போல சுட்டால்தான் தெரியும்

அக்கொடுமை உலகின் எல்லா கொடுமைகளிலும் பெரிது

அதற்காக சாக துணிந்தால் இந்திய மக்கள் தொகை இவ்வளவு வந்திருக்காது

அம்மாணவனுக்கு வழிகாட்ட ஆளில்லை, இந்த அவல வாழ்வினை ஒரு நாள் மாற்றிகாட்டு என அவனுக்கு ஆறுதலோ, கைதூக்கி விடவோ யாருமில்லை. தந்தை குடித்து சாகின்றார் போகட்டும் நம் வாழ்வை நாம் தீர்மானிக்கலாம் என அவன் துணிந்து நிற்க ஆதாரம் ஏதுமில்லை

எல்லாம் சேர்ந்து அவனை கொன்றிருகின்றது.

பதின்ம வயதினருக்கு வழிகாட்டும் பெரும் பொறுப்பு அந்த தந்தைக்கு உண்டு, குடி அந்த பொறுப்பை அழித்திருக்கின்றது, மகனை கொன்றிருக்கின்றது

அந்த அனாதை மகனுக்கு ஆழ்ந்த அஞ்சலி

குடிகார தந்தைகளுக்கு யாரோ ஒரு குடிகாரனின் மகன் உயிரை கொடுத்து பாடம் சொல்லியிருக்கின்றான், இனியாவது அவர்கள் திருந்தட்டும்