ஜூன் 5 : ஈழ முதல் போராளி சிவகுமார் நினைவுநாள்

Image may contain: 1 person, flower

அது 1974ம் ஆண்டு, தமிழர்களை சிங்கள அரசுகள் ஒடுக்க ஆரம்பித்த நேரம். வஞ்சகமாக இந்திய மலையக வம்சாவழிதமிழரில் பெரும்பான்மையினரை இந்தியாவிற்கு அனுப்பிவிட்டு (அப்பொழுது ஒரு ஈழதமிழரும் அதனை கண்டிக்கவில்லை,எதிர்க்கவில்லை என்பதுவேறுகதை ) ஈழதமிழரை குறிவைத்து காய்களை நகர்த்தியது.

இறுதியாக ஒரு திட்டத்தினை கொண்டுவந்தது. அது சிறிமாவோ பண்டாரநாயக அரசு, ஒரு யானைகுட்டியை கொடுத்து கச்சதீவை வாங்கியர் (அதாவது கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கபட்டபொழுது இந்திராவுக்கு இவர் ஒரு யானைகுட்டி பரிசளித்தார்) என சிங்களர்களால் கொண்டாடபட்ட சிறீமாவோ ஒரு கடும் கட்டுப்பாடு

அதாவது இடஒதுக்கீடு எனும் முறையை ஒரு சட்டம் மூலம் கொண்டுவந்தார் அதன்பெயர் தரப்படுத்துதல்.

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் நமது மாநிலத்தில் 95% மதிப்பெண்பெற்ற உயர்சாதி மாணவனுக்கு கிடைக்கும் உயர்படிப்பும் அரசு வேலையும் 65% எடுத்த தாழ்த்தபட்டமாணவனுக்கு கிடைக்கின்றதல்வா?

அதேதான் அங்கே தரபடுத்துதல், உயர்வகுப்பு மாணவன் நிலையில் ஈழமாணவர்களும், தாழ்த்தபட்ட வகுப்பில் சிங்கள மாணவர்களும் வையுங்கள் அதேதான், புரிந்திருக்கும்.

நமது நாடு வித்தியாசமான அரசியல், உயர்வகுப்பினர் யாரும் கலவரம் செய்யவில்லை, ஆனால் ஈழமக்கள் கல்வியை உயர்வாய் கருதுபவர்கள் பொங்கிவிட்டார்கள்.

சொல்லபோனால் ஈழபிரச்சினை பெரும் திருப்பமாக இங்குதான் மாறிற்று, மாணவர்கள் போராட இறங்க, அரசியல்வாதிகள் தீ மூட்டினார்கள்.

தங்களுக்கு பிடிக்காத தமிழ்தலைவர்களை துரோகிகள் என காட்டிகொடுத்தார்கள், இன்றுவரை துரோகிகள் வரிசை நீண்டுகொண்டே இருக்கின்றது. கலைஞர் கூட துரோகியாகிவிட்டார்

மாணவர்கள் கூட்டமைப்பு ஆயுதம் தாங்க தீர்மானித்தது, சிவகுமாரனும் அதில் ஒருவர்.

அப்படி புறப்பட்ட மாணவர்களில் ஒருவர்தான் சிவகுமாரன், முதல் போராளி நிச்சயம் அவர்தான்.

நமது மதிப்பெண்கள் குறைக்கபட்டுவிட்டன, இனி எதிர்காலமில்லை என அரசியல்வாதிகள் முழக்கமிடும் கூட்டத்தில் எல்லாம் அவன் முன்னணியில் இருந்தான்,

சிங்களனோடு பேசும் தமிழர்கள் துரோகிகள் என்பதை குறித்துகொண்டான், அவர்கள் கைகாட்டிய திசையில் ஆல்பர்ட்துரையப்பா இருந்தார், அவர் அப்போது யாழ்பாண மேயர்.

அவரை குறிவைத்தார் சிவகுமாரன், அவரது வாகனத்திற்கு குண்டுவைத்தார், ஆனால் உயிர்தப்பினார் துரையப்பா,(பின்னாளில் அவர் பிரபாகரனால் கொல்லபட்டார்)

ஆனால் ஈழத்தில் தமீழத்திற்காய் முதலில் வெடித்தகுண்டு இதுதான்.

அதன்பின் காவல்துறையின் தீவிரசோதனையில் அகப்பட்டு அனுராதாபுரம் சிறையில் அடைக்கபட்டார், ஒரு பைசா குறையாமல் சிவகுமாரனின் தாய் தாலியை விற்று கொடுத்த பணத்தில் ஒரு தமிழ் வக்கீல், கவனிக்கவும் தாலிவிற்ற பணத்தில் தமிழ்வக்கீல் வாதாடி ஜாமீனில் வெளிவந்தார் சிவகுமாரன்.

ஆம் போராளிக்கும் பணம் வாங்கிகொண்டு வாதாடிய தமிழ் வழக்கறிஞர்கள் அங்கு இருந்திருகின்றார்கள்.

அப்பொழுதுதான் 1974 யாழ்பாண உலகதமிழ்மாநாடு நடைபெற்றது, சிங்கள அரசு ஒரு தமிழ்பேச்சாளருக்கு தடைவிதித்திருந்தது, சீமான் போன்ற ஒரு மாதிரியான பேச்சாளர் அவர், அவரை மேடையில் ஏற்ற போலிஸ் தடை விதித்திருந்தது..

ஆனால் அவர் மேடையேறினார், அங்கேயே கைதுசெய்ய நினைத்த போலீசுக்கும் மக்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டு கலவரமாக மாறியது.

பெரும் கலவரம் அங்கு துப்பாக்கிசூட்டில் முடிந்தது, 11 பேர் பலியாகி இருந்தார்கள். துரதிருஷ்டவசமாக‌ மின்கம்பி அறுந்து விழுந்து செத்தவர்களும் இதில் உண்டு, சிங்களம் வசமாக மாட்டி கொண்டது

துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டவர் அமைச்சர் சந்திரசேகர. மாநாட்டு பந்தலிலே அமைச்சரை கொல்வேன் என சூளுரைத்தவர் சிவகுமாரன்.

அமைச்சர் மீதான எல்லா கொலைமுயற்சியும் தோல்வியில் முடிந்தது, அமைச்சருக்குஆயுள் கெட்டி.

ஆனாலும் இளைஞர்களை திரட்டி போராடிகொண்டிருந்தார் சிவகுமாரன், சிங்கள அரசின் உளவாளியாக யாழ்பாணத்தில் இருந்த நடராஜா என்பவரை கொல்லும் திட்டத்தில் இருந்த சிவகுமாரனை, நடராஜனை உலவவிட்டு சுற்றிவளைத்தது போலீஸ்.

ஒருமுறை சிக்கி அனுபவித்த சித்திரவதைகளை எண்ணிய சிவகுமாரன், இம்முறை சயனைடு கடித்து உயிர்விட்டார்.

ஈழ இளைஞர்களிடையே ஒரு எழுச்சி ஏற்பட்டது, ஏன் ஈழவரலாற்றிலே முதல்முறையாக பெண்களும் சுடுகாடுவரை சென்று அஞ்சலி செலுத்தினர்.

ஈழத்தின் முதல் விடுதலை குண்டும் அவன் வீசியது, முதல் தற்கொலை போராளியும் அவனே.

அதன்பின் நடந்ததெல்லாம் உலகம் அறிந்தவை.

ஆனால் தமிழக தமிழர் தற்போது அறிபவை ஒன்றே ஒன்றுதான். ஈழம் என்றால் பிரபாகரன், போராட்டம் என்றால் பிரபாகரன்.

இடஒதுக்கீடு எனும் தரபடுத்ததுதல் சட்டமும், கல்வி இல்லை என்றால் வாழ்கை இல்லை எனும் பயமுறுத்தலும் அவனை போராளி ஆக்கிற்று.

இந்த சலசலப்பு இந்தியாவிலும் எதிரொலித்தது.
பெரும்பான்மை சமூகம் அடிமட்டத்திலும், சிறுபான்மை சமூகம் ஆளும் வர்க்கத்திலும் இருந்து வர்க்கபேதம் அதிகரிக்கும்பொழுது இட ஒதுக்கீடு தவிர்க்கமுடியாதது

இந்திய மாநிலங்களில் அது இல்லையா? என சிறீமாவோ கேட்ட கேள்விக்கு இந்தியா பதில்கூறமுடியவில்லை.
இடஒதுக்கீடு இல்லாமல் இந்தியாவில் எந்தமாநிலத்தில் ஆட்சிசெய்யமுடியும்? வாக்கு வங்கியின் ஆதாரமே அதுதானே. ஜனநாயக ஆட்சிதான் ஆனால் மெஜாரிட்டி வோட்டுவங்கி இருக்கும் இடம்தானே அரசியலுக்கு முக்கியம்.

ஆனால் திறமைக்குத்தான் முக்கியம் என சொல்லி, ? அதிக மதிப்பெண் எடுத்தவனுக்குத்தான் முன்னுரிமை என ஈழமாணவர் அமைப்புகள் கேட்டது எக்காலத்திலும் தவறாகாது.

மக்களாட்சியின் பெரும் முரண் இது

சிவகுமாரன் சாவினை தொடர்ந்து பெரும் கலவரம் வெடித்தது, மாணவர்கள்பால் ஈழமக்களிடையே அனுதாபம் தோன்றிற்று இனகலவரங்கள் வெடித்தன‌

ஒருநாடும் எட்டிபார்க்காத நிலையில்தான் இந்தியா கொஞ்சம் மனிதாபிமானத்தோடு களமிறங்கிற்று..

கொழும்பு கலவரத்தை காரணமாக கொண்டு களமிறங்கி ஆடிபார்த்தது, அது இந்திரா படுகொலையாலும், ஜெயவர்த்தனேவின் ராஜதந்திரத்தாலும், பிரேமதாசாவின் நரித்தனத்தினாலும் வெளியேறிற்று.

இன்று என்னவெல்லாமோ நடந்து முடிந்துவிட்டது.

ஆனால் ஈழபோராட்டத்தை முதலில் ஆயுதபோராட்டமாக துணிவுடன் தொடங்கியர் இந்த பொன்.சிவகுமாரன்.
அந்தோ பரிதாபம், ஈழத்திற்காக போராடுகின்றோம், களமாடுகின்றோம் என கத்தி கத்தி முஷ்டிமடக்கும் யாரும் அவனை நினைவுகூறவில்லை.

ஈகிகள் என ராஜிவ்கொலையாளிமுதல் சாஸ்திரிபவன் முன்னால் இறந்த முத்துக்குமார் வரை நினைவு கூறுபவர்கள், முதல் தற்கொலை போராளியான இவரை , குட்டிமணி குழுவை, உமா மகேஸ்வரனை, சபாரத்தினத்தை எல்லாம் அம்னீசியா நோயாளிகளாக மறந்துவிடுவதும் வேடிக்கை,

இப்படி எத்தனையோ பெரும் தியாகிகள், போராளிகள் அங்கு உண்டு, இவர்களை எல்லாம் மறைத்துவிட்டு நாங்கள் மட்டும் தான் என இறுதிவரை சொன்னவர்கள் புலிகள், இவர்களை போன்றவர்களுக்காக ஒரு தீக்குச்சி கூட புலிகள் கொளுத்தவில்லை

பிரபாகரனின் ஒருவிதமான சிறுபிள்ளைத்தனமான ஹீரோயிச கொள்கை அது, தான் மட்டும்தான், என் சொல் கேட்டவர்கள் மட்டும் போராளிகள், தமிழகத்தில் அது மட்டும்தான் தொடர்ந்தது

பிரபாகரனுக்காய் செத்தவர்கள்தான் மாவீரர்கள் போராளிகள் என்பது பிற்காலத்தில் உருவான பச்சை பொய், பொன் சிவகுமாரன் சாகும்பொழுது பிரகாரன் குட்டிமணி கும்பலில் துப்பாக்கி துடைக்கும் வேலையில்தான் இருந்தார்.

இவர்கள் எல்லாம் ஈழத்திற்காய் அல்லாமல் காதல்தோல்வியிலோ அல்லது கடன் தொல்லையிலா செத்தார்கள்?

இன்று ஜூன் 5 அந்த மாவீரனின் நினைவுநாள்.

இதை எல்லாம் நினைத்துபார்த்து அவனை நினைவுகூறகூட யாருமில்லை என்பதுதான் உண்மையான ஈழ சோகம்.

சுருக்கமாக சொன்னால் இன்றுதான் 1974ல் ஈழம் புதுபோராட்டத்துடன் களமிறங்க பெண்கள் கூட சிவகுமாரனின் சாம்பலில் சத்தியம் செய்துகொண்டிருந்தார்கள்,

ஆனால் பிரபாரனுக்காய் செத்தவர்கள்தான் “போராளிகள்”,பிரபாகரனை ஆதரித்தவர்கள்தான் “இன‌உணர்வாளார்கள்”, இப்படித்தான் ஈழவரலாறு இப்பொழுது தமிழகத்தில் திருத்தி எழுதபடுகின்றது.

உண்மையான ஈழஎழுச்சி இந்த நாளில்தான் தொடங்கியது . பின்பு பற்றி எரிந்தது, பல குழுக்கள் உருவாயின, பின்பு புலிகள் எல்லோரையும் அடக்கி தானும் அழிந்தனர், ஈழபோராட்டம் முற்றுபெற்றது