கலைஞர் : பெரும் சகாப்தம் ஒன்று முடிந்துவிட்டது

Image may contain: 1 person, smiling, text

தமிழக அரசியலில் மட்டும் அல்ல, இந்திய அரசியலிலே பெரும் சகாப்தம் ஒன்று முடிந்துவிட்டது

பலநூறு ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய சக்திகளை நொறுக்கி, பாட்டாளிகளின் குரலாக ஒலித்த அந்த குரல் நின்றுவிட்டது

அடிதட்டு மக்களை எல்லாம் ஏற்றிவிட்ட ஏணி ஒன்று சரிந்துவிட்டது, ஏராளமானோரை கரை சேர்த்த தோணி உடைந்துவிட்டது

அறியாமை நீக்க, மான உணர்வூட்ட, அடிமைதளை களைய, தமிழர் தன் நிலை அறிய நீண்ட பயணம் செய்த கால்கள் இன்று ஒய்வுக்கு சென்றுவிட்டது

சிந்தனை கலங்குகின்றது, எழுத்து நடுங்குகின்றது, கணிணியெங்கும் கண்ணீர் கொட்டுகின்றது

இவ்வளவு காலம் நாம் அமைதியாய் இருந்தோம் அவர் நமக்கெல்லாம் காவலாய் இருந்தார், நாம் உறங்கினோம் ஆடினோம், மகிந்தோம் சுமைகளை அவர் சுமந்தார், விழித்திருந்தார்

இன்று கண்ணீரையும், சுமைகளையும் நமக்கு தந்துவிட்டு அவர் உறங்க சென்றுவிட்டார்

நிம்மதியினை நாம் வைத்துகொண்டு சஞ்சலங்களை எல்லாம் அவரிடம் விட்டிருந்தோம், இப்போது நிம்மதியினை அவர் எடுத்துவிட்டு சஞ்சலத்தையும் அழுகையினையும் நம்மிடம் கொடுத்துவிட்டார்

சில சாவுகளில் அழுதால் மனம் ஆறும், இது ஆழ அழுதாலும் தீர கூடிய சோகமா?

8 கோடி மக்களும் அனாதைகளாக ஆகிவிட்டது போல் தோன்றுகின்றது, அந்த செய்தியிலே மனம் நிலைகுத்திவிட்டது

கண் முழுக்க கலைஞரே நிற்கின்றார், நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கின்றார்

பசுக்கள் அம்மா எனவும், காகங்கள் க்க்கா எனவும், குயில் குக்கூ என ஒரே மொழியில் அழுவது போல தமிழகமெங்கும் கலைஞர் கருணாநிதி என்ற வார்த்தையே கண்ணீரோடு ஒலித்துகொண்டிருக்கின்றது

திடீரென தமிழகம் கடலில் மூழ்கிவிட்டதை போல ஒரு மயக்கம் வருகின்றது, அடுத்தது என்ன என்பதே எங்கும் எதிரொலிக்கின்றது

கலைஞரின் இடத்தை இன்னொரு தனிமனிதன் நிரப்ப முடியாது, 2கோடி திமுக தொண்டர்களும் அணுக்களாக நிறைந்தால் புதிய கலைஞர் உருவாவார்

மேல்நாட்டில் ஒரு பழமொழி உண்டு, சிக்கலான நேரங்களில் இந்த இடத்தில் இயேசு இருந்தால் என்ன செய்வார்? என அவர்களுக்குள் கேட்பார்கள்

இனி திமுக, இந்த இடத்தில் கலைஞர் இருந்தால் என்ன செய்வார் என கேட்டு தன் இயக்கத்தை நடத்தும்

சிறிய பூசனிகொடி பெரும் காய்களை கொடுப்பது போல சக்திக்கு மீறிய சாதனையினை செய்தவர் அவர்

எதுவும் சாத்தியம் என்ற நம்பிக்கையினை விட்டு சென்றவர் அவர்

என் அருமை திமுக நண்பர்களே

காற்றில் கலந்துவிட்ட அவரின் கொள்கைகளை நாம் ஏற்றுகொள்வோம், அண்ணாவின் இதயத்தை கலைஞர் இரவல் வாங்கினார்

நாமோ கலைஞர் இதயத்தை இரவல் வாங்குவோம்

பெரும் புயல்களை காக்கும் கப்பல் போலவும், பெரும் இடிகளை தாங்கி நிற்கும் இடிதாங்கி போலவும் நம் மனம் வலுபெறட்டும்

அருமை நண்பர்களே

இவ்வளவு நாளும் போரிட்டோம், கலைஞர் கட்டளையிட்டார்

இவ்வளவு நாளும் நாம் ஆட கலைஞர் எனும் மேடையும் தாளமும் இருந்தது

இனி நாம் மகா எச்சரிக்கையாக இருக்க இந்த காவேரி வாசலிலே உறுதிஏற்போம், அந்த மனிதனின் ஆன்மா அதில்தான் சாந்தி அடையும்

தமிழரை காப்பது தன் கடமை என அவர் காத்து நின்றார், அவரை எடுப்பது தன் கடமை என மரணம் எடுத்தது, இனி அவரை ஏற்றுகொள்வது மண் என அதுவும் தன் கடமையினை செய்யும்

நாமும் நம் கடமையினை செய்வோம், அவர் வழியில் தமிழகத்தை காப்போம்

அவரின் பிறப்பு சாதாரணமாயிருந்தது, இதோ அவரின் இறப்புக்கு தேசமே வந்து வணங்குகின்றது என்றால் அவர் மாபெரும் சரித்திரம் அன்றி வேறென்ன?

தனக்காக வாழ்ந்திருந்தால் சராசரி மனிதனாக செத்திருப்பார், தமிழனத்திற்கு வாழ்ந்ததால் , பாட்டாளிகளுக்கு ஏணியாய் கேணியாய் இருந்ததால் அவரின் சாவு தேசம் கண்ணீர்விட்டு அழும் சரித்திர சாவாயிற்று

அவனால் வாழ்வு பெற்ற எல்லோரும் அழுவோம், வாருங்கள்

ஏ மங்கையரே பரம்பரை சொத்தில் உஙளுக்கு பங்கு கொடுக்க சட்டமியற்றியவன் அவன், கட்சியிலும் அரசு பணியிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தவன் அவன், அவனுக்காக அழுங்கள்

ஏ பாட்டாளிகளே, உழவன் முதல் கைரிக்சா இழுப்போர் வரை எல்லோரையும் வாழ வைத்தானே அவனுக்காய் அழுங்கள்

ஏ பத்திரிகை சமூகமே, உங்களுக்கு இலக்கணமாய் வாழ்ந்தானே அவனுக்காய் அழுங்கள்

ஏ சினிமா கூட்டமே, கூத்தாடிகள் என இருந்த உங்களை பெருவாழ்வு வாழவைத்து உங்களுக்கும் அரசியல் ஆசையினை கொடுத்தானே அவனுக்காய் அழுங்கள்

ஏ இலக்கியவாதிகளே உங்கள் ஒவ்வொருவரையும் அறிந்து வைத்து பாராட்டினானே அவனுக்காய் அழுங்கள்

மாணவ கூட்டமே, அரசு துறையினரே, அவரின் காப்பீடு திட்டத்தால் உயிர்காக்க பெற்றோரே அவருக்காய் அழுங்கள்

ஏ சிறுபான்மை கூட்டமே, உங்களுக்கு அடைக்கலமும் பாதுகாவலுமாய் இருந்தானே அவனுக்காய் அழுங்கள்

ஏ அரசியல்வாதிகளே அரை நூற்றாண்டு காலம் அவனை கொஞ்சியும் அவனை கல்லேறிந்துமே அரசியல் நடத்தினீர்கள், அவனாலே அரசியலில் நின்றீர்கள், அவன் இரண்டையும் சரிசமமாக எடுத்துகொண்டு உங்களை வாழ்த்தினானே அவனுக்காய் அழுங்கள்

அழுவோம், மனதின் அடியிலிருந்து பெரும் குரலெடுத்து அழுவோம், பொங்கும் காவேரி தோற்கும் வரை அழுவோம்

நாம் ஒருபக்கம் அழ, தமிழ்தாய் தன் கடைசிமகனையும் இழந்துவிட்டு அழுதுகொண்டிருக்கின்றாள், அவளை கட்டி அணைத்து அழுவோம்

கலைஞரின் எழுத்தும் அவரால் உருவான கட்டங்களும் சிலைகளும் அழுகின்றன, குமரியில் கண்ணீர் வடிக்கும் வள்ளுவன் சிலையால் கடல் மட்டம் அதிகரிக்கலாம்

அந்த மனிதனுக்காக எல்லோரும் அழுகின்றார்கள.

அலெக்ஸாண்டரை இழந்த வாள் போல, நெப்போலியனை இழந்த குதிரை போல அழுது கொண்டிருக்கின்றது அவரின் பேனா

துயரத்தில் அழும் கண்ணீர் வீணாகாது

அசோகரின் கண்ணீர் உலகை மாற்றிற்று, கண்ணகியின் கண்ணீர் அநியாய ஆட்சியினை தூக்கி எறிந்ததது

மார்க்ஸ் விட்ட கண்ணீர் தொழிலாளருக்காய் விடிந்தது

கலைஞருக்காய் நாம் அழும் இந்த பேரழுகை தமிழகதை காத்து புது சரித்திரத்தை உருவாக்கும்

அவரை புரிந்து கொண்டோர் எல்லாம் இப்பொழுது அழுவோம், புரிந்து கொள்ளாதோர் இனி புரிந்து அழுவார்கள்

இயேசுவுக்கு பின் இன்னொரு இயேசு இல்லை ஆனால் அவர் கொள்கை நிலைத்தது, புத்தனுக்கு பின் இன்னொரு புத்தன் இல்லை ஆனால் அவன் வரலாற்றில் நின்றான்

காந்திக்கு பின் இன்னொரு காந்தி இல்லை ஆனால் அவரின் சித்தாந்தம் நிலைத்துவிட்டது

கலைஞருக்கு பின் இன்னொரு கலைஞர் இல்லை, ஆனால் அவரின் இடம் அழியா இடமாயிற்று.

உமது காலத்தில் வாழ்ந்ததற்காய் பெருமைபடுகின்றோம்,

அந்த பெருமையில் எம் காலத்தில் நாம் பார்த்த மாபெரும் தலைவனை நெஞ்சம் நிறைந்து, கண்களும் நிறைந்து, அந்த கைக்கு முத்தமிட்டு அனுப்பி வைக்கின்றோம்

என்ன இருந்தாலும் முக்கால் நூற்றாண்டு காலம் எங்களை கட்டிபோட்டவன் அல்லவா, அதற்காக கொஞ்ச நாள் அழுதுகொள்கின்றோம்

அந்த நன்றி கண்ணீரை தவிர இப்போதைக்கு கொடுக்க எங்களிடம் என்ன உண்டு?

கம்பன் தசரதன் மடிந்தபொழுது அழுதான் அல்லவா? அப்படி அழுது கொண்டிருக்கின்றோம்

“நந்தா விளக்கனைய நாயகனே நானிலத்தோர்
தந்தாய் தனி அறத்தின் தாயே தயாநிதியே
எந்தாய் இகல்வேந்தர் ஏறே இறந்தனையோ”

என அந்த கம்பனின் தமிழில் பாடி அரற்றிகொண்டிருக்கின்றோம்

இதுவரை எமக்காக சுமந்த சுமைகளை இனி எம்மை சுமக்க சொல்லிவிட்டு செல்லும் செல்லும் கலைஞரே , நீர் அமைதியாய் ஓய்வெடும்

தமிழகம் உம் வழியில் வாழ்வாங்கு வாழ்கின்றது உம் கொள்கையால் தளைத்து நிற்கின்றது என்பதை வங்க கடல் அலை உமது காதில் சொல்லி கொண்டே இருக்கும்.

அந்த கரகரத்த குரல் எங்கள் காதில் ஒலித்துகொண்டே இருக்கும், உன் நினைவுகளை சொல்லிகொண்டே இருக்கும்