வாழ்த்திய வாழ்த்திகொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி

வாழ்த்திய வாழ்த்திகொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி, ஓடிபோன ஒரு அகதிக்கு இத்தனை பேர் வாழ்த்துவது என்பது நெகிழ்ச்சியான விஷயம். நன்றிகள்

உண்மையில் இன்று பிறந்தநாள் என்பதே எல்லோரும் வாழ்த்திய பின்புதான் நினைவுக்கு வந்தது, காரணம் வேறு ஒன்றுமில்லை

இவனுக்கு வரவு வரும்பொழுதெல்லாம் செலவும் வரட்டும் என்பது இறைவன் எமக்கு எழுதிய விதி, சில நேரம் வரவு வருவதற்கு முன்பே செலவுக்கு கணக்கினை அவன் வைத்திருப்பான்

அது பணம் என்றால் தாங்கலாம், உறவென்றால்?

மகன் கைவிரலை பிடிக்கும் நேரம், தந்தை இதுகாலம் நான் பிடித்திருந்த கையினை மெல்ல அவிழ்க்கின்றார்

அவருக்கு உடல்நிலை மோசமாகிகொண்டே இருக்கின்றது , வரும் செய்திகள் ஒன்றும் சரியானவை அல்ல‌

அறிவு பல தத்துவங்களை சொன்னாலும் மனதிற்கு புரியவே இல்லை, அது அதன் இயல்பில் கலங்கிகொண்டே இருகின்றது

அந்த மனிதர் வித்தியாசமான பிறப்பு. தர்மனும் துரியோதரனும் ஒரு சேர்ந்து பிறந்த வினோத குடும்பத்தில் பிறந்தார்

ஒரு சகோதரன் ஆறுதல் என்றால் இன்னும் சிலர் நேர் எதிர். மொத்தத்தில் அவரை வாழவும் விடவில்லை சாகவும் விடவில்லை

சண்டாளர்கள் அவரை யானையினை காட்டிலிருந்து பிடித்து வந்து அடித்து சித்திரவதை செய்து அடக்க பழகுவது போல சித்திரவதை செய்தார்கள், அவர் கதறுவார் துடிப்பார், அந்த சண்டாளர்களுக்கோ அக்குரலை கேட்டால்தான் தூக்கம் வரும்

அதை எல்லாம் அருகிருந்து பார்த்திருக்கின்றேன், இன்றுவரை நினைவிருக்கின்றது

தந்தை இல்லா மகனாக அவருக்கு ஆதறுவுமில்லை, அடைக்கலமுமில்லை, அந்த நரகத்திலே அவர் வாழ்வு இருந்தாக வேண்டிய கட்டாயம்

“எளியவனாய் பிறந்தாலும் இளையவனாய் பிறவாதே” எனும் பழமொழி அவர் பட்ட பாட்டில் அன்றே விளங்கிற்று

“உடன்பிறந்தே கொல்லும் நோய்” என்பது அவரோடு பிறந்தவர்கள் விஷயத்தில் உண்மையாயிற்று

வாழ்வில் சகோதர‌ துரோகம் என்றால் என்ன என்பதை அவரை தவிர யாரும் அப்படி உணர்ந்திருக்க முடியாது

அவரோ அவருக்கான ஒரே மருந்து குடி என சரணடைந்தார், அப்படி ஒரு குடியினை யாரும் குடித்திருக்க முடியாது, ஆயினும் ஏதோ ஒரு சக்தி அவரை காத்து வந்தது

கிட்டதட்ட பாகுபலியில் அந்த தேவசேனா அரக்கன் பல்வாள் தேவனிடம் என்ன பாடுபட்டாளோ அதேதான், ஆனாலும் மீண்டு வந்தார்

அவர் கதையினை நல்ல எழுத்தாளான் எழுதுவாயின் கள்ளிகாட்டு இதிகாசத்தினை விட அட்டகாசமான மிக உருக்கமான கதை கிடைக்கும்

நிச்சயம் அந்த மனிதர் அறிவாளி சந்தேகமில்லை, தகுந்த வாய்ப்பும் ஆதரவும் கிடைத்திருந்தால் பெரும் உயரம் தொட்டிருப்பார், அரசியல், பத்திரிகை, வரலாறு என எல்லா விஷயங்களையும் எமக்கு கற்றுகொடுத்தது அவர்தான்

இவ்வளவிற்கும் அவர் படித்தவர் அல்ல, இளம் வயதில் ஒரு கடையில் இருந்தபொழுது பக்கத்து பழைய பேப்பர் கடையில் அவர் படித்த விஷயங்களாம், தூங்காமல் வாசித்த காலங்கள் உண்டு என்பார்.

வாசிப்பு அவருக்கு அப்படி பிடித்திருக்கின்றது, அதன் அருகிலே பராரி கோலத்தில் இருந்து அவ்வளவு தகவல்களை திரட்டியிருக்கின்றார்

நன்றாக குடித்துவிட்டால் அவை எல்லாம் அப்படி கொட்டும், கேட்க கேட்க வந்துகொண்டே இருக்கும். குடி இல்லாவிட்டால் கனத்த அமைதி மட்டுமே குடிகொள்ளும்

முறையான கல்வியும் அட அது இல்லாவிட்டால் நல்ல அரவணைப்பு இருந்திருந்தாலும் சுடர்விட்டிருப்பார், 

ஆனால் சண்டாள பாவிகள் அவரை படுத்திய பாடு அவர் வாழ்வினை திசைமாற்றிற்று

அந்த கிராமத்து வரப்புகளிலே ஒரு ஏக்கத்தோடு அவரின் வாழ்வு தொலைந்து போயிற்று, தன் மகனை அந்த நரகத்திலிருந்து விடபட வைத்துவிட்டோம் என்ற ஆறுதலை தவிர அவருக்கு சந்தோஷம் ஏதுமில்லை

ஆனானபட்ட அவதாரங்களே இவ்வுலகில் நிரந்தரமாக வாழமுடியாது எனும்பொழுது அவர் என்ன செய்துவிட முடியும்

எனினும் மானிடம் மருத்துவம் என்ன முயற்சிக்க முடியுமோ அவ்வளவு முயற்சிகள் நடக்கின்றது, அவ்வளவுதான் மானிட பிறவிகள் செய்துவிட முடியும்

ஒரு பக்கம் பிறந்த மகன் இன்னொரு பக்கம் கை நழுவிகொண்டிருக்கும் தந்தை என தொலைதூரத்தில் இருந்து ஏக குழப்பமும் குமுறலும் கலந்த நிலை

மலேசிய நாட்டு மரங்களில் முட்டி அழுவதை விட வேறு ஒன்றும் செய்யமுடியாது

அப்படிபட்ட நிலையில் உங்களின் வாழ்த்து பெரும் ஆறுதல், வாழ்வில் எந்நிலையிலும் உங்கள் அனைவரின் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் கடன் பட்டிருக்கின்றேன்

இருக்கும் கலக்கத்தோடு, உங்களுக்கெல்லாம் என்ன கைமாறு செய்யபோகின்றேன் என்ற பெரும் கலக்கம் ஏற்பட்டிருக்கின்றது

“கடன்பட்டார் நெஞ்சம் போல” என்பது இந்நிலைதான், அந்த நிலையில் இருந்து கொண்டு கை கூப்பி உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லிகொண்டிருக்கின்றேன்