பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழகத்தில் புத்தரை மறந்துவிட்டார்கள்

Image may contain: text

அது இன்றைய நேபாளமும் இந்தியாவும் சார்ந்த பகுதிகள், அன்றும் இன்றும் அங்கு இந்துமதமே பிராதனம்,

இந்துமதத்தின் இதயமே இன்றும் அங்குதான் இருக்கின்றது, தமிழ்கடவுள் முருகனே அங்கிருந்துதான் பழனிக்கு பறந்ததார் , பின் அகத்தியனும் வந்தார்.

அதற்காக இவர்களை வந்தேறிகள் என சொல்லிவிட கூடாது, வந்தேறி என்பதற்கு இப்பொழுது தமிழகத்தில் வேறு வார்த்தை, அவர்களுக்கு பிடிக்காதவர்கள் அல்லது ஆதரவு தாராதவர்கள் எல்லாம் வந்தேறிகள்.

அந்த நேபாள‌ நாட்டின் இளவரசனாக 2600 ஆண்டுக்கு முன் புத்தர் பிறந்தார், பிறந்தவுடன் அரண்மனை ஜோதிடன் கணித்து சொன்னான், ஒரு முதியவர், ஒரு நோயாளி, ஒரு பிணம் மூலம் இவர் ஞானம் பெற்று சந்நியாசம் செல்வார், இனி உங்கள் பொறுப்பு.

அவ்வளவுதான் வெளிஉலகம் காணாமல் அவர் வளர்க்கபட்டார், சகலமும் அரண்மனையிலே, கொஞ்சம் எங்கோ இடிக்கின்றது அல்லவா? அதேதான் சின்னதம்பி குஷ்பு போலவே தங்ககூட்டிலே வளர்க்கபட்டார், வாழ்வின் எந்த துன்பமும் அவரை எட்டியதில்லை, மணவாழ்கையும் சிறப்பாக சென்றது.

அதன் பின் மன்னராகும் காலத்தில் நாட்டை பார்த்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் வெளிவந்தவருக்குத்தான் நோயாளி, முதியவர், பிணம் எல்லாம் பார்த்து ஞானம் வந்தது, சொல்லபோனால் வாழ்வில் இப்படி எல்லாம் சிக்கல் உண்டா என அவர் சிந்தித்ததே அப்பொழுதுதான்.

இதனை எல்லாம் தடுக்க முடியாதா? என்ற அவரின் கேள்விக்கு அமைச்சரிடமும் பதிலில்லை, ஆண்டவனிடமும் பதில் இல்லை. தானாகே தேடி காட்டிற்குள் சென்றார். இதுதான் அவர் அரண்மனை விட்டு ஓடிய சம்பவமே அன்றி, மனைவியிடம் சண்டையிட்டோ அல்லது சமையல் பிடிக்காமலோ அல்ல.

அப்படியும் ஞானம் வந்ததா என்றால் இல்லை, அக்கால முனிவர்கள் உணவை வேறுத்தால் ஞானம் வரும் என்றனர், அவரும் ஒரு சட்டி, ஒரு அகப்பை, ஒரு பருக்கை படிபடியாக என குறைத்து பார்த்தால், உடல் மெலிந்து மூளை சோர்வடைந்ததே தவிர ஞானம் கடிதம் கூட போடவில்லை, அதன் பின் நன்றாக உண்டார், உடல் செத்துவிட்ட பின் ஞானம் வந்து என்ன? பேய்வந்து என்ன?

அது ஒரு பவுர்ணமி நாள், வைகாசி மாத விசாக நட்சத்திரம் (முருகனுக்கும் அதுதான் உகந்தது, அதுவும் வைகாசி விசாகம் ஸ்பெஷல்) அன்று ஒரு அரச மரத்தடியில் அவருக்கு ஞானநிலை எட்டியது, அதன் பின் உண்மையினை உணர்ந்து போதிக்க தொடங்கினார், அதனை 4 ஆக பிரித்தார்

* மனித வாழ்க்கை சிக்கல்களும், துயரமும் நிறைந்தது அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது
* பேராசையும், சுயநலமும் தான் துன்பத்திற்கு காரணம், ஆனால் கடும் தியானம் மூலம் மனதை அடக்கலாம், ஆசையினை வெல்லலாம்.
* அன்பும், சமாதனமும் கொண்ட சமூகத்தில் துன்பமில்லை
* 8 வழிகளில் இவ்வுலகில் நல்வாழ்க்கை சாத்தியம் (நன்னடத்தை, நல்வழி, நற்சிந்தனை என 8 வரும்)

அன்றைய ரத்த பலிகளில் மூழ்கி இருந்த நேபாளத்திற்கு இது புதிய தத்துவம், ஆனால அவர்கள் பெரும்பாலும் ஏற்றுகொள்ளவில்லை, ஆனால் ஆசியா முழுக்க அது பரவிற்று.

ஒரு காலத்தில் இந்தியாமுழுக்க அது பரவி இருந்தது, இன்றும் தமிழகத்தில் பெரும்பான்மையான மடங்கள் எனும் இடங்கள் அவர்கள் தங்கி இருந்தது.

பெரும் மாற்றத்தை ஆசியாவெங்கும் புத்தமதம் உருவாக்கிற்று, அக்காலமே அது கடல்கடந்தும் பரவிற்று.
உண்மையில் புத்தர் எந்த மதமும் ஏற்படுத்தவில்லை, எந்த கடவுளையும் தொழ சொல்லவில்லை, அவர் சொன்னதெல்லாம் வாழ்க்கை நெறி, வாழ்கை தத்துவம், மாற்றமுடியாததை ஏற்றுகொள் எனும் தத்துவம்.

பண்டைய தமிழகம் புத்தமதத்தில் இருந்ததால் பழைய செய்யுள்களில், காப்பியங்களில் எல்லாம் அதன் தாக்கம் இருந்தது, மிக அழுத்தமாக இருந்தது.

புத்தமதத்தின் பெரும் சாதனை சாதியினை ஒழித்தது, உண்மையில் சாதியினை ஒழித்து காட்டிய பெரும் சாதனை அதனுடையது, அதனால்தான் அம்பேத்கர் அம்மதத்தை தழுவினார்.

இப்படி வரலாற்றின் முதல் புரட்சியாளனான புத்தன், உத்திரபிரதேசத்தில் தனது 80ம் நாள் உயிர்விட்டார்.

அவர் பிறந்தது, ஞானம் பெற்றது, மறைந்தது எல்லாமே ஒரே நாள், அதாவது வைகாசி விசாக நட்சத்திர பவுர்ணமி அன்று தான் அவரின் வரலாறு சொல்கின்றது,

பௌர்ணமிக்கு அப்படி என்ன சக்தியோ தெரியவில்லை, இந்து மதமும் அதனை குறிப்பிட்டுத்தான் சொல்கின்றது.

இந்த மானிட குல வரலாற்றில் முதன் முதலில் மனிதநேயம் பேசியன் புத்தன், முதன் முதலில் எல்லா மக்களும் நன்றாக வாழவேண்டும் என ஆசைபட்டவன் புத்தன், சாதியும் மூட நம்பிக்கையும் ஒழியவேண்டும் என ஆசைபட்டவன் புத்தன்.

நிச்சயமாக சொல்லலாம், அடுத்த 600 ஆண்டுகளில் தோன்றிய இயேசு கிறிஸ்துவிற்கு அவன் தான் முன்னோடி. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என திருமூலர் சொல்லி, அண்ணாதுரை முழங்கிய வரிகளை முதன் முதலிலே சொன்னவன்

பண்டைய இந்தியாவில் பிறந்து, பீகாரில் ஞானம் பெற்று, உத்திரபிரதேசத்தில் மறைந்த இந்தியாவின் பெரும் மகான் அவர். உலகெல்லாம் கொண்டாடபடும் இந்தியர் அவர்.

நாம் புத்தமதத்தவர் அல்லாதவராக இருக்கலாம், ஆனால் மனிதநேயம் உள்ள மனிதர்கள் என்றால், இந்த உலகத்து மக்களை எல்லாம் நேசிக்கும் மனிதம் இருக்கிறது என்றால் நமக்குள்ளும் புத்தர் சிரித்துகொண்டிருப்பார்.

அம்மாபெரும் மகானை இன்று நினைத்துகொள்வதில், மானிட சமூகம் பெருமிதம் கொள்கின்றது

பெரும் ஆரவாரத்துடன் புத்தரின் விழாவினை இலங்கை உட்பட‌ கிழக்காசியா நாடுகள் கொண்டிருக்கின்றன‌, ஆனால் அவர் கால் நடையாக நடந்த இந்தியாவில் அப்படி ஒரு சுவடு தெரியவில்லை

தமிழகத்திற்கும் தமிழுக்கும் புத்த துறவிகள் செய்திருக்கும் தொண்டு ஏராளம், ஐம்பெரும் காப்பியங்களில் அவர்கள் பாதிப்பு மிக்க உண்டு, ஆனால் தமிழகத்திலும் புத்தரை மறந்துவிட்டார்கள்

எப்படி நினைப்பார்கள்?

ஆசையினை ஒழி என சொன்னவன் எல்லாம் வழிகாட்டி அல்ல, மாறாக அத்தனைக்கும் ஆசைபடு என சொல்பவன் அல்லவா இன்றைய தமிழக ஆன்மீகவாதி,

பாரத பிரதமரும், தமிழக முதல்வரும் அவனிடமல்லவா பணிவார்கள்?

பின் எப்படி “ஆசையினை ஒழி, அமைதியாக வாழலாம்” என சொன்ன, “சாதி ஒழிக, எல்லோரும் சமம்” என சொன்ன‌, “மூட பழக்கங்களை ஒழி, மனிதனை நினை” , என சொன்ன‌ அந்த உத்தம புத்தனை நினைப்பார்கள்??

அவர்கள் நினைக்கமாட்டார்கள், நாம் நினைத்துகொள்ளலாம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications