1987ல் ராஜிவ் காந்தி இதே நாளில் கொழும்பில் …

Image may contain: 1 person

1987ல் ராஜிவ் காந்தி இதே நாளில் கொழும்பு சென்றிருந்தார், ஈழவிவகாரத்தில் இந்தியா ஒரு தீர்வினை கொடுத்துவிட வேண்டும் என்ற வேகம் அவரிடம் இருந்தது

அதற்கு காரணம் அதற்கு முன்பு நடந்த நிகழ்வுகள்.

புலிகளை நம்புவதற்கில்லை, வடமராட்சியில் சிங்களன் சுற்றி அடித்துகொண்டிருந்தான் , தமிழர்கள் உணவு மருந்து இன்றி சிக்கிகொண்டனர், பெரும் தொகை மக்கள் சாகும் நேரம்,

புலிகளின் முடிவு நெருங்கிகொண்டிருந்தது, இனி புலிகளால் சிங்களனை வெல்லமுடியாது என்ற உண்மை தெரிந்துகொண்டிருந்தது, ஏராளமான மக்கள் உணவின்றி தவித்தபொழுது, முதலில் ராஜிவ் உணவுபொருள் கப்பலைத்தான் அனுப்பினார்

இலங்கை திருப்பி அனுப்பியது, அந்த கோபத்தில்தான் இந்திய விமானபடை விமானங்கள் அத்துமீறி நுழைந்து வடமராட்சியில் உணவுபொருளை வீசின, அது கூட பரவாயிலை அதற்கு துணையாக ஏவுகனைகளுடன் இந்திய மிக் விமானங்கள் பறந்தபொழுது கொழும்பு அலறிற்று

ஆம் அதனை சிங்களன் தடுத்திருந்தால் அன்றே இந்திய இலங்கை போர் வெடித்திருக்கும், பணிந்தது இலங்கை

அதன் பின் இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது, புலிகள் முரண்டு பிடித்தார்கள், பின் சில சலுகைகளுக்காய் மவுனமானார்கள்

ஆனால் இந்திய தலையீடு அவர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, அதே நேரம் சிங்களனை முழுக்க வெல்லவும் அவர்களுக்கு முடியவில்லை, ஆனால் மக்கள் செத்துகொண்டே இருந்தார்கள்

உலகம் அதனை பற்றி கவலைபட்டது, புலிகளுக்கோ துளியும் கவலை இல்லை

பிரபாகரன் பெரும் திட்டத்தோடு கொஞ்சம் ஒதுங்கினார், அவர் மனதில் இது என்ன ஒப்பந்தம்? நமக்கு கிடைக்கும் வரை லாபம், பின் ஒரு சுபதினத்தில் சண்டையினை தொடங்கலாம் என தந்திரமாய் ஒதுங்கினார், எந்த முடிவிற்கும் வரும் நபரல்ல அவர்.

சிங்கள தரப்போ அலறிகொண்டிருந்தது, இந்தியா தன் போர்விமானங்களை காட்டி தங்களை வலுகட்டாயமாக அடிமைபடுத்தியதாக பொங்கியது

அதிலும் அர்த்தம் இருந்தது, வடமராட்சியில் இந்தியா களமிறங்காவிட்டால் 1987லே பிரபாகரன் கதை முடிந்திருக்கும் முள்ளிவாய்க்கால் போல ஒரு அழிவு நடந்து 30 வருடம் ஆகியிருக்கும்

இந்த வெறியில் சில ராணுவ வீரர்கள் கொலைதிட்டம் தீட்டினார்கள், நம் நாட்டு விவகாரத்தில் தலையிடும் இந்த ராஜிவினை கொன்றால் என்ன?

பெரும் சதி இருக்கலாம், ஆனால் வெளிவந்த விவரம் இதுதான்

விஜமுனி விஜதா ரோகனா எனும் கடற்படை வீரன் அதற்கு தயாரானான், திட்டம் வகுக்கபட்டது

ராஜிவ் அணிவகுப்பில் வரும்பொழுது அவரை கொல்லவேண்டும், ஆனால் அந்த அணிவகுப்பில் தோட்டா இல்லாத துப்பாக்கிதான் கொடுப்பார்கள், சுட முடியாது. மற்ற இடத்திலும் முடியாது. கடும் பாதுகாப்பில் வருவார் ராஜிவ் காந்தி

அவருக்கு சீக்கிய, காஷ்மீரிய இன்னும் பல இயக்கங்கள் குறிவைத்திருப்பதால் மற்ற வகையில் நெருங்க முடியாது, ஒரே வழி அணிவகுப்பில் போட்டு தள்ளுவது, ஆனால் தோட்டா இல்லை என்ன செய்ய?

தோட்டா இல்லாவிட்டால் பரவாயில்லை, துப்பாக்கி முனையில் கத்தி இருக்கின்றது, விஜமுனி சொன்னான்

“நான் அடிக்கின்றேன் அவர் கீழே விழுவார், மூவரும் சேர்ந்து துப்பாக்கி முனை கத்தியால் கிழித்துவிடலாம்”

அப்படி அணிவகுப்பில் நின்றார்கள், இதே நாளில் ராஜிவிற்கு ராணுவ மரியாதை கொடுக்கபட்டது, அவரும் நடந்து சென்று மரியாதையினை ஏற்றுகொண்டிருந்தார்

விஜயமுனி தயாரானான், அவர் அருகில் வரவும் திட்டபடி துப்பாக்கி பின்புறத்தால் அடித்தான், ஆனால் நிழல் கண்டு தப்பினார் ராஜிவ் அடி பலமாக இல்லை

எல்லோரும் பார்த்துகொண்டிருக்க இதற்கு மேல் தாங்காது என்பதால் உடனே சிங்கள வீரர்கள் அவனை பிடித்தனர், திட்டம் பிசகிய அதிர்ச்சியில் மற்ற இரு வீரர்கள் தங்களை காட்டிகொள்ளவில்லை

பெரும் அதிர்ச்சி அலைகளை உலகம் முழுக்க இது கிளப்பியது, பாரத பிரதமரை சிங்களன் அடிப்பதா? என இந்தியாவே ஆர்பரித்தது

இனி இந்தியா இலங்கையின் சோலியினை முடித்துவிடும், இன்றே படையெடுப்பு உறுதி என்றெல்லாம் செய்திகள் வந்தன.

ஆனால் ராஜிவ் நிதானமாக இருந்தார், இதனை பெரிதுபடுத்தவேண்டாம் என சொல்லிவிட்டு ஒப்பந்ததை நிறைவேற்றிவிட்டு வந்துவிட்டார்

அவரின் பெருந்தன்மை அது, சிங்கள அரசின் ஒப்புதலின்றி இது நடக்காது என அவருக்கும் தெரியும், என்ன செய்வது? சர்வதேச அரசியல் அப்படித்தான்

ஈழதமிழர்களுக்காக சிங்களனிடம் தன் உயிரை பணயம் வைக்கும் அளவிற்கு சென்ற ராஜிவ்காந்திதான், வட மராட்சியில் புலிகளையும் தமிழ் மக்களையும் காத்ததற்காக ஒரு சிங்களனிடம் உயிர்தப்பிய ராஜிவ்தான் பின் புலிகளால் கொல்லபட்டார்

புலிகளின் நன்றிகடன் அப்படி இருந்திருக்கின்றது

இன்று அந்த நாள், புலிகளிடம் சாவதற்காக‌ விஜமுனியிடமிருந்து அவர் உயிர்தப்பிய நாள்.

சரி அந்த விஜமுனி என்ன ஆனான்?

சிங்களன் அவரை கொண்டாடினான், வீரமும் மானமும் உள்ள சிங்களபரம்பரை என அவனுக்கு பட்டம் கொடுத்தார்கள், தேர்தலில் வென்று எம்பியாக எல்லாம் இருந்தான், இன்னும் இருக்கின்றான்

அவனை எல்லாம் புலிகள் கொல்லமாட்டார்கள், எந்த ஈழ தமிழனும் ஒன்றும் சொல்லவும் மாட்டான்

ஏன் ஈழதமிழனுக்கு உதவிக்கு வருகின்றாய் என கொலைவரை சென்ற விஜமுனி சிங்களன் ஹீரோவாக இருப்பான்

ஆனால் ஈழதமிழருக்கு உதவியாய் சென்ற ராஜிவ் இப்பொழுது இல்லை, கொன்றது யார்? சாட்சாத் ஈழத்தவர்

விசித்திரமான சிக்கல் இலங்கையில் இந்தியாவிற்கு

ஆம் எங்கள் போராட்டத்தை கெடுத்தது இந்தியா என ஈழத்தவரும், 1987லே புலிகளை ஒழித்திருப்போம், படை அனுப்பி கெடுத்தது இந்தியா என சிங்களனும் ஒருசேர கத்திகொண்டே இருந்தார்கள்

அது எப்படி ஒரு தேசம் இரு இனங்களுக்கும் எதிரியாக முடியும்? ஆனால் இந்தியா அப்படி ஆனது

பின் என்னவெல்லாமோ நடந்து, நாசமாய் போங்கள் என இந்தியா ஒதுங்கியது, அதன் பின் இந்தியா எங்கள் விரோதி என சொல்லிகொண்ட இருவரும் தங்களுக்குள் மோதி புலிகள் அழிந்தனர்.

ஈழமக்கள் துயரம் இன்னும் தொடர்கின்றது, எந்த உரிமைக்காக போராட கிளம்பினார்களோ, அதில் ஒரு உரிமையும் அவர்கள் பெற்றுவிடவில்லை மாறாக இருந்த உரிமைகளும் பறிகொடுத்து அபலகளாய் நிற்கின்றார்கள்.

இங்கே விவரமறியா செம்மறியாட்டு மந்தைகள் கலைஞர் இனதுரோகி என சொல்லிகொண்டிருக்கின்றன‌

1987ல் அமைதிபடை அனுப்பும்பொழுது ராஜிவோடு கைகோர்த்துநின்ற ராமசந்திரன் இனதுரோகி இல்லையாம்

ஆனால் அமைதிபடையினை எதிர்த்த கலைஞர் இன துரோகியாம்

அமைதிபடை சண்டையிட்ட காலங்களில் ராஜிவோடு கூட்டணிக்கு காவல் இருந்த ஜெயா ஈழத்தாயாம்

ஆனால் விபிசிங்கிடம் சொல்லி அமைதிபடையினை மீட்டு அதை வரவேற்கமாட்டேன் என இந்திய அரசியல் சாசனத்தை மீறிய கலைஞர் இனதுரோகியாம்

செம்மறியாடுகளுக்கு என்று அறிவு இருந்தது, ஆந்தை கூட்டத்திற்கு அலறலை தவிர என்ன தெரியும்?

ஆக 1987 ஜூலை 28ல் விஜயமுனி எனும் சிங்களன் செய்ய தவறியதை 1991 மே 21ல் செய்து முடித்தான் பிரபாகரன்

ஆக அவர்கள் இலங்கையர்களாக இருந்திருக்கின்றார்கள், இங்குள்ள ஆந்தை கூட்டத்திற்குத்தான் தேசபற்று கொஞ்சமுமில்லை