பொங்கிவருது காவேரி
எத்தனை வாரியங்கள், எத்தனை போராட்டங்கள், அரசியல் செய்தாலும் காவேரி சிக்கலை தீர்க்கும் சக்தி வருண பகவான் என்பவரிடம் மட்டுமே இருக்கின்றது
ஆடிமாத காவேரி என்பது எப்படி இருக்கும் என்பதை சில வருடங்களுக்கு பின் இப்பொழுதுதான் காண முடிகின்றது, கல்லணை திறக்கபட இருக்கின்றது
நீண்ட காலத்திற்கு பின் ஆடிமாத புதுவெள்ளத்தில் ஆடிபெருக்கு கொண்டாட பட இருக்கின்றது.
காவேரி பெருகி வருவது மனதிற்கு நிறைவான செய்தி, காவேரி கரைவாழ் மக்களுக்கெல்லாம் வாழ்த்துக்கள்
ஊரில் இருக்கும்பொழுதே அதை உணரமுடிந்தது, ஆம் நீண்ட நாட்களுக்கு பின் ஆனி ஆடி சாரலை அனுபவிக்க முடிந்தது
ஆனி ஆடி சாரல் என்பது மிக மிக சுவாரஸ்யமான சுகம், கன்னியாகுமரி மாவட்டத்தின் வரம் அது, கேரளா தொடங்கி மும்பை வரை, ஏன் இமயமலை தொடரெல்லாம் கொட்டி தீர்க்கும் மழை கன்னியாகுமரி பகுதிகளில் மட்டும் ஒருவித அமைதி மழையாக பெய்யும்
அந்த சாரலுக்கே நல்ல மிளகு முதல் பல பொருட்கள் விளையும் என்பார்கள்
அந்த சுகந்தம் கன்னியாகுமரியினை ஒட்டிய நெல்லை பகுதிகளிலும் தெரியும், இம்முறை ஓரளவு அந்த சுகந்தம் கிட்டியது
ஆடிமாதம் என்பது தமிழக தெய்வங்களுக்கானது, அதனால்தான் என்னமோ நதிகளும் பெருக்கெடுத்து ஓடிவரும்
எல்லா ஆறுகளும் பெருக்கெடுத்து ஓடும் மாதம் என்பதாலேயே தென்னகம் முழுக்க தெய்வங்களை தேடுவார்களோ என்னமோ?
காவேரி பொங்கிவருவது மனதை நிறைக்கும் காட்சி
காவேரி போலவே ஆடிமாதம் பெருக வேண்டிய நதி வைகை, ஆனால் அது ஏனோ மகா அமைதியாக இருக்கின்றது