மாபெரும் வெற்றி உண்டென்றால் ஸ்டெர்லைட்டை மூட வைத்திருப்பது
ஒரு வழியாக தமிழ்நாடு தன் இரண்டாம் பெரும் வெற்றியினை பெற்றுவிட்டது, ஜல்லிகட்டுக்கு பின் மக்களுக்கு ஒரு மாபெரும் வெற்றி உண்டென்றால் இந்த ஸ்டெர்லைட்டை மூட வைத்திருப்பது
ஆம், ஸ்டெர்லைட்டை மூடுவதாக தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தாயிற்று, இனி ஸ்டெர்லைட் நீதிமன்றம் அது இது என சுற்றிவந்தாலும் இயங்குவது சாத்தியமில்லை
பலியான 13 பேருக்கும் அஞ்சலி செலுத்திவிட்டு ஸ்டெர்லைடை பூட்டலாம், அந்த 13 பேருக்கும் நினைவு தூண் ஒன்றை நிறுவி வருடா வருடம் அஞ்சலி செலுத்தலாம்
அவர்களின் தியாகம்தான் தமிழக அரசை உலுக்கி இருக்கின்றது
ஒரு விஷயம் கவனித்தால் சில விஷயங்கள் புலப்படும்
இந்த தமிழக அரசு நீட்டிக்க கூடாது என்றே திட்டமிட்டு இங்கு நெருக்கடி கொடுக்கபடுகின்றது என்பது ரகசியமல்ல, ஜல்லிகட்டு போராட்டம் அதை நன்றாக வெளிபடுத்தியது
ஆனால் மிக அனாசயமாக அதை தாண்டி வென்றது பன்னீர் செல்வம் அரசு. மிக அட்டகாசமாக ஜல்லிகட்டினை மீட்டது அந்த அரசு, மக்களின் கோரிக்கைக்காக அது செவிமடுத்தது
வழக்கமாக இம்மாதிரி நேரங்களில் மத்திய அரசு மாநில அரசை டிஸ்மிஸ் செய்யும், அப்படித்தான் எதிர்பார்த்தார்கள்
ஆனால் மத்திய அரசு பாஞ்சாலி மானத்தை காத்த பரந்தாமன் போல வந்து காத்தது
இப்பொழுது பழனிச்சாமிக்கு அதே செக் வைத்தார்கள், ஸ்டெர்லைட்டை மிக பிரமாண்டமாக கையில் எடுத்தார்கள்
மிக இக்கட்டான நிலையினை பழனிச்சாமி அரசு சந்தித்தது, நிச்ச்யம் ஆட்சி இழக்கும் கட்டம்தான் , ஆனால் யாரும் எதிர்பாரா விதமாக ஸ்டெர்லைட்டை மூடுகின்றது
எதெல்லாம் நடக்காது, இதன் மூலம் பழனிக்கு செக் வைக்கலாம் என எதிர்பார்த்து பலர் செய்தபொழுது மத்திய அரசு துணையோடு அதை தூள் தூளாக்குகின்றது இந்த மாநில அரசு
நிச்சயம் இந்த மாநில அரசுக்கு எதிரான காரியங்களை திமுக செய்யவில்லை, சத்தியமாக சொல்லலாம் செய்யவே இல்லை
அம்பு எய்துவிட்டு திகைத்து நிற்பவர்கள் திமுக அல்ல
எப்படியோ இந்த அரசுக்கு நெருக்கடி கொடுக்க கையில் எடுக்கபட்ட இரு விஷயங்களும் யார் வெற்றி, யார் தோல்வி என்பதை தாண்டி மக்களுக்கு மாபெரும் வெற்றியாய் முடிந்திருகின்றது
முகமது பின் துக்ளக்கிற்கும் சில நல்ல பக்கங்கள் உண்டு என்பது போல பன்னீருக்கு ஜல்லிகட்டும், பழனிச்சாமிக்கு ஸ்டெர்லைட்டும் முத்திரைகளாயின, ஒப்புகொள்ளத்தான் வேண்டும்
இன்னும் இந்த அரசின் எதிரிகள் பல விஷயங்களை கையில் எடுத்து போராடட்டும், தமிழகத்திற்கு இன்னும் நலம் வந்து சேரட்டும்
பழனிச்சாமி அரசை, இஸ்ரேலை அமெரிக்கா காப்பது போல மத்திய அரசு காக்கின்றது என்பது தெரிகின்றது
அரசியல் ஆட்டங்களிலும் நல்ல விஷயங்கள் நடக்கின்றன, ஆனால் 13 பேர் சாகாமல் நடந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்
விதி முந்திகொண்டது
அந்த 13 தியாகிகளுடன் அந்த நாசகார ஆலை மூடபடட்டும்
ஒரு வழியாக இரு கண்டங்களை மாநில அரசு வெற்றிகரமாக கடந்தாயிற்று, இனி அடுத்து என்ன சிக்கல் என எதிர்பார்ப்போம்
தூத்துகுடி மக்களுக்கு கண்ணீருடன் கூடிய வாழ்த்துக்கள், 25 வருட போராட்டத்தில் அவர்களுக்கு சில இழப்புகளுடன் நீதி கிடைத்திருக்கின்றது
அக்காலம் முதலே குரல் எழுப்பிய வைகோ, இப்பொழுது முழு மூச்சுடன் களத்தில் இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் , இன்னபிற கட்சி தலைவர்களுக்கு வாழ்த்துக்கள்
அம்மக்களை சென்று சந்தித்த ஒவ்வொரு தலைவருக்கும் வாழ்த்துக்கள், கமலஹாசன் கூட சென்றிருந்தார் நன்றி
இந்த ரஜினி என்பவருக்கு இன்னொரு நாளில் இருக்கின்றது, பிரதமர் என சொல்லிகொள்ளும் மோடிஎன்பவருக்கும் பின்பு இருக்கின்றது
எப்படி ஆயினும் மக்களின் நியாயமான கோரிக்கை சரியான சமையத்தில் வென்றிருக்கின்றது
இனியாவது அவர்கள் நல்ல காற்றை நிம்மதியாக சுவாசிக்கட்டும், தங்கள் குடிநீரை பயமின்றி குடிக்கட்டும்
அவர்கள் இரவுகள் நிம்மதியாக கழியட்டும்
இந்த அறிவிப்போடு சுட அனுமதி கொடுத்த கொடியவர்களை விட்டுவிட கூடாது, அப்படியே ஸ்டெர்லைட்டின் கைகூலியாக செயல்பட்ட உள்ளூர் கொடியவர்களையும் தப்ப விட கூடாது
தூத்துகுடி மக்களின் எழுச்சிக்கு திமுக பொறுப்புள்ள எதிர்கட்சியாக களத்தில் நின்றது, தன்னால் முடிந்த அளவு நெருக்கடிகளை கொடுத்தது, நிச்சயம் ஸ்டாலினும் வாழ்த்துகுரியவர்
நல்ல செய்திகள் தொடர்ந்து வரட்டும், மக்கள் மகிழ்ச்சி பெருகி கொண்டே இருக்கட்டும்
கிட்டதட்ட 10 நாள் பரபரப்பு கண்ணீரில் தொடங்கி நல்ல செய்தியொடு முடிந்திருக்கின்றது, அந்த தியாகிகள் 13 பேரை வணங்கிவிட்டு விடைபெறலாம்
சங்கமும் தூத்துகுடி மக்களுக்கு கண்ணீரோடு கரங்களை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது