சாதி எனும் வியாதி
எங்கும் எதிலும் முதல் மரியாதை பெறவேண்டும் என்பது சிலருக்கு பிறப்பிலே வரும் ஒருவித கொள்கை, சிலருக்கு வளர்பில் வருகின்றது. அது சிறிய ஊர்களில் கோவில் போன்ற பொது இடங்களில் அப்பட்டமாக தெரிகின்றது
இது இந்து ஆலயங்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவ ஆலயங்களில் கூட நடப்பதுண்டு, அது வெளியே தெரிந்தது, இன்னும் தெரியா வரலாறுகள் ஏராளம்
கிராமங்களில் இப்படியான சிக்கல்கள் வரும்பொழுது சாதியினை துணைக்கு இழுக்கின்றார்கள், விளைவு அது சாதிய மோதல்களாக உருவெடுக்கின்றன
உதாரணமாக முன்பு வடக்கன்குளத்தில் நடந்த கலவரங்களை சொல்லலாம். ஒரே மதம் ஆனால் சாதியால் கலவரம்
இப்படி அடிக்கடி தமிழகங்களில் நடப்பதுண்டு, அப்படியே வெட்டு பட்டு பலர் சாவதுமுண்டு
கண்டதேவி ஆலய தகறாறு முதல் கண்காணா தகறாறுகள் வரை ஏராளம்
உள்ளாட்சி தேர்தல் படுகொலைகளில் 99% சதவீத கொலை சாதீய கொலைகளே..
இவை எல்லாம் மனநல கோறாறுகள், தங்கள் ஆதிக்கம் பாதிக்கபடும் நிலையில் தங்களுக்கு மரியாதை கிடைக்கா பட்சத்தில் எதிர்தரப்பின் பலவீனம் எது என கவனிப்பார்கள், நீ தாழ்ந்த சாதி என சொல்லி அடிப்பார்கள்
இப்பொழுது இந்த திருப்ப்பாச்சேத்தி கிராமத்தில் வெடித்திருக்கின்றது. இருவர் பலி ஆறுபேர் உயிருக்கு போராடுகின்றார்கள்
இது இந்த சாதியினை அந்த சாதி வெட்டுகின்றான் என பரவிவிடும் ஆபத்து இருப்பதால் தமிழகம் முழுக்க கனத்த பாதுகாப்பும் பதற்றமும் தொற்றிவிட்டது
கிராமத்து கோவில்கள் அக்கிராமத்து காவல் தெய்வங்களுக்கானவை, அம்மக்களை காக்கும் தெய்வங்களுக்காக அர்பணிக்கபட்டவை
ஊர் திருவிழாக்கள் நடத்தபடும் விஷயமே ஊரில் ஒற்றுமை நிலைக்க வேண்டும் என்பது, இல்லாவிட்டால் மனிதரால் அத்தெய்வங்களுக்கு ஆவதென்ன?
கிராம திருவிழாவும், அந்த தேரோட்டமும், எல்லா மக்களும் கலக்கும் உணவுபந்தியும் கடவுளுக்கானது அல்ல, மாறாக கடவுள் பெயரை சொல்லி மக்களிடையே உறவினையும் அன்பையும் வளர்ப்பது
தேரோட்ட தத்துவம், சேர்ந்து உண்ணும் தத்துவம் அதுதான்
அதுதான் அடிப்படை தத்துவம், தமிழக கிராமத்து குடும்பங்கள் இந்த கலாச்சாரத்திலே பிணைக்கபட்டிருக்கின்றது
அங்கு சாதிபெயரால் அடித்து கொள்வதெல்லாம் மிக மிக கண்டிக்கபடவேண்டிய விஷயங்கள். கிராம ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் விஷயங்கள்
அடிப்படை தத்துவங்களையே அசைத்துபார்க்கும் இந்த மாதிரி சம்பவத்திற்கு காரணமானவர்களை நிச்சயம் விட்டு வைக்க கூடாது
குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கட்டும், அத்தண்டனை சாதி திமிரெடுத்து அலைபவருக்கு பயம் கொடுக்கட்டும்
இந்த தேசத்தினையே ஆண்ட இங்கிலாந்து ராணி முன் இந்திய பிரதமர் அமர முடிகின்றது
ஆனால் இந்த அடிமை நாட்டில் நாங்கள் ஆண்ட வர்க்கம், நீ அடிமை வர்க்கம் என முட்டிகொள்வதை நினைத்தால் பரிதாபமே வருகின்றது
செத்திருப்பவன் தாழ்த்தபட்ட சாதி, கொலையாளி வேறு சாதி என்கின்றன செய்திகள்
இதனை கவனியுங்கள்
சாதியினை ஏற்படுத்தியவன் பிராமணன் என்பார்கள், அந்த வரிசைப்படி பார்த்தால் இருவருமே சூத்திரர்கள்
ஆனால் அவர்களுக்குள் யார் உயர்வானவர் என வெட்டி செத்திருக்கின்றார்கள்
ஆக வெட்டி செத்தவர்கள் இவர்கள். திராவிடர்கள் அல்லது தமிழர்கள்
கொலையாளியும் திராவிட தமிழர், செத்தவனும் திராவிட தமிழர்
ஆனால் ஏதும் சொன்னால், ஆரிய சூது ஓழிக, பிராமணன் கொலைகார பாவி, அது இது என கிளம்புவார்கள்
இங்கு பிராமணனா எனக்கு முதல் மரியாதை வேண்டும் என அரிவாள் தூக்கினான்? இல்லை. ஆனால் சாதி அவன் கொண்டுவந்தது என்பார்கள்
என்றோ ஒரு காலத்தில் யாரோ கொண்டுவந்தது அது, இவர்களுக்கு எங்கு போயிற்று புத்தி என நாம் கேட்டால் நாம் ஆரிய அடிவருடி
இதுபற்றி எல்லாம் நாம் பேச கூடாது
பிராமண கொடுமை என பொங்கும் திக, திராவிட இன்னபிற கொள்கையாளர்கள் இங்கு வருவார்களா என்றால் மாட்டார்கள், காரணம் அவர்கள் அரசியல் பிராமணரை எதிர்ப்பது
இதே நிலையில் ஒரு பிராமணன் தலித்தை கீழ்சாதி என சொல்லியிருந்தால் அவர்கள் பொங்குவதே வேறுவகை
ஆனால் இப்பொழுது கொலையே விழுந்தாலும் கனத்த அமைதி, ஏன் என்றால் வாக்கு அரசியல் அப்படி
இந்த தமிழ்தேசியவாதிகளாவது வருவார்களா என்றால் அவர்களின் ஒரே கொள்கை ஈழத்திற்கு தீவெட்டி தூக்குவது மற்றபடி தமிழனை தமிழன் கொன்றால் சிக்கலே இல்லை
ஆளாளுக்கு எல்லாம் சந்தர்ப்ப பிழைப்புவாதம் என்றான பின் சாதிகளை ஒழிப்பது யார்? கண்டிக்க வருவது யார்?
ஒருவருமில்லை
என்றோ எதற்கோ தொடங்கி வைக்கபட்ட சாதியினை காலம் மாறினாலும் விடமாட்டோம் என்பதெல்லாம் மனநல சிகிச்சைக்கு அனுப்பபட வேண்டிய விஷயங்கள்
காலத்திற்கு ஏற்றபடி உடை மாறுகின்றது, உணவு மாறுகின்றது, கல்வி மாறுகின்றது, விவசாயம் முதல் போக்குவரத்து , மருத்துவம் என என்னென்னவோ மாறுகின்றது
ஆனால் சாதிமட்டும் மாறாது என தமிழகம் சொல்லிகொண்டிருப்பது பெரும் கொடுமையிலும் கொடுமை
மாறும் உலகில் மாறாத விஷயம் நோய்கள், அவைகள் தான் புதுபுது வடிவில் வருகின்றன, அப்படி மாறும் தமிழகத்தில் மாறா விஷயம் இந்த சாதி எனும் வியாதி
இறந்த இருவருக்கும் ஆழ்ந்த அஞ்சலி, திருபாச்சேத்தி கிராமம் இந்த இருவரையும் சாதி ஒழிப்பிற்கு பலியான தியாகிகளாக கருதட்டும், அமைதி திரும்பட்டும்.