திராவிட குரல் செல்வனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

Image may contain: 1 person, smiling, close-up

அக்கால கட்டத்தில் அப்படி ஒரு குரலை தேடிகொண்டிருந்தார்கள், சீர்காழி போல வெண்கல குரலும் அல்லாமல், ஸ்ரீனிவாஸ் போல புல்லாங்குழல் குரலும் அல்லாமல் இடைபட்ட குரலை தேடிகொண்டிருந்தார்கள்

அக்காலம் ராமசந்திரன், சிவாஜி கணேசன் போன்றோர் உச்சத்தில் இருந்தாலும் சில இளைஞர்கள் வந்துகொண்டிருந்த காலமது, அவர்களுக்காக தேடிகொண்டிருந்தார்கள்.

அப்பக்கமோ அந்த இளைஞன் பொறியில் படிப்பினை பாதியில் விட்டுவிட்டு பட்டபடிப்பில் ஓப்பேற்றிகொண்டே இசைகுழுக்களில் பாடிகொண்டிருந்தான். மிக திறமையான பாடகன் அன்றே சுசீலாவோடு சில மேடைகளில் பாடும் அளவு திறமை இருந்தது

திரையுலகின் அன்றைய ஜாம்பவான் ராமசந்திரனுக்கு சந்தேகபுத்தி அதிகம், அப்படிபட்ட நிலையில் டி.எஸ் சவுந்திரராஜன் தன்னை விட சிவாஜிக்கு நன்றாக பாடுவதாக சந்தேகம் எழுந்தது, அவரின் பிறவிகுணம் அது

அதே காலகட்டத்தில் சுசீலாவிற்கும் சவுந்தரராஜனுக்கும் பிணக்குகள் எழுந்தன‌

உடன் இருந்தவர்கள் வேறு “அண்ணே நீங்க இன்னும் இளமையாய் இருக்கின்றீர்கள், ஆனால் டிஎம்.சவுந்திரராஜன் பாடினால் கிழவன் போல் பாடல் குரல் இருக்கின்றது, உங்கள் இமேஜ் என்னாவது?” என சிரிக்காமல் சொன்னார்கள்

உடனே இதை நம்பிய ராமசந்திரன், இளவயது கதாநாயகி தேடிகொண்டிருந்த ராமசந்திரனுக்கு இளம்குரல் பாடகனும் தேவைபட்டார்கள், அந்த இளம் பாடகரும் வந்தார்

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் எனும் எஸ்பி பாலசுப்பிரமணியம் திரைக்கு வந்த கதை இப்படித்தான்

1970களில் அவர் ராமசந்திரனுக்கு பாட வருமுன் சுந்தர தெலுங்கிலும் சிலபாடல்கள் பாடியிருந்தார், எனினும் அடிமைப்பெண் படத்தில் “ஆயிரம் நிலவே வா” என்பதே அவரின் முதல் தமிழ்பாடலாயிற்று

ராமசந்திரனுக்கு மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து சில பாடல்களை பாடிய பாலசுப்பிரமணியத்திற்கு 1975க்கு பின் வாய்ப்புகள் பெருகின.

ராமசந்திரன் வாழ்வில் செய்த மிக உருப்படியான விஷயம் இதுதான்.

அரசியலுக்கு ராமசந்திரன் கிளம்ப ஏகபட்ட இளைஞர்கள் குதித்தனர், அவர்களுக்கு பாலசுப்பிரமணியம் குரல் அட்டகாசமாக பொருந்தியது

அப்பொழுது இளையராஜா யுகம் வேறு ஏற்பட மேடைபாடல் காலங்களிலே நண்பர்களாக இருந்த அவர்களுக்கு நேரம் போதா அளவு பாடல்கள் குவிந்தன‌

1980களில் உச்சம் பெற்ற எஸ்,பி.பி அதன் பின் கிட்டதட்ட 30 வருடங்கள் அதிலே நின்றார். தமிழ் மட்டுமல்ல தென்னக மொழி அனைத்திலும் பாடினார்

அன்று அவர் முகம் தெரியாது, இன்றுள்ள வசதி அன்றில்லை, வெறும் ரேடியோ மட்டுமே. கச்சேரிகள் என்ற கொடுமை தெருவுக்கு தெரு நடக்கும் காலகட்டமது

அங்கெல்லாம் எஸ்பி குரல் மட்டுமே ஒலித்தது. உண்மையில் வசீகரமான குரல் அது. வெண்கல குரலை தேனில் குழைத்து கொடுத்தது போல ஒரு ஏகாந்தம் அதில் உண்டு, இன்றுவரை உண்டு

எந்த பாடல் ஆனாலும் அதன் தன்மை மாறாமல் பாடுவதில் அவரை மிஞ்ச முடியாது. அது காதல், கடவுள், உருக்கம், துக்கம் என எதுவானாலும் அதுவாகவே உருகிபாடுவார்

தமிழகத்தில் எல்லோரும் அவர் குரலை கேட்டார்கள், அவரை தேடினார்கள்

பொதுவாக எல்லோரும் நடித்துவிட்டு பாடுவார்கள், ரஜினி கூட “அடிக்குது குளிரு..” என பயமுறுத்தினார், ஜெயலலிதா “அம்மா என்றால் அன்பு” அன்றே அரசியல் பாடினார் இன்னும் ஏராளம்

ஆனால் பாடிவிட்டு நடிக்க வந்தவர் எஸ்.பி. அவர் குரல் அவருக்கு கொடுத்த அங்கீகாரம் அப்படி

உண்மையில் அற்புதமான நடிப்பு அவரிடம் இருந்தது. திருடா திருடா படத்தின் அந்த சுவாரஸ்யமான சிபிஐ அதிகாரியினை மறக்க முடியாது, இன்னும் ஏராளமான வேடங்கள்

அற்புத நடிகனும் அவருக்குள் இருந்தான் நேரம் வரும்பொழுது வெளிவந்தான்

பாடகர்களில் ஆச்சரியமானவர் எஸ்பி, அவர் முறையாக சங்கீதம் பயின்றதாக செய்தி இல்லை, பொறியில கல்லூரி கனவில்தான் வளர்ந்தார்

ஆனால் அவர் தந்தைக்கு இசைஞானம் இருந்திருக்கின்றது, அது எப்படியோ இவருக்குள் இறங்கிவிட்டது

ஆச்சரியமாக முறையே சங்கீதம் படிக்காவிட்டாலும் எந்த ராகத்திலும், எந்த தாளத்திலும் அட்டகாசமாக பாடலை இழுத்துகொண்டு போகும் வித்தை அவருக்குள் இருந்தது

சங்கராபரணம் படத்திற்காக 4 மொழிகளிலும் விருது வாங்கிய சாதனையாளர் அவர் வாங்கியது சாதாரண விஷயம் அல்ல‌

4 மொழி இசை விற்பனர்களும் ஒரு குற்றம் கண்டுபிடிக்கமுடியாதபடி அப்பாடல் இருந்தது

பிறவி கலைஞன் என சொல்லபடும் விஷயம் இதுதான்

அந்த பாடல் ஞானம் அவருக்கு எல்லா விருதுகளையும் கொடுத்தது, தேசிய விருதுகளை கொடுத்தது

40 ஆயிரம் பாடலை பாடியவர் எனும் கின்னஸ் சாதனையினையும் கொடுத்தது

கிட்டதட்ட 4 தலைமுறை நடிகர்களுக்கு பாடியிருக்கின்றார், எம்.எஸ் விஸ்வநாதன் காலமுதல் இப்பொழுதிருக்கும் இசை அமைப்பாளர் வரை 5 தலைமுறையினருடன் பணி செய்திருக்கின்றார்

சுசிலாவோடு இணைந்து பாடியது முதல் ஜாணகி, வாணி ஜெயராம் என தொடர்ந்து இன்றைய பாடகிகள் வரை பாடியிருகின்றார்

கண்ணதாசன் காலமுதல் இன்றைய இம்சை கவிஞர்கள் காலம் வரை பாடியிருகின்றார்

நிச்சயமாக இது அவருக்கு பெரும் ஆசீர்வாதம், ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரம்

பாடகராக மட்டும் கடந்து செல்லமுடியாத மனிதர் அவர். இசை அமைப்பாளர், பிண்ணணி குரலாளர், நடிகர், தயாரிப்பாளர் என ஏக முகங்கள் உண்டு

எல்லாவற்றிற்கும் மேல் கொஞ்சமும் பந்தா இல்லாத பாடகர், அவரின் பேட்டிகளிலோ நெரலை நிகழ்ச்சிகளிலோ கொஞ்சமும் ஆணவம் இருக்காது, யாரையும் புண்படுத்தும் சொற்களும் இருக்காது

ஜென்டில்மேன் என சொல்லபடும் அந்த பண்பு அவரிடம் நிரம்ப உண்டு

அந்த அற்புத பாடகனுக்கு இன்று பிறந்த நாள்

நிச்சயம் தமிழ் திரையுலகின் அற்புதமான பாடல்கள் 1970க்கு பின் கிடைத்தன, தமிழ் திரையிசையின் பொற்காலங்கள் அவை

கண்ணதாசனும், வாலியும், வைரமுத்துவும் இன்னும் சிலரும் பண்டைய இலக்கியங்களை பிழிந்து சாறு கொடுத்தனர். அந்த தேன் தமிழை தன் குரல் மூலம் உயர நிறுத்தியவர் எஸ்.பி.பி

ரஜினியின் வளர்ச்சி முதல் பலர் வளர்ச்சியில் அவருக்கும் மறைமுக பங்கு உண்டு மறுக்க முடியாது

தமிழ் திரை இசைக்கு தன் அற்புத குரலால் காலத்தை வென்ற பாடலை கொடுத்த அந்த காந்தர்வ குரல் பாடகருக்கு, திராவிட குரல் செல்வனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.