இலங்கை ஒரு சொப்பன சுந்தரி

Image may contain: sky, cloud and natureஒரு நாடு இருந்தால் இலங்கை போல சொப்பன சுந்தரியாக இருக்க வேண்டும், ஒரு இனம் இருந்தால் சிங்களை போல தந்திரமாக இருக்க வேண்டும்

தன்னை யாரெல்லாம் பயன்படுத்த நினைகின்றார்களோ அவர்களிடம் சிக்கியும் கொள்ளாமல் அதே நேரம் உதவ வருபவர்களின் எதிரிகளையும் உள்ளேவிட்டு ஒரு போட்டியினை உண்டாக்கி அது பெரும் அனுகூலம் ஏராளம்

சில அரபு நாடுகளை போல அது அமெரிக்க அடிமை ஆகவுமில்லை, அதே நேரம் ஆதரவில்லா அனாதையாக ஆகிவிடவும் இல்லை

மிக நுட்பமான தந்திரம்

இந்தியாவும் அமெரிக்காவும் தங்களை வளைக்க பார்த்த நேரத்தில் அமெரிக்க உதவிகளை பெற்றார்கள், இந்தியா அங்கு தூண்டிவிட்ட பயங்கரவாதத்தை இந்தியாவினை கொண்டே அழித்தார்கள்

இந்தியாவினையும் அந்நாளைய இந்திய ஆதரவு புலிகளையும் மோதவிட்டு இரு எதிரிகளையும் சமாளித்த அட்டகாச தந்திரம் சிங்களருடையது

இந்தியா எந்த புலிகளை வைத்து தன்னை பயம்காட்டியதோ அந்த புலிகளை இந்தியாவுடன் மோதவைத்து, இந்தியாவினை பிரித்து பின் புலிகளையும் அழித்தாகிவிட்டது

புலிகளின் மடத்தனமும், பிரேமதாசாவின் தந்திரமும் அதற்கு துணைபோயின, ராஜபக்சேயின் முரட்டுதனம் வெற்றியினை கொடுத்தது

தன் கையினை குத்திய ஆயுதமாக புலிகள் இருப்பினும் அவர்கள் இல்லா நிலையில் இந்திய பிடி இலங்கையில் தளர்ந்தது

வழக்கமாக அமெரிக்கா, இந்தியா என ஆட்டம் ஆடிய இலங்கை பின்பு சீனாவினையும் களத்தில் இறக்கியது

இப்பொழுது மூன்று நாடுகளையும் லாவகமாக கையாண்டு வசூலை அள்ளி குவிகின்றது

முன்பெல்லாம் “இந்தியா நான் சொல்வதை கேட்கின்றாயா? இல்லை புலிகளிடம் கரம் கோர்கட்டுமா?” என்றால் அடங்கும் இலங்கை

இப்பொழுதோ “இத்தனை கோடி கொடு” என பகிரங்கமாக கேட்கின்றது

இந்தியாவிற்கும் வேறு வழி இல்லை, யோசித்தால் சீனாவோ அமெரிக்காவோ உள்ளே புகுந்துவிடும்

இதனால் இலங்கையில் வீடு அமைத்தல், மருத்துவமனை கட்டுதல், விமான நிலையம் அமைத்தல் என கடும் சேவையில் இந்தியா இறங்கிவிட்டது

ஆயினும் சீனாவிடம் வசூலிக்கவும் இலங்கை தவறவில்லை, இந்தியாவினை காட்டி சீனாவிடமும் ஆட்டையினை போடுகின்றது

இதுபற்றி இந்தியா கேட்டால் “அண்ணே எங்க நாடு சிங்கப்பூர் ஆயிருக்கும், போராளிகளை நீங்க வளர்த்து நாசமாக்க்கீட்டீங்க‌

நீங்க அழிச்ச இலங்கைய நீங்களே உருவாக்கணும், சீனா உங்க அளவுக்கு எங்களை அழிக்கவில்லை” என செந்தில் ஸ்டைலில் சொல்லிவிட்டு நகர்கின்றது

இப்பொழுது மாத்தலையில் இந்தியா விமான நிலையம் அமைக்க பல நூறு கோடிகளை கொட்டும் நிலையில் சீனா வலிய வந்து 2 ஆயிரம் கோடி இலங்கைக்கு நன்கொடை என தட்டில் வைத்து நீட்டுகின்றது

மொத்தத்தில் இலங்கைக்கு காசுமேல் காசு வந்து கொட்டும் நேரமிது, பண மழை அல்ல, அதில் அடை மழை

நடப்பதை அமெரிக்காவும் பார்த்துகொண்டிருக்கின்றது அவர்களையும் எப்படி சமாளிப்பது என்பது இலங்கைக்கு தெரியும்

நஷ்டம் வராதாபடி அட்டகாசமாக சமாளிப்பார்கள்

உலக அரசியல் கால்பந்தில் யாருக்கும் சிக்காமல் அட்டகாசமாக பந்தை கடத்தி கொண்டிருப்பது சிங்களம், சந்தேகமின்றி சொல்லலாம்

யோசித்து பாருங்கள்

சிங்கள இனம் சீனா, இந்தியா என வல்லரசுகளை மிக நுட்பமாக கையாண்டு தன்னை வளர்க்கின்றது

தமிழகமும் பாஜக காங்கிரஸ் எனும் பெரும் கட்சிகளை கையாண்டு தன்னை இப்படி வளர்க்கத்தான் செய்யலாம்

ஆனால் இங்கே சுயநலம் மிகுந்திருக்கின்றது, அறிவு பின்னால் சென்றுவிடுகின்றது, சில நேரங்களில் இல்லவே இல்லை

இரு எதிரிகள் தன்னை விழுங்க வரும்பொழுது அவர்கள் இருவரையும் எப்படி பாவித்து தனக்கு தேவையானதை பெற்று கொள்ள வேண்டும் எனும் ராஜதந்திரத்தில் எங்கோ சென்றுவிட்டது இலங்கை தீவு

அருகிருக்கும் தமிழகத்திற்கு அப்படி ஒரு திட்டமே இல்லை,

ஆனால் தமிழக தலைவர்கள் தந்திரமாக பாஜக காங்கிரஸ் எனும் இருகட்சிகளிடமிருந்தும் தங்களுக்கு தேவையானதை பெற்றுவிடுகின்றார்கள் என்பது வேறு விஷயம்

இன்றைய தேதியில் ராஜதந்திரத்தில் ஊறியது சிங்களமா தமிழினிமா என்றால் நிச்சயம் சிங்களமே

“அறிவு அற்றம் காக்கும் கருவி” என வள்ளுவன் அவர்களுக்காகத்தான் எழுதி இருக்கின்றான்